Latest News

September 25, 2016

எழுக தமிழ் எட்டப்பர்களை இனம்காட்டியது
by admin - 0

எழுக தமிழ் எட்டப்பர்களை இனம்காட்டியது 


 
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக ஒரு மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியை இன்று தமிழர் தாயகம் கண்டிருக்கின்றது. 

தியாகி திலீபனின் 29 ஆண்டு நினைவேந்தல் வார காலப் பகுதியில் இந்த மக்கள் எழுச்சி நிகழ்ந்திருப்பது கவனிப்புக்கு உரியது. 

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரான இந்த ஏழாண்டுகளில் இத்தகைய ஒரு மாபெரும் மக்கள் எழுச்சிக்கான வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததற்கு காரணம்,   தமிழர் தாயகப் பிரதேசங்கள் அதி தீவிர இராணுவக் கண்காணிப்புக்குள் இருந்தமையும், மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களின் சர்வாதிகார நடவடிக்கைகளுமே ஆகும். 



கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்களிப்பின் மூலம் இத்தகைய சர்வாதிகார ஆட்சி அப்புறப்படுத்தப்பட்ட பின்னரும்   நல்லாட்சி அரசு என்கிற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள் முன்னைய ஆட்சியாளர்கள் செய்த ஆக்கிரமிப்பையே தமிழர் பகுதிகளில் தொடர்ந்து வருகிறார்கள். 

இத்தகைய சூழலில் தமிழ் மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த  மாபெரும் எழுச்சிப் பேரணியில் பொது மக்கள், பொது அமைப்புக்கள், சங்கங்கள், மத நிறுவனங்கள், மாணவர்கள் என பலதரப்பட்டோரும் பங்கேற்று எழுச்சி முழக்கம் எழுப்பினர். 

தமிழ் மக்களின் வாக்குகளை பெருவாரியாகப் பெற்று அரசியல் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட தமிழ் அரசியல் தலைமைகளில் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்றோர் புதிய அரசை பாதுகாப்பதிலும், சிங்கள மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதிலுமே தமது முழு நேரத்தையும் செலவழித்து வருகின்றனர். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கதிரைகளை தீர்மானிக்கும் சக்திகளாக விளங்கும் இவர்கள் வெளிப்படையாகவே இந்த நகர்வுகளை செய்து வருகின்ற போதிலும், இவர்களின் பின்னால் இருந்து சிறிதரன், சரவணபவன், செல்வம்  போன்றோர் மெல்லக் கொல்லும் கிருமிகள் போன்று மக்களுக்கு தெரியாத வகையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சூசகமாக முன்னகர்த்தி வருகின்றார்கள். இவர்கள் போன்ற எட்டப்பர்களை இன்றைய எழுக தமிழ் பேரணி அப்பட்டமாகவே தோலுரித்துக் காட்டியுள்ளது. 
 


எழுக தமிழ் பேரணியானது பல்லாயிரக் கணக்கான மக்களின் பங்கு பற்றுதலுடன் எழுச்சியுடன் நடைபெற்றுவிடக் கூடாது என்பதில் அதிக விருப்பமும், கரிசனையினையும் காட்டியது அரசை விடவும் இவர்கள் தான். 

முன்பெல்லாம் மக்கள் போராட்டங்களின் போது அடக்கு முறைகளையும் கட்டுப்பாடுகளையும் கட்டவிழ்த்து விடுவது என்னவோ அரசாங்கமும், இராணுவமும் தான். 

ஆனால், இம்முறையோ மாவீரரின் தியாகத்தின் பேரால் ஈழம் வாங்கித் தருவதாக அரசியலுக்கு வந்தவர்கள் தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரம் கூட வேண்டாம் என்று   கங்கணம் கட்டிக் கொண்டு நிற்பவர்களே எம் மக்களின் விடுதலைக்கு தடையாக நிற்கிறார்கள்.

 
மேற்கு நாடுகள், இந்தியாவின் கைப்பொம்மையாக விளங்கும் இவர்கள், தமிழ் மக்களின் இன விடுதலைக்கான வாய்ப்புக்களை அடித்து நிர்மூலமாக்குவதுடன், அந்த மக்களின் எழுச்சிப் போராட்டங்களையும் இல்லாமல் செய்வதற்கான வேலைத் திட்டங்களையும் தீவிரமாக நகர்த்தி வருகின்றார்கள். 
 
 

அரசை விடவும் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் யார் யார் இருக்கின்றார்கள் என்பதை உலகுக்கே வெளிக்காட்டிய ஒரு நிகழ்வாக இன்றைய எழுக தமிழ் பதிவாகி உள்ளது. 

இந்த பேரணி சர்வதேசத்திற்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது. 

ஜனாதிபதிக்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது. 

சம்பந்தருக்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது.

சுமந்திரனுக்கு ஒரு செய்தி சொல்லியிருக்கிறது.

வடடக்கச்சி குறுநில மன்னர் சிறீதரனுக்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது.

சப்றா சராவின் உதயன் பத்திரிக்கை குழுமத்துக்கும் நல்ல பாடத்தை புகட்டி உள்ளது. 

தியாக தீபம் திலீபனின் விடுதலைப் பசி இன்னும் தீரவில்லை என்பதனை இன்றைய மக்கள் எழுச்சி எடுத்துக் காட்டியுள்ள அதே வேளை, இந்த எட்டப்பர்களின் இலக்கு பதவிக் கதிரையை நோக்கியதாக மட்டுமே உள்ளது. 

அரசாங்கம், அதிகார வர்க்கம் மட்டுமல்ல, தாம் தெரிவு செய்த அரசியல் தலைமைகள் கூட இந்த விடுதலை நெருப்பை கட்டுப்படுத்த முடியாது என்பதனை இந்த மாபெரும் எழுச்சி தெளிவாக உணர்த்தியுள்ளது. 


 
நல்லூரான் வீதியில் தன்னை உருக்கி உருக்கியே ஆகுதியாகிப் போன திலீபனின் நினைவு நாளில் இந்த எட்டப்பர்களின்  மாபெரும் சதியை தமிழ் மக்கள் வெற்றிகரமாக முறியடித்து இருக்கின்றார்கள். 

தீராத தமது விடுதலைத் தாகத்தை உலகுக்கு பறைசாற்றி இருக்கின்றார்கள். 

அந்த வகையில், இன்றைய எழுக தமிழ் எழுச்சி உலக நாடுகளின் ஈழத் தமிழர் தொடர்பிலான நிலைப்பாட்டை உடைத்தெறிந்தது மட்டுமல்லாமல், உள்ளூர் அரசியல்வாதிகளின் சதியை முறியடித்து ஈழத் தமிழரின் வரலாற்றில் முத்திரை பதித்துள்ளது.
« PREV
NEXT »

No comments