Latest News

June 12, 2016

ஆசிரியரின் பாலியல் தேவைக்கு புதிய மாணவிகள்........???
by admin - 0

வலிகாமம் கல்வி வலயத்திற்குட்டபட்ட சங்கானைக் கோட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான அங்க சேட்டைகளில் ஈடுபட்டமையால் அவரை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய வலிகாமம் வலயக் கல்வி அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகின்றது.

குறித்த ஆசிரியர் வன்னிப் பிரதேசப் பாடசாலை ஒன்றில் பணியாற்றியபோது அங்கும் இவ்வாறான சேட்டைகளில் ஈடுபட்டமையால் சங்கானைக் கோட்டப் பாடசாலைக்கு இடமாற்றப்பட்டவர். இந்தப் பாடசாலையிலும் இவர் தொடர்ந்து இவ்வாறான சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இவரது தொல்லைகள் தாங்க முடியாத மாணவிகள் இது தொடர்பாக அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து அதிபர் தனது பாடசாலையிலுள்ள ஆசிரியர்கள் சிலர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றை அமைத்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

இதன்போது மாணவிகள், குறித்த ஆசிரியர் தங்கள் அங்கங்களில் கையால் தொடுவது, தடியால் தட்டுவது, கதிரைகளை விட்டுக் கீழே இறங்கி இருக்குமாறு கூறுவது போன்று பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றார் என்று வாக்குமூலம் அளித்தனர்.

இதனையடுத்து நடவடிக்கையில் ஈடுபட்ட அதிபர், குறித்த ஆசிரியரை மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று இடைநிறுத்தியதுடன் இந்த விடயத்தை வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதனால் வலயக் கல்வி அலுவலகம் அந்த ஆசிரியரை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஆக, குறித்த ஆசிரியரின் பாலியல் இச்சைக்காக வலயக் கல்வி அலுவலகம் புதிய மாணவிகளை வழங்கவிருக்கின்றதா ?.

அசட்டுத் துணிச்சலுடன் அதிகாரிகள் செய்கின்ற இவ்வாறான நடவடிக்கைகள்தான் தவறுகள் பெருகுவதற்கு காரணமாக இருக்கின்றன.

தவறு செய்பவருக்கு எடுக்கின்ற ஒழுக்காற்று நடவடிக்கையானது அவரை திருத்துவதாக இருக்கவேண்டுமே தவிர, அவர் மேலும் மேலும் தவறுகள் செய்வதற்காக களங்களை உருவாக்கி கொடுப்பதல்ல.
எனவே, குறித்த ஆசிரியருக்கு ஆகக்குறைந்தது மூன்று மாதங்கள் சம்பளமற்ற விடுமுறை வழங்கி அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இந்த ஆசிரியரின் தவறை அம்பலப்படுத்த வேண்டும். அதன் மூலமே அவர் திருந்த வழியேற்படுவதுடன் ஏனைய ஆசிரியர்களுக்கும் இது பாடமாக அமையும்.

வலிகாமம் வலயக் கல்வி அலுவலகம் இந்தச் செயற்பாட்டை செய்யுமா? அல்லது இடமாற்றம் வழங்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
« PREV
NEXT »

No comments