அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய வடமாகாண முதலமைச்சர் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறப்பாக அமையும் என அரசியல் கைதிகள் விரும்புவதாக அரசியல் கைதிகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கையில், நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விரக்தியின் விளிம்பில் உள்ளனர். இந்நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் பலர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
சில அரசியல்வாதிகள் மத்தியில் அரசியல் கைதிகளுக்கும், பெற்றோராகிய எமக்கும் நம்பிக்கை அற்று போயுள்ளது. சில தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறையில் வைத்திருக்கவே விரும்புகின்றனர் என்ற உண்மை தெரியவருகின்றது.
இந்நிலையில் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக புதிய சிந்தனைகளை முன்வைத்து வரும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தி விடுதலைக்கு வழிவகுக்க வேண்டும் என அரசியல் கைதிகள் விரும்புகின்றனர். அதனையே பெற்றோராகிய நாமும் விரும்புகின்றோம்.
இது தொடர்பாக வடக்கு முதலமைச்சருக்கு அரசியல் கைதிகள் உத்தியோகபூர்வமாக கோரிக்கையையும் விடுக்கவுள்ளனர் என்பதுடன் அவர்களின் பெற்றோர் சார்பில் நாமும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தனர்.
No comments
Post a Comment