கொழும்பு நகருக்குக் கிழக்கே கிட்டத்தட்ட 35 கி.மீ. தொலைவில் இருந்த, கொஸ்கம, சாலாவ ஆகிய இடங்கள் இப்போது உலகளவில் அறியப்பட்ட இடங்களாக மாறியிருக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45 மணியளவில் சாலாவ இராணுவ உப ஆயுதக்களஞ்சியத்தில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்துத் தான் அதற்குக் காரணம்.
கொஸ்கமவை அடுத்த சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்து, இலங்கையின் வரலாற்றில் நிகழ்ந்த மோசமான வெடிவிபத்தாக அமைந்திருக்கிறது.
மூன்று தசாப்த காலப் போரைச் சந்தித்த இலங்கையில், பல்வேறு ஆயுதக் கிடங்குகளில் வெடிவிபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன. பல்வேறு ஆயுதக் களஞ்சியங்கள் புலிகளின் தாக்குதலில் அழிந்து போயிருக்கின்றன.
இன்னும் பல்வேறு பாரிய குண்டுவெடிப்புக் களும் நிகழ்ந்திருக்கின்றன. அவை எல்லாவற்றையும் தூக்கித் தின்று விடும் அளவுக்கு இந்த வெடிவிபத்து மோசமானதாக அமைந்திருக்கிறது.
மாலையில் தொடங்கிய வெடிப்புகள் மறுநாள் நண்பகல் வரை தொடர்ந்தது. வெடித்துச் சிதறிய ஆயுதக் கிடங்கின் மையப்பகுதிக்குப் பல நாட்கள் செல்ல முடியாதளவுக்கு அதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது.
இந்த ஆயுதக் கிடங்கில் அதிகளவில் கனரக ஆயுதங்களுக்கான குண்டுகள் தான் சேமிக்கப்பட்டிருந்தன. அதனால் இழப்புகளும் அதிகமாகவே ஏற்பட்டிருக்கின்றன. ஆட்டிலறிகளுக்கான குண்டுகளும், பல்குழல் பீரங்கிகளுக்காக குண்டுகளுமே அதிகளவில் இங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
தீ விபத்தினால் இவை ஒவ்வொன்றாக வெடித்தும், எரிந்தும் அழிந்து போயிருக்கின்றன. இதனால், பெருமளவிலான குண்டுகள், வெடித்துச் சிதறாமலேயே, தூக்கி வீசப்பட்டிருக்கின்றன. அவற்றுக்குள் இருந்த வெடிமருந்துகள் தீய்ந்து- கருகிப் போயிருக்கின்றன.
ஆட்டிலறி, மோட்டார் குண்டுகளை வெடிக்க வைப்பதற்காக பியூஸ்கள் இறுதி நேரத்தில் தான் பொருத்தப்படும். பாதுகாப்புக் கருதி, ஆயுதக் கிடங்குகளில் அவை பொருத்தப்படாமல் தான் வைக்கப்பட்டிருக்கும்.
ஆட்டிலறி மோட்டார் குண்டுகளைப் பயன்படுத்தும் போதே அவற்றை வெடிக்க வைக்கும் ஊக்கியான பியூஸ்களை பொருத்துவது வழக்கம். அவ்வாறு பியூஸ்களைப் பொருத்தாத விடத்து, குண்டுகளில் உள்ள வெடிமருந்துகள் எல்லாமே வெடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. தீயினால் கருகியும், தீய்ந்தும் போய்விடும்.
பொதுவாக தீ ஏற்படும் போது வெடிமருந்துகள் வெடித்துச் சிதறாது. வெடிமருந்தை வெடிக்க வைக்க வேண்டுமானால், அதற்கு டெட்ரனேற்றர் என்ற ஊக்கி அவசியம். அதுபோலத் தான், ஆட்டிலறி மோட்டார் குண்டுகளின் முனையில் இந்த பியூஸ்கள் பொருத்தப்படும். சாலாவ ஆயுதக் கிடங்கில் இருந்த பெருமளவு குண்டுகள் வெடிக்காத நிலையில், அதற்குள் இருந்த வெடிமருந்துகள் தான் சீறிப் பறந்திருக்கின்றன. அதனால் தான், இந்தக் குண்டுகள் சில கி.மீ தூரத்துக்குள் சென்று வீழ்ந்திருக்கின்றன.
இந்த ஆயுதக் கிடங்கில் இருந்த குண்டுகளின் அளவு பரிமாணங்களுடன் ஒப்பிடுகையில், இவை அனைத்தும் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியிருக்குமானால், அது பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கும். நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கும்.
குண்டுகளில் இருந்த வெடிமருந்துகள் சீறி, கருகிப் போனதால் தான் தீயும், புகையும் அதிகமாக இருந்தது. பெரியளவில் வெடிபொருட்கள் சேமிக்கப்பட்டிருந்தாலும், இங்கிருந்த ஆட்டிலறி, மோட்டார்க் குண்டுகள், மிகவும் பெரியவை என்பதாலும், சேதங்கள் அதிகளவில் ஏற்பட்டிருக்கின்றன.
போர்க்காலத்தில் இங்கு கிட்டத்தட்ட 25 ஆயிரம் தொன் வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
எனினும், இங்கிருந்த மத்திய ஆயுத தளபாடக் களஞ்சியம், 2011ஆம் ஆண்டு வியாங்கொடைக்கு மாற்றப்பட்டதாலும், ஒரு பகுதி வெடிபொருட்கள் மாதுறுஓயா, அம்பேபுஸ்ஸ இராணுவ முகாம்களுக்கு மாற்றப்பட்டதாலும், பெரியளவிலான அழிவுகளில் இருந்து சலாவ பிரதேசம் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
போர்க்காலத்தில், 25 ஆயிரம் தொன் வெடிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சூழலில் இப்படியொரு அனர்த்தம் ஏற்பட்டிருந்தால், போரின் போக்கே மாறியிருக்கலாம்.
எவ்வாறாயினும், அண்மைய வெடிவிபத்தின் போது, 9 ஆயிரம் தொன் வெடிபொருட்கள் அங்கிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. எனினும், சம்பவம் நடந்த போது எவ்வளவு வெடிபொருட்கள் இருந்தன, இதனால் ஏற்பட்ட இழப்புகளின் பெறுமதி என்ன என்ற விபரங்கள் எதையுமே இராணுவமோ அரசாங்கமோ அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
தற்போது நடத்தப்படும் விசாரணைகளின் முடிவில் தான் எல்லாமே தெரியவரும் என்கிறது அரசாங்கம்.
விபத்துக்கான காரணத்தை மட்டுமன்றி, விபத்து நடந்த போது எவ்வளவு வெடிபொருட்கள் இருந்தன, அதன் பெறுமதி என்ன என்பதைக் கூட ஒரு விசாரணைக் குழு தான் கண்டறிய வேண்டும் என்பது விந்தையான விடயம்.
ஒரு ஆயுதக் கிடங்கின் கையிருப்பு, அவற்றின் பெறுமதி என்பன தொடர்பான தகவல்கள் இராணுவத் தலைமையகத்தில் அல்லது, இராணுவத்தின் விநியோகப் பிரிவிடம் ஒருபோதும் இல்லாமல் போகாது.
அரசாங்கமும் இராணுவமும், அழிந்துபோன வெடிபொருட்களின் அளவு மற்றும் பெறுமதியை இதுவரை வெளியிடாமல் இருப்பதற்கு, அவற்றைக் கணிக்க முடியாதது தான் காரணம் என்று நம்ப முடியாதிருக்கிறது.
சில தகவல்கள், ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான வெடிபொருட்கள் அங்கு சேமிக்கப்பட்டிருந்தாக கூறியிருந்தாலும், அது சரியான கணிப்பா என்ற தெரியவில்லை.
எனினும், வெடிபொருட்களுக்கு ஏற்பட்ட அழிவுகள், ஏனைய தனியார் மற்றும் அரச சொத்துக்களுக்கு ஏற்பட்ட அழவுகள் அவற்றைத் திருத்தியமைப்பதற்கான செலவுகள் என்பனவற்றையும் சேர்த்தால், அது ஆயிரம் கோடி ரூபாவைத் தொடுவதாக இருக்கக் கூடும்.
2001இல், கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மீதான கொமாண்டோத் தாக்குதலில் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவுக்குப் பின்னர், ஒரே சம்பவத்தில் அரசபடைகளுக்கு இந்தளவு அழிவுகள் ஏற்பட்டது இதுவே முறை.
1997 இல், ஆனையிறவில் இருந்த பெரியதொரு வெடிபொருள் களஞ்சியம், அதற்குப் பின்னர், ஜெயசிக்குறு நடவடிக்கைக்காக, தாண்டிக்குளத்திலும், ஓமந்தையிலும், அமைக்கப்பட்ட வெடிபொருள் களஞ்சியங்கள், 1999 நவம்பரில், கனகராயன்குளத்தில் ஒரு பாரிய ஆயுதக் கிடங்கு என்பன புலிகளால் அழிக்கப்பட்டன.
போர் முடிவுக்கு வந்த பின்னர், 2009 ஜூனில் வவுனியாவில் 211 ஆவது பிரிகேட் தலைமையகத்தில் இருந்த வெடிபொருள் களஞ்சியமும் வெடித்துச் சிதறியது. இவையெல்லாவற்றிலும் ஏற்பட்ட இழப்புகளை விட சலாவவில் ஏற்பட்ட இழப்பு பாரியது.
ஏனென்றால், சலாவவில் இருந்தது பிரதான ஆயுத விநியோக மையம். அங்கிருந்தே போரிக்காலத்தில் எல்லாப் பகுதிகளுக்கும் விநியோகங்கள் இடம்பெற்றன.
ஆனால், புலிகளால் அழிக்கப்பட்டவை எல்லாமே, முன்னரங்க ஆயுத விநியோக மையங்கள் மட்டும் தான். அங்கு ஒரு களமுனைக்கான வெடிபொருட்கள் தான் சேமிக்கப்பட்டிருந்தன.
வெடிவிபத்து நிகழ்ந்த சலாவ இராணுவ முகாமில் தான் தொண்டர் படைகளின் தலைமையகமும் இருந்தது, அங்கிருந்த தொண்டர் படையினர் 70 ஆயிரம் பேரின் தனிப்பட்ட கோவைகளும் அழிந்து போயிருக்கின்றன.
இராணுவத்தின் ஒரு கட்டமைப்பே குலைக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், இதனை ஒரு, இராணுவத் தோல்வியாக- பாதுகாப்பு அச்சுறுத்தலாக- இராணுவத்தின் பலவீனமாக காட்டுவதற்கு அரசியல் ரீதியான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் இந்த இழப்புகள் ஏற்பட்டிருந்தால், அதன் தாக்கம் மிக அதிகமாகவே இருந்திருக்கும்.
போரில்லாத சூழலில், இந்த ஆயுதங்கள், ஒரு தற்காப்புக்காகத் தான் – முன்னெச்சரிக்கையாகத் தான் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இப்போது இவற்றை இராணுவத்தினரால் எதற்கும் பயன்படுத்த முடியாது.
இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான களம் இப்போது காலாவதியாகி விட்டது. அப்படியான நிலையில், இந்த வெடிபொருட்கள் இருந்தாலும் ஒன்று தான் இழக்கப்பட்டாலும் ஒன்று தான்.
அந்தவகையில் இந்த வெடிவிபத்து இராணுவத்தின் பலத்தை குறைத்து விட்டதாக கருத முடியாது. இராணுவத்தின் பலம் என்பது இவ்வளவு ஆயுதங்களை சேகரித்து வைத்திருப்பதை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. பொருத்தமில்லாத ஆயுதங்களை வைத்திருப்பதால் மட்டும், வலிமை பெற்ற இராணுவமாக இருக்க முடியாது.
கடல் எல்லைகளைக் கொண்டிராத ஒரு நாடு, ஆயிரம் நீர்மூழ்கிகளை வைத்திருந்தாலும் பயனில்லை. அது போலத் தான், இதுவும்.
இலங்கைப் படையினரைப் பொறுத்தவரையில், ஆட்டிலறிகளும், பல்குழல் பீரங்கிகளும் இப்போது தேவையற்ற பயனற்ற உலோகங்கள் தான். ஒரு நாட்டின் படைபலம் என்ற வகையில் இவை இருக்கின்றனவே தவிர, இவற்றை வைத்து, சண்டையிட முடியாது.
இலங்கையின் ஒரு பிரதேசத்தை வேறொருவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மட்டுமே இவற்றைப் பயன்படுத்தலாம். அதற்கான சூழல் இப்போது இல்லை.
எனவே தான் இந்த வெடிபொருட்களின் இழப்பையிட்டு இராணுவம் கவலைப்படப் போவதில்லை. ஆனால் பொருளாதார ரீதியாக ஏற்பட்ட இழப்பை சாதாரணமாக எடைபோட முடியாது.
அதேவேளை, ஆட்டிலறிகளும், பல்குழல் பீரங்கிகளும் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களை எந்தளவுக்கு பாதித்திருக்கும் என்பதை சிங்கள மக்களுக்கு அனுபவபூர்வமாக உணர வைத்திருக்கிறது இந்த வெடிவிபத்து.
அதுபோலவே, பொதுமக்கள் மத்தியில் உள்ள இராணுவ முகாம்களின் ஆபத்தை சிங்கள மக்களும் உணரும் நிலையையும் இது ஏற்படுத்தியிருக்கிறது.
வடக்கிலுள்ள மக்கள் தம் மத்தியில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று ஏன் கோருகின்றனர் என்பதை சிங்கள மக்களும் உணர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைந்திருக்கிறது
நன்றி வீரகேசரி
நன்றி வீரகேசரி
No comments
Post a Comment