அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களில் கஞ்சா போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்ட போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிசார் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் உள்ள பொலிஸ் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது வீட்டிலிருந்து 1 கிலோ 80 கிராம் கஞ்சாவை (1080 கிராம்) கைப்பற்றியதுடன் வீட்டுகாரரான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரையும் கைது செய்தனர்.
இதேபோல் அக்கரைப்பற்று பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிசார் கடந்த வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று நீத்தை வயல் பிரதேசத்தில் வைத்து சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்ட போது 105 கிராம் கஞ்சாவை கைவிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்றவரை அக்கரைப்பற்று பொலிசார் மறுநாள் சனிக்கிழமை அக்கரைப்பற்று-1ஆம்பிரிவு உபதபாலக வீதியில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
No comments
Post a Comment