Latest News

November 30, 2015

" இறுதி வரை மக்களோடு மக்களாக நின்று போராடுவேன்''-தேசியத்தலைவர்
by admin - 0


விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர் தயா மோகனின் மனம் திறந்த பேட்டி 

விடுதலை புலிகளின் கிழக்கு மாகாண  கட்டளை தளபதியாகவும், புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க செல்லும் போது துப்பாக்கியை உடன் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட புலிகள் தளபதிகளில் ஒருவருமான கருணா, புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற போது கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராக பணியாற்றியவர் தயாமோகன். புலிகள் இயக்கத்தில் 20 ஆண்டு காலம் பணியாற்றியவர். 

2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் காட்டுக்குள் இருந்து ஜூன் மாதம் இஸ்லாமிய நண்பர் ஒருவர் மூலமாக கடவுச்சீட்டு எடுத்து வெளிநாட்டுக்கு சென்று தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் அந்த நாட்டு அரசின் அரவணைப்பில் வாழ்த்து வருபவர். அவரை தப்பிக்க வைத்ததற்காக அந்த இஸ்லாமிய நண்பருக்கு சிறைவாசம் கிடைத்தது. துரோகியாக மாறிப்போன கருணாவுக்கும், புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே நின்று இருவரிடமும் பேசிய வாழும் சாட்சிகளில் தயா மோகனும் ஒருவர். மாவீரர் தினத்தை ஒட்டி மனம் திறக்கிறார் தயா மோகன். 

 

கேள்வி : கருணாவின் அருகிலும், பிரபாகரனின் நேரடி தொடர்பிலும் இருந்தவர்  நீங்கள்...நேரடியாக கேள்விக்குள் செல்வோம். சமஷ்டி என்று சொல்ல கூடிய கூட்டாட்சி முறைமைக்கு பிரபாகரன் ஒப்பு கொள்ளாத காரணத்தால் தான் கருணா புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறியதாக சொல்லி இருந்தது பற்றி...?

தயா மோகன் : அது முற்றிலும் பொய். இதுபற்றி சற்று விவரமாக சொல்ல வேண்டி உள்ளது. கருணா பிரிந்து செல்வதாக அறிவித்ததற்கு முன்பே கருணா மீது பலவித குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அவற்றில் சிலது  பற்றி வெளிப்படையாக நான் சொன்னால் எமது விடுதலை போராட்டத்தை கொச்சைப் படுத்தியதாக ஆகிவிடும். அது மட்டுமல்ல அது போன்ற கருணாவின் விடயங்களை வெளிப்படுத்த வேண்டாம் என்று எம் அண்ணையே (பிரபாகரன்) எம்மிடம் சொல்லி இருப்பதால் அது பற்றி வேண்டாம். 

ஆனால் மிக முக்கியமான தவறு கருணா இயக்க பணத்தை விரயம் செய்தார் என்பதுதான். அதாவது தனது மனைவி, குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து அதன் மூலமாக இயக்க காசை விரயமாக்கினார் என்பது தான் அவர் செய்த மிக முக்கியமான தவறு. இது பற்றி அவரின் சொந்த சாரதி (கார் ஓட்டுனர்) ஒருவர் கிழக்கு மாகாண இயக்கத்தின் நிதியை கையாளும் இன்னொரு போராளியிடம் இது பற்றி கதைக்க அந்த நபர்  கம்சன் என்ற இன்னொரு போராளியிடம்  கதைக்க அந்த போராளி அதை அண்ணையிடம் (பிரபாகரனிடம்) நேரில் வந்து புகாராக தெரிவிக்கிறார். உடனே அண்ணை கருணாவுக்கு சங்கேத பாசையில் தகவல் அனுப்புகிறார். அவர் "கருணா இப்படி ஒரு புகார் வந்து இருக்கிறது. நேரில் வந்து பிரச்னையை பேசி முடிக்கவும் " என்று. அதற்கு கருணா..."கம்சனை எம்மிடம் ஒப்படையுங்கள்" என்று அண்ணைக்கு பதில் அனுப்புகிறார். 

அப்போதும் கூட அண்ணை மறுபடியும் பதில் அனுப்புகிறார் "கருணா வீண் பேச்சுக்கள் வேண்டாம் நேரில் வந்து பிரச்சனையை முடி" என்று. அதற்கு பதில் அளித்த கருணா "வர மாட்டேன்" என்று சொல்கிறார். இப்படிப்பட்ட நிலையில் கம்சனுக்கு தகவல் சொன்ன கருணாவின் சாரதி கொல்லப்படுகிறார்.  அதற்கு பிறகு கருணா தனது சொந்த ஊரை சேர்ந்த உறவுக்காரர் ஒருவர் உட்பட மூன்று பேரை அடுத்து அடுத்து கொல்கிறார். 
இதற்கு முன்னதாக நான் உட்பட 600 படை அணி வீரர்களை கருணா ஏற்கனவே அண்ணையின் பாதுகாப்புக்காக வடக்கிற்கு அனுப்பி இருந்தார். 

கருணாவுக்கும் அண்ணைக்கும் நடக்கும் இந்த வார்த்தை பரிமாற்றங்களின் போது நான் உட்பட கிழக்கு மாகாண  600 படை அணியினரும் அண்ணை உடன் தான் நிற்கிறோம். கருணாவுக்கு அளித்த தகவலையும், கருணா தனக்கு அளித்த பதிலையும் அண்ணை எங்களிடம் காண்பித்தார். 

இப்படிப்பட்ட நிலையில்தான் கருணா நேரில் வராமல், எங்கே தன்னை காட்டி கொடுத்து விடுவார்களோ என்று அச்சத்தின் பேரில் தன் சொந்த பந்தங்களை போராளிகளை கொல்ல தொடங்குகிறார். இதற்குப் பிறகுதான் அண்ணை சொன்னார்...இனி விட்டால் கருணா சொந்த படை அணியினரை கொன்று சிதைத்து விடுவார். எனவே கிழக்கில் சென்று புலிகள் இயக்கத்தை மீட்டு எடுங்கள் என்று கட்டளை இட்டார். 

இப்படி நடந்து கொண்டு இருக்க கூடிய நிலையில்தான் கருணா எம்மை தொடர்பு கொண்டு...600 படை வீரர்களோடு வடக்கில் அங்குள்ளவர்களை அடித்துவிட்டாவது கிழக்குக்கு வந்து விடுங்கள் என்று சொல்கிறார். நாங்கள் சொன்னோம் அது எப்படி முடியும் என்று...அதற்கு கருணா சொன்னார்..

ஒன்றும் இல்லை நீங்கள் அங்கிருந்து வந்து இலங்கை ராணுவத்திடம் வந்துவிடுங்கள் அவர்கள் உங்களை பத்திரமாக மீட்டு கப்பல் மூலமாக அழைத்து வந்து எம்மிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்று. எங்களுக்கு அதிர்ச்சியாகிவிட்டது...

இலங்கை ராணுவம் வழியாக வாருங்கள் என்று அவர் சொன்னதில் இருந்து கருணா இலங்கை ராணுவத்தோடு கை கோர்த்து விட்டார்..நிலைமை எல்லை மீறி போய்விட்டது என்பதை அறிந்து நடந்தவைகளை எல்லாம் , கருணா பேசியதை எல்லாம் அண்ணையிடம் காண்பித்தோம். கருணா பேசியதை நாங்கள் பதிவு செய்திருந்தோம்.   

இதற்கு பிறகுதான் அண்ணை கிழக்கை மீட்டு எடுப்பதில் தீவிரம் காண்பித்தார். அப்போதும் அவர் சொன்னார்...நீங்கள் துப்பாக்கியை நீட்டுவது உங்கள் சகோதரர்களுக்கு எதிராக. முடிந்தவரை துப்பாக்கி பிரயோகம் வேண்டாம் அவர்களை அச்சுறுத்தி கைப்பற்றுங்கள் என்றார். ஆனால்.. அந்த  சண்டையில் கிழக்கு மாகாணத்தின் 23 புலிகள் இறந்து போனார்கள். அவர்களில் பொறுப்பாளர்கள் யாரும் இல்லை, அவர்கள் போராளிகள்தான் என்று உறுதியானால் அவர்களை மாவீரர்கள் பட்டியலில் சேருங்கள் என்று சொன்னார் எமது அண்ணை. 

காலச்சூழல் காரணமாக கருணாவின் பிடியில் சிக்கிய அவர்கள் நமது சகோதரர்கள். எனவே அவர்களை மாவீரர்கள் பட்டியலில் சேருங்கள் என்று சொல்லி அவர்களை சேர்த்தார் எமது அண்ணை. 

ஆக..கருணா பிரிந்ததன் உண்மையான பின்னணி இதுதான். இதில் சமஷ்டி கோரிக்கை எங்கே வந்தது ? கருணா பிரிவதாக அறிவித்த காலத்திற்கு ஒரு ஆண்டுக்கும் முன்னரே கருணா இலங்கை ராணுவத்தின் ஆளாக ஆகியிருந்து இருக்கிறார்.

இதுபற்றி என்னை போலவே நன்கு அறிந்த கருணாவுக்கு அடுத்த பொறுப்பில் இருந்த இன்னொரு தளபதியும் உயிரோடு இருக்கிறார். வேறு ஒரு நாட்டில் அவர் தற்போது இருக்கிறார் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பெயரை நான் இப்போது குறிப்பிடவில்லை. அவரும் பாதுகாப்பாக அமர்ந்தபின் நாங்கள் இருவரும் கூட்டாக பேட்டி அளிப்போம். 

  
கேள்வி : இறுதி போரின் போது புலிகள் இயக்கம் தவறான போர் முறைகளை கையாண்டதுதான் தோல்விக்கு காரணம் என்று கருணா சொல்லி இருக்கிறாரே ?

தயா மோகன் : புலிகள் இயக்கம் பல பெரிய சமர்களை வென்ற இயக்கம். ஒட்டு மொத்த உலக நாடுகளும் எம்மீது பொறாமைப்பட்டது என்பது நீங்கள் அறியாதது அல்ல. புலிகள் இயக்கத்தை பொறுத்தவரை அதன் போர் முறை என்பது மிகவும் நுட்பமானது. ஆட்கள் குறைவு ஆனால் செயல்படும் வேகமும், முறையும் பெருத்த சேதங்களை ஏற்படுத்த கூடியது. எமது தலைவரின் உக்திகளும் போர் தந்திர முறைகளும் எவராலும் கணிக்க பட முடியாதது. 

ஆனால் எம்மை காட்டி கொடுக்க தொடங்கிய பின்னர் எமக்கு அதிலும் குறிப்பாக கருணா பிரிந்து சென்றதற்கு பிறகு எமக்கு வெடி பொருட்கள் வரும் அத்தனை வழிகளும் இலங்கை ராணுவத்திற்கு தெரிந்து போனது. எங்களிடம் ஆயுதங்கள் இருந்தும் அதற்கான வெடி மருந்துகள், தோட்டாக்கள் இல்லை. அந்த வழிகளை அனைத்தும் இலங்கை ராணுவத்திற்கு காட்டி கொடுத்து அடைக்கப்பட்டன. 

புலிகளின் உயர் மட்ட பொறுப்பாளர்களுக்கு மட்டும் தெரிந்த போர் முறைகள் இலங்கை ராணுவத்திற்கு தெரிய வந்து அதே முறையில் எமது போராளிகளை தாக்க தொடங்கினார்கள். அந்த முறைகள் கருணாவை  தவிர வேறு யாராலும் ராணுவத்திற்கு சொல்லி இருக்க முடியாது.  நாங்கள் ரகசியமாக வைத்து இருந்த அதனை விடயங்களும் இலங்கை ராணுவத்திற்கு தெரிந்து போனது. 

இலங்கை ராணுவத்தோடு இணைந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று எண்ணின. அந்த வகையில் அந்த போரில் மட்டும் நாங்கள் தோற்றுப்போனோம். ஆக...எமது தனித்துவமான போர் முறைகளை இலங்கை ராணுவத்திற்கு காட்டி கொடுத்த கருணா இப்படி சொல்வது முற்றிலும் முரணானது.

கேள்வி : புலிகள் தலைவர் பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டியது நான்தான் என்று சொல்லி இருக்கிறாரே கருணா ..

தயா மோகன் : ஆம்...எமது அண்ணையின் காலில் ஒரு கறுப்பு தழும்பு உள்ளதாகவும் அது தமிழ்நாட்டில் திண்டுக்கல்லில் பயிற்சி பெற்ற போது ஏற்பட்ட காயம் என்றும் கருணா ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறி இருந்ததை நானும் பார்த்தேன். அதை பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்தது. காரணம்...எமது அண்ணைக்கு இன்னொரு பெயர் உண்டு. கரிகாலன் என்று. காரணம் இலங்கையில் ஒரு போரின் போது ஏற்பட்ட காயம் அது. கருப்பாக தழும்பு இருந்ததால் அவருக்கு கரிகாலன் என்று பெயர். இது இயக்கத்தில் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. இதில் இருந்தே கருணா பொய் சொல்கிறார் என்பது உங்களுக்கு புரியும்.

 

கேள்வி : கருணா எதற்கு பொய் சொல்ல வேண்டும்..?

(குறுக்கிட்டு ) 

தயாமோகன் : அதை அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் அரசியல் பொறுப்பாளராக இருந்தவன்தான்...ஆனால் இனி எந்த அரசியலுக்கும் நான் செல்லப்போவது இல்லை. ஆனால்..கருணா சமீப காலமாக கொடுத்து வரும் பேட்டிகளில் புலிகள் தலைவர் பற்றியும், இயக்கம் குறித்தும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அவற்றை எமது மக்கள் கேட்டு குழப்பமடைகிறார்கள். எனவே அந்த காலகட்டங்களில் உடன் நின்றவர்களில் நானும் ஒருவன் என்பதால் எமது மக்களுக்கு தெளிவு படுத்தவே நான் முன்வந்து இந்த பேட்டியை அளிக்கிறேன். கருணா அவ்வாறு சொல்லிக்கொண்டு இருப்பதற்கான காரணம் இந்த பேட்டி மக்களிடம் சென்று சேரும்போது புரியும் என்று எண்ணுகிறேன். 

கேள்வி : சரி..நானே கேட்கிறேன் பிரபாகரன் எங்கே ?

தயா மோகன் : (பலமாக சிரித்து விட்டு) அவர் எங்கே என்ன என்றெல்லாம் இப்போது சொல்ல முடியாது. ஒன்று மட்டும் நிச்சயம் எம் அண்ணை சொன்னது இதுதான் நாட்டுக்காக இறுதி வரை மக்களோடு மக்களாக நின்று போராடுவேன். வெற்றி பெற இயலவில்லை என்றால் மாவீரர்களோடு இணைந்து விடுவேன். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

கேள்வி : மறுபடியும்  புள்ளி வைத்து பேசுகிறீர்கள். சரி உங்கள் போராட்டம் முள்ளி வாய்க்காலோடு நின்று விட்டது என்பது சரியா ?

தயா மோகன் : ஆயுத போராட்டம் மட்டுமே ஈழ தமிழர்களின் போராட்டம் என்று எண்ணுவதின் வெளிப்பாடே உங்கள் கேள்வி. அறப்போராட்டம்தான் செய்தோம். ஆயுதம் எந்த வேண்டி வந்தபோது ஆயுதம் ஏந்தினோம். 

சர்வதேச அரசியலை கண்ணுற்று பார்த்து எமது ஆயுதங்களை மௌனித்து வைத்து இருக்கிறோம் அவ்வளவே... இப்போது ராஜாங்க ரீதியான போராட்டதை நடத்தி கொண்டு இருக்கிறோம். போர்கள் ஓய்ந்து இருக்கலாம் அற வழியிலான போராட்டம் ஓயாது.
« PREV
NEXT »

No comments