Latest News

January 30, 2016

முருகன் என்றால் அரோகரா.. தலைவன் என்றால் பிரபாகரா”.. சீமானின் திருமுருகப் பெருவிழா!
by admin - 0

நாம் தமிழர் கட்சியின் வீரத் தமிழர் முன்னணி சார்பாக சீமான் தலைமையில் மதுரை, திருப்பரங்குன்றத்தில் திருமுருகப் பெருவிழா பொதுக் கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.

இதில் தலைமை ஒருக்கிணைப்பாளர்  சீமான் கையில் வேல் ஏந்தி பேரணியில் கலந்து கொண்டார்.

நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 27-01-2016 அன்று மதுரை, திருப்பரங்குன்றத்தில் முருகனைப் போற்றும் விதமாக ‘திருமுருகப் பெருவிழா’ பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.

முன்னதாக பேரணி திருப்பரங்குன்றம் கோயில் அருகேயுள்ள 16 கால் மண்டபம் அருகே தொடங்கி முருகன் கோயில்வரை நடைபெற்றது.

பறையிசை..
தாரை தப்பட்டை இதில் பறையிசை, தாரைத்தப்பட்டை முழங்க பச்சையுடை உடுத்தி ஒரு கையில் வேலையும், மறு கையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் படத்தையும் ஏந்திக் கொண்டு சென்றனர்.

முருகன் என்றால் அரோகரா.. தலைவன் என்றால் பிரபாகரா.. 
அப்போது, முருகன் என்றால் அரோகரா! தலைவன் என்றால் பிரபாகரா, வெற்றிவேல்! வீரவேல் என முழக்கங்கள் எழுப்பி ஆடிப்பாடியபடி கோயில் சன்னதியை அடைந்தனர். இது காண்போரை உணர்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்தியது.

மனைவியுடன் சீமான்..
இந்தப் பேரணியில் நாம் தமிழர் தலைமை ஒருக்கிணைப்பாளர்  சீமான் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். கையில் வேல் பிடித்து அவர் நடந்து சென்றார்.

கலை நிகழ்ச்சியுடன் பொதுக் கூட்டம்
பின்னர் பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. மதுரை கலை இலக்கியப் பண்பாட்டு பாசறை சார்பாக சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் உள்ளிட்ட தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் கூடியிருந்த மக்களை வியக்க வைத்தது. அதன்பிறகு, நடந்த ஐகோவின் ‘கருப்புக்குரல் நாடகம்’ எல்லோரையும் சாமியாட வைத்தது.

புகழ் வணக்கம்..
கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறையின் தலைவராக இருந்த தமிழ்க்கூத்தன் அவர்களுக்குப் புகழ்வணக்கம் செலுத்தி கூட்டம் தொடங்கியது.

இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளரும், குடந்தை தொகுதியின் வேட்பாளருமான மணிசெந்தில், மாநில இளைஞர் பாசறை செயலாளரும், சிங்காநல்லூர் தொகுதியின் வேட்பாளருமான பேராசிரியர் கல்யாணசுந்தரம், மாநில கலைஇலக்கியப் பண்பாட்டுப்பாசறை செயலாளர் எழுத்தாளர் வந்தியத்தேவன், மாநில வழக்கறிஞர் பாசறையைச் சேர்ந்த மதுரை சீமான், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

கூட்டத்தின் தீர்மானங்களை வீரத்தமிழர் முன்னணியின் மாநில செயலாளரான செந்தில்நாதன் சேகுவேரா வாசித்தார்.

சீமானின் மீட்சியுரை…
இறுதியாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பண்பாட்டு மீட்சியுரை நிகழ்த்தினார்.

சீமான் முகத்தில் புன்னகை…
இந்த விழாவில் சீ்மான் உற்சாகப் புன்னகையுடன் கலந்து கொண்டார். கோயிலுக்குள் சென்ற சீமான், முருகனுக்கு வேல் சாத்தினார். மேலும் பொதுக் கூட்ட மேடையில் நடந்த நிகழ்ச்சிகள் அவரை வெகுவாக கவர்ந்தன. புன்னகையையும் வரச் செய்தன.

சீமானின் ஆட்சி…
மேடையில் நடந்த நாடகத்தின் போது, சீட்டுக்காக சிலர் கூட்டணி சேர்க்கிறான், பணத்துக்காகச் சிலபேர் கூட்டணி சேர்க்கிறான், நாட்டை கொள்ளையடிக்கக் கூட்டணி சேர்க்கிறான், பிள்ளைக்குட்டிகளுக்காகவும், சின்ன வீட்டுக்காகவும், வெளிநாட்டுக்காரனுக்காகவும் கூட்டணி சேர்க்கிறான்.

ஆனால், நாம் தமிழர் கட்சிதான் கூட்டணி இல்லாமல் மக்களுக்காகத் தேர்தலில் களமாட வருகிறது.

இந்த கருப்பே சொல்லி விட்டான், 2016-ல் செந்தமிழன் சீமான் தான் தமிழகத்தை ஆளுவார் என்று சொன்ன போது சீமான் முகத்தில் புன்னகை விரிந்தோடியது.


















« PREV
NEXT »

No comments