அரசியலமைப்பின் 19ஆவது திருத் தச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளாக கலாநிதி ஏ.டீ. ஆரியரத்ன, கலாநிதி ராதிகா குமாரசுவாமி
மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி
அஸீஸ் ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பு பேரவைக்கு ஏற்கனவே ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்று சிவில் சமூக பிரதிநிதிகளும் முன்மொழியப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ள
பாராளுமன்ற அமர்வின்போது அங்கீகாரம் பெறப்படவுள்ளது. அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள ஏழு மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முதலாவது கூட்டம் நேற்று சபாநாயகர் இல்லத்தில் நடைபெற்றது.
அரசியலமைப்பு பேரவையின் தலைவர் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் உறுப்பினர்களான பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் சம்பிக்க ரணவக்க விஜேதாச ராஜபக்ஷ எம்.ஏ. சுமந்திரன் மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோரே நேற்றைய தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
குறிப்பாக அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்படவுள்ள மூன்று சிவில் சமூக பிரதிநிதிகள் தொடர்பாகவே இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. பிரபலமான சிவில் சமூக பிரதிநிதிகளின் பெயர்கள் இந்த சந்திப்பின்போது முன்மொழியப்பட்டுள்ளன.
இதன்போதே அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளாக கலாநிதி ஏ.டீ. ஆரியரத்ன, கலாநிதி ராதிகா குமாரசுவாமி மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிப்லி அஸீஸ் ஆகியோரை முன்மொழிவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது விரைவாக அரசியலமைப்பு பே ரவையை நிறுவி சுயாதீன ஆணைக்குழுக்களை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை அரசியலமைப்பு பேரவையின் உத்தியோகபூர்வ அடுத்த கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி தனது பிரதிநிதியாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் நகர அபிவிருதி மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவை நியமித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை தனது பிரதிநிதியாக அரசயலமைப்பு பேரவைக்கு நியமித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்மந்தன் ஆகியோர் அரசியலமைப்பின் பிரகாரம் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களாக உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் தனது பிரதிநிதியாக எம்.ஏ. சுமந்திரனை நியமித்துள்ளார். சிறிய கட்சிகளின் சார்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தவகையில் அரசியலமைப்பு பேரவைக்கான ஏழு மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுவிட்டனர். இந்நிலையில் அரசியலமைப்பு பேரவைக்கு மேலும் மூன்று சிவில் சமூக பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பு பேரவையில் மொத்த 10 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். அவர்களில் 7 மக்கள் பிரதிநிதிகளும் மூன்று சிவில் சமூக பிரதிநிதிகளும் உள்ளடங்குவார்கள்.
இநநிலையிலேயே மக்கள் பிரதிநிதிகளான ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்றைய தினம் கூடி சிவில் சமூக பிரதிநிதிகளை தெரிவு செய்வது தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளனர். இதன் பின்னர் மூன்று சிவில் சமூக பிரதிநிதிகள் முன்மொழியப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பு பேரவை நிறுவப்பட்ட பின்னர் அரசியலமைப்பு பேரவையின் கீழ் வருகின்ற சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தலைவர்களும் ஆணையாளர்களும் நியமிக்கப்படுவார்கள். பொதுச் சேவை ஆணைக்குழு பொலிஸ் ஆணைக்குழு கணக்காய்வு ஆணைக்குழு மனித உரிமை ஆணைக்குழு இலஞ்ச ஊழல் ஒழிப்பு நிதி எல்லை நிர்ணய மற்றும் தேசிய பெறுகை ஆணைக்குழு என்பனவற்றுக்கு ஆணையாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அரசியலமைப்பு பேரவையினால் நியமிக்கப்படவுள்ளனர்.
ராதிகா குமாரசுவாமி
டாக்டர் ராதிகா குமாரசுவாமி ஐக்கிய நாடுகள் சபையின் பிரதி செயலாளர் நாயகமாக செயற்பட்டவர். ஆயுத மோதல்களும் சிறுவர்களும் தொடர்பான விசேட பிரதிநிதியாகவும் செயற்பட்டவர். 1953 ஆம் ஆண்டு பிறந்த டாக்டர் ராதிகா குமாரசுவாமி சட்டத்தரணி என்பதுடன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிலும் பதவி வகித்தார். ஐக்கிய நாடுகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக விசேட அறிக்கையாளராகவும் ராதிகா குமாரசுவாமி 1994 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் செயற்பட்டுள்ளார்.
கலாநிதி ஆரியரட்ன
சர்வோதய அமைப்பின் தலைவரான ஆரியரட்ன சிறந்த சமூக தலைவராக பார்க்கப்படுகின்றார். 83 வயதான ஆரியரட்ன சர்வோத அமைப்பின் ஸ்தாபகராவார். 1996 ஆம் ஆண்டு இந்தியாவின் காந்தி சமாதான விருதை வென்றவர்.
சிப்லி அஸிஸ்
அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள சிப்லி அஸிஸ் ஜனாதிபதி சட்டத்தரணி என்பதுடன் இலங்கையின் சட்டத்துறைக்கு பாரிய பங்களிப்பை செய்துள்ளார். 1995 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டுவரை சிப்லி அஸிஸ் இலங்கையின் சட்டமா அதிபராக கடமையாற்றியுள்ளார். 1988 ஆம் ஆண்டு ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார்.
No comments
Post a Comment