Latest News

January 04, 2016

அறிவொளி கல்வி நிலையத்தால் 276 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறுவர் நூல் வெளியீடும் இடம்பெற்றது.
by admin - 0

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான இலவச கல்வி வழங்கி வரும் அறிவொளி கல்வி நிலையத்தால் 276 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறுவர் நூல் வெளியீடும் இடம்பெற்றது.

வவுனியா, கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றது.

யுத்தம் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்ட வன்னிப் பிரதேசத்தில் மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தும் முகமாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் கல்வி மேம்பாட்டு பிரிவால் தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கு மெல்லக் கற்றலை வழங்கும் பொருட்டு இலவச கல்வி நிலையமாக அறிவொளி கல்வி நிலையம் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் நெடுங்கேணி, சேனைப்புலவில் ஆரம்பிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து அது இன்று 9 இடங்களில் தனது இலவச கல்வியை புலம்பெயர் தமிழ் மக்களின் நிதி உதவியில் வழங்கி வருகின்றது. அந்த வகையில் இவ் நிலையத்தில் கல்வி கற்கும் 276 மாணவர்களுக்கும் இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறுவர்களின் ஆக்கங்களைத் தாங்கிய அறிவொளி என்ற நூல் வெளியீடும் இடம் பெற்றது.

அறிவொளி கல்வி நிலைய இயக்குனர் எஸ்.தவபாலன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சிவபாதம் கஜேந்திரகுமார், வவுனியா தமிழ் சங்கத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல், முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி விநாயகமூர்த்தி மற்றும் பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




« PREV
NEXT »

No comments