ஊவா மாகாணத்திலுள்ள தோட்டங்களில் மூட்டிக்கிடக்கும் தொழிற்சாலைகளை திறந்து இளைஞர், யுவதிகளுக்கு தொழில் பயற்சிகளை வழங்கும் பேட்டைகளாக மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பதுளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நேற்று பண்டாரவளை ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பசறை, லுணுகலை போன்ற பிரதேசங்களில் வறுமைக் கோட்டிற்குள் வாழும் மக்களுக்கு சீமெந்து மற்றும் தகரம் போன்ற வளங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பான கருத்துப் பரிமாறலிலேயே மேற்படி தகவலைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவிக்கையில்;
ஊவா மாகாணத்தைப் பொறுத்தவரையில் சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகள் மூடிய நிலையில் காணப்படுகின்றன. இவை கடந்த கால ஆட்சியாளர்களால் கவனிக்கப்படாது கைவிடப்பட்ட நிலையில் ஒரு சில தொழிற்சாலைகள் உள்ள அதே வேளை ஒரு சில தொழிற்சாலைகள் கடந்த கால வன்செயல் காரணமாக உடைந்த நிலையிலும் எரிந்த நிலையிலும் காணப்படுகின்றன.
இவைகளை தொழிலமைச்சு கை யகப்படுத்தி அந்தந்த தோட்டத்தைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர் யுவதிகளை தெரிவு செய்து தொழிற் பயிற்சிகளை வழங்கி அதே தொழிற்சாலைகளில் ஆடை, ஆபரணங்கள், கைப்பணி பொருட்கள் போன்ற தொழிற் பேட்டைகள் உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்க முடியும். இதனால் இங்கிருந்து கொழும்பிற்கோ அல்லது புறநகருக்கு வேலைத் தேடிச் செல்லும் நிலைமையை முற்றாக மாற்றியமைக்க முடியும் எனவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், இவ் விடயம் தொடர்பாக பிரதமர், தொழில் அமைச்சர், பெருந்தோட்ட அமைச்சு மற்றும் இளைஞர் விவகார தொழிற் பயிற்சி அமைச்சு அதிகார சபைகளுடன் தொடர்பு கொண்டு விரைவில் ஆராயவிருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
No comments
Post a Comment