ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கித் தொடர்ந்து படையெடுத்து வரும் அகதிகளை தடுக்க ஹங்கேரி தனது எல்லைப் பிராந்தியத்தில் இராணுவத்தை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. அதேசமயம் டென்மார்க் குடியேற்றவாசிகள் பிரவேசிப்பதைத் தடுக்க தனது நெடுஞ்சாலையொன்றை மூடியுள்ளது.
அகதிகளை ஐரோப்பிய நாடுகளிடையே ஒதுக்கீட்டு முறைமையின் கீழ் பகிர்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விவாதித்து வருகின்ற நிலையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சேர்பியாவுடனான ஹங்கேரி எல்லையினூடாக அளவுக்கதிகமான அகதிகள் வரலாம் என அஞ்சப்படுகின்ற நிலையில், அந்த எல்லைப் பிராந்தியத்திலான காவலை அதிகரிக்கும் முகமாக பெருமளவு இராணுவத்தை அந்தப் பிராந்தியத்தில் நிலைநிறுத்த ஹங்கேரி நடவடிக்கை எடுத்துள்ளது.
அகதிகள் உட்பிரவேசிப்பதைத் தவிர்க்க அந்நாடு வேலியொன்றை அமைத்துள்ள போதும் அந்த வேலியைத் தாண்டி பெருந்தொகையான அகதிகள் அந்நாட்டிற்குள் உட்பிரவேசித்து வருகின்றனர்.
அதேசமயம் அகதிகளின் உட்பிரவேசத்தைத் தடுக்க நெடுங்சாலையொன்றை டென்மார்க் மூடியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டுப் பொலிஸார் தெரிவிக்கையில், தமது நாட்டில் புகலிடம் கோர எதிர்பார்க்காத குடியேற்றவாசிகளுக்கு, அவர்கள் சுவீடனுக்கு செல்வதற்கு வசதியாக பதிவு செய்யாமல் தமது நாட்டினூடாக சுதந்திரமாகப் பயணிக்க அனுமதியளிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் குடியேற்றவாசிகளுக்கு வரவேற்பளித்துள்ள ஐரோப்பிய நாடான ஜேர்மனிக்கான புகையிரத சேவைகளை டென்மார்க் வியாழக்கிழமை பகுதியாக மீள ஆரம்பித்து வைத்திருந்தது.
“நாங்கள் எமது நாட்டில் புகலிடம் கோராத வெளிநாட்டவர்களை தொடர்ந்து இங்கு வைத்திருக்க முடியாது" என டென்மார்க் தேசிய பொலிஸ் தலைவர் ஜென்ஸ் ஹென்றிக் ஹொஜ்ப்ஜேர்க் தெரிவித்தார்.
அதேசமயம் ஹங்கேரிக்கு செல்லும் வழியில் தாம் கிரேக்கப் பொலிஸாரால் அடித்து உதைக்கப்பட்டதாக அகதிகள் சிலர் தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Post a Comment