Latest News

July 13, 2017

ஓவியர் வீர .சந்தானம் மறைந்தார் ..
by admin - 0

ஓவியர் வீர .சந்தானம் மறைந்தார் ..


முள்ளிவாய்க்கால் நினைவு 
முற்றத்துச் சிற்பங்களின் மூலவடிவான 
ஓவியங்களை உருவாக்கிய ..
தமிழ்த்தேசிய சிந்தனையாளன் ..
தூரிகை நெருப்பு ஓவியர் வீர .சந்தானம் மூச்சுதிணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் மறைந்தார்.

தமிழின தலைவன்னு மார்தட்ட யாருக்கும் உரிமை கிடையாது!- ஓவியர் வீரசந்தானம்
🔴🔴🔴🔴
என் அடிவயிறு பத்தி எரியுது; என் இரத்தம் கொதிக்குது. நாம தோத்துட்டோம். தமிழனை நம்பவெச்சு தோற்கடிச்சுட்டாங்க. 25 வருஷங்களா சிங்களவனால் வெல்ல முடியாத புலிகளை, உலக நாடுகளோடு ஒண்ணுசேர்ந்து இந்திய ஒன்றியம் கொன்றொழித்தது.

ஒன்பது மாதப் போராட்டத்துக்குப் பிறகு உயிர் மீண்டு வந்திருக்கிறார் ஓவியர் வீரசந்தானம். தமிழ்ச் சமூகத்தின் மதிக்கத்தக்க கலை ஆளுமை.

ஒருவகையில் இது எனக்கு ரெண்டாவது பிறப்பு. மரணத்தோட பின்வாசல் வரைக்கும் போயிட்டு வந்துட்டேன். போன வருஷம் மே மாசத்துல ஒருநாள்... ஒரு கூட்டத்துல பேசிட்டு வீட்டுக்கு வரும்போதே என் உடம்பு துவள ஆரம்பிச்சிருச்சு. மறுநாள் காலையில் கடைத்தெருவுக்குக் கிளம்பும் போது, அப்படியே சுருண்டு விழுந்துட்டேன். சுத்தமா நீர் பிரியலை. நெஞ்சு வரைக்கும் ஏறி வந்திருச்சு. சளி, நெஞ்சை அடைச்சது. மூச்சுவிட முடியலை. மரணம், என் கண்ணுக்கு முன்னாடி தெரியுது. கீழே விழுந்ததுல தலையில் அடிபட்டு, மூளையில் ரத்தம் ஒழுக ஆரம்பிச்சிருச்சு. அது நின்னாதான் சிகிச்சை ஆரம்பிக்க முடியும்னு சொல்லிட்டாங்க. நினைவு இழக்க ஆரம்பிச்சுட்டேன்.

என் நீண்ட தலைமுடியையும் அடர்ந்த தாடியையும் மழிச்சிட்டாங்க. அதுலயே என் பாதி அடையாளம் போயிருச்சு. செய்தி கேள்விப்பட்டு அண்ணன் வைகோ, எம்.நடராசன், சீமான், பழ.நெடுமாறன், அய்யா வே.ஆனைமுத்து, பெ.மணியரசன்... எல்லாரும் கிளம்பி வந்துட்டாங்க. இவங்களை எல்லாம் பார்த்ததும் சிகிச்சை இன்னும் வேகமா நடந்துச்சு. இப்படித்தான் உயிர் பிழைச்சு வந்து பழைய சந்தானமா உங்க முன்னாடி நடமாடுறேன்.

மண்ணையும் மக்களையும் உயிரா நேசிக்கிற ஒரு கலைஞனை, இந்தச் சமூகம் கைவிட்டுடாதுங்கிறதுக்கு உயிர் சாட்சியா நிக்கிறேன்’’ - ஓவியர் வீரசந்தானத்தின் கண்கள் நெகிழ்ச்சியின் ஈரத்தில் மின்னுகின்றன.

மக்களுக்கான கலையையும் மண்ணுக்கான அரசியலையும் சுமந்து திரியும் இந்தக் கலைஞனுக்கு வயது 70. சமீபத்தில் இவர் வரைந்த `சகட யாழ்’, `மகர யாழ்’, `காமதேனு’ என தமிழர் அடையாள ஓவியங்கள் சுற்றிக் கிடக்கின்றன. இந்த ஓவியங்களையும் இவரது பள்ளிக்கால ஓவியங்களையும் ஒன்றுதிரட்டி, கிழக்கு கடற்கரை சாலை `தக்‌ஷன் சித்ரா’வில் காட்சிக்கு வைத்திருக்கிறார் ஓவியர் கீதா. `காமதேனு' என்ற பெயரில் வீரசந்தானத்தைப் பற்றி ஆவணப்படமும் எடுத்திருக்கிறார்.

நான் கோயில் சோற்றைத் தின்னு வளர்ந்தவன். எங்க ஊர் உப்பிலியப்பன் கோயில்ல இருந்து அஞ்சு மைல் தூரம் நடந்து போய், கும்பகோணம் ஓவியப் பள்ளியில் ஓவியம் கத்துக்கிட்டேன். என் கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு ரிலே சைக்கிள் வாங்கிக் கொடுத்த கோயில் ஈ.ஓ மீசை சீனிவாசன், நான் பசியோடு வருவேன்னு, தன் காலை உணவுல எனக்கும் பங்குவெச்ச ஓவியப் பள்ளி பிரின்சிபால் கிருஷ்ண ராவ், சென்னையில் என்னை ஒரு வருஷம் தங்கவெச்சு, மதிய உணவும் போட்டு சிற்பம் செய்யக் கத்துக்கொடுத்த என் குருநாதர் தனபால் சார், எனக்குத் திருமணம் செய்துவைத்த ஓவியர் ஆதிமூலம்... இப்படி எத்தனையோ பேரால்தான் இந்த சந்தானம் உருவானான்.

மும்பையில நெசவாளர் பணி மையத்தில் டிசைனர் வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் மூணு வேளையும் வயிறாரச் சாப்பிட்டேன். அந்த வேலையில் இருந்து நானா விருப்ப ஓய்வு கொடுத்துட்டு வெளியில் வர்ற வரைக்கும், என் வேலையை ஒருத்தனும் கைநீட்டிக் குறை சொன்னது கிடையாது. இன்னும் கொஞ்சம் நாள் இருந்திருந்தா, நான் ஐந்து மாநிலங்களுக்கும் இயக்குநர் ஆகியிருப்பேன்.

ஆனா, என் இனத்துக்காகப் போராடணும், என் மக்கள் துன்பப்படுறாங்க, அவங்களுக்காகப் போராடணும்னு விருப்ப ஓய்வு கொடுத்துட்டு வந்துட்டேன். இன்னைக்கு வரைக்கும் ஈழத்துக்கு ஆதரவா, தமிழ் இனத்துக்கு ஆதரவா எங்கே கூட்டம், போராட்டம் நடந்தாலும் நான்தான் முதல் ஆளா நின்னு குரல் கொடுத்திருக்கேன்.

ஆனால், உங்களைப் போன்றவர்கள் களத்தில் நின்று போராடி, கட்டியெழுப்பிய அந்த ஈழ ஆதரவும் இன உணர்வும் இன்றைக்கு அரசியல்வாதிகளால் தேர்தலுக்குத் தொட்டுக்கொள்ளப்படும் ஊறுகாய்போல ஆகிவிட்டதே?

என் அடிவயிறு பத்தி எரியுது; என் இரத்தம் கொதிக்குது. நாம தோத்துட்டோம். தமிழனை நம்பவெச்சு தோற்கடிச்சுட்டாங்க. தமிழனுக்கு, தனித்த கலாசாரம் இருக்கு; தொன்மையான பண்பாடு இருக்கு; வரையறுக்கப்பட்ட நிலமும் வாழ்வாங்கு வாழ்ந்த வரலாறும் இருக்கு. அதனால அவனை ஒண்ணுசேரவிடக் கூடாது. அவன் இனமான உணர்வோடு இருக்கக் கூடாதுனு இப்பவும் ஒரு கூட்டம் வேலைபார்க்குது.

அதனாலதான் 25 வருஷங்களா சிங்களவனால் வெல்ல முடியாத புலிகளை, உலக நாடுகளோடு ஒண்ணுசேர்ந்து இந்திய ஒன்றியம் கொன்றொழித்தது. இந்த விஷயத்தில் தமிழக அரசியல்வாதிகளும் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அரசியல் பண்ணிட்டாங்க. பொங்கிவந்த இன உணர்வுகள்ல மண்ணைப் போட்டுட்டாங்க. ஆனா ஒண்ணு... முத்துக்குமார், செங்கொடி போன்றோரின் தியாகம் இவங்க மனசாட்சியைக் கேள்வி கேட்கும்.

உங்கள் நண்பர்களாக இருக்கும் அரசியல்வாதிகளும் இதில் அரசியல் பண்ணிட்டாங்கனு சொல்றீங்களா?

பழ.நெடுமாறன் ஐயா, வைகோ போன்ற அரசியல்வாதிகள், பெ.மணியரசன் போன்ற சில இயக்கவாதிகள் எல்லோரும் உணர்வுபூர்வமாத்தான் இருந்தாங்க. இவங்களைத் தவிர மத்தவங்க இந்த விஷயத்தில் பெரிய அரசியல் பண்ணிட்டாங்க.

என்னைப் போன்ற தமிழீழ உணர்வாளர்களைப் பைத்தியக்காரனாக்கி துரோகம் பண்ணிட்டாங்க. நான்தான் தமிழினத்துக்குத் தலைவன்னு மார்தட்ட இங்கே யாருக்கும் உரிமை கிடையாது. மானம்கெட்ட சமூகத்தின் தலைவனா வேணும்னா அவங்க இருக்கலாம்.

இதற்கு எல்லாம் மாற்றாகத்தான் மக்கள் நலக் கூட்டணி அமைச்சிருக்கோம்’னு வைகோ சொல்றாரே?

எனக்கு மார்க்சிஸ்ட்கள் மீது மதிப்பு உண்டு. அய்யா நல்லகண்ணு, எனக்குத் தந்தை போன்றவர். அதெல்லாம் வேற. ஆனால் தமிழ் ஈழத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களாக, அணு உலைகளுக்கு ஆதரவாக இருக்கிறவர்கள் மார்க்சிஸ்ட்கள். அவர்கள் இருக்கும் மக்கள் நலக் கூட்டணியை எப்படி என்னால் ஆதரிக்க முடியும்? தன் வாழ்நாள் முழுக்க `தமிழ் ஈழம்தான் தீர்வு’ என முழங்கிக்கொண்டிருக்கும் அண்ணன் வைகோவை மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் மார்க்சிஸ்ட்கள் மடைமாற்றி வருகிறார்களோ என நான் வேதனைப்படுகிறேன்; சந்தேகப்படுகிறேன்.

விஜயகாந்த்தை தங்கள் கூட்டணிக்கு வரச் சொல்லி தி.மு.க., மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் அழைத்தனவே, இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரு கட்சித் தலைவருக்கான எந்தத் தகுதியும் கொள்கையும் இல்லாதவர் விஜயகாந்த். இவருக்காகக் காத்திருப்பதைக் காட்டிலும் மானக்கேடான செயல் வேறு ஒன்றும் இல்லை.

இளவரசன் - கோகுல்ராஜ்... இப்போ உடுமலைப்பேட்டையில் சங்கர்?

தமிழனுக்கு ஏதுங்க சாதி, மதம்? எல்லாம் இடையில் வந்தது. உடுமலைப்பேட்டையில் நடந்த சம்பவத்தை நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன். என் குலையெல்லாம் பதறுது. சாதி மாறி கல்யாணம் பண்ணிக்கிறது தமிழ்நாட்டுல ஒண்ணும் புதுசு கிடையாது. அப்போல்லாம் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பாங்க. அதுகூட அந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை பிறக்கிற வரைக்கும்தான். குழந்தை பிறந்ததும், ஒதுக்கி வெச்சவன்தான் ஓடிப்போய் முதல் ஆளா பார்ப்பான். கொலைகாரப் பாவிங்க இப்படியா வெட்டிக் கொல்வாய்ங்க.

மாவோ பயணம் செய்து அரசியல் விழிப்புஉணர்வு ஏற்படுத்தியதுபோல மனித நேயர்கள் ஒன்றுசேர்ந்து சாதி, மதத்துக்கு எதிரா பிரசாரம் பண்ணணும். இது மட்டும்தான் நீண்டகாலத் தீர்வா இருக்கும். இதுல அரசியல்வாதிகளை உள்ளே விடக் கூடாது. ஏன் இதை நான் சொல்றேன்னா... மருத்துவர் ராமதாஸ் அய்யாகிட்ட இதைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்கும்போது கருத்து சொல்லாம எழுந்து போறார். ஜெயலலிதாவும் கருணாநிதியும் இதை எதிர்த்து அறிக்கைவிடறதுக்கே தயங்குறாங்க. இது எல்லாம் கேவலம் இல்லையா? இதுக்காகவா பெரியார் பாடுபட்டார்?

முன்னர் எல்லாம் குடிப்பதை நீங்க ஆதரிப்பீர்கள்... தமிழக அரசு மூலைமுடுக்கெல்லாம் டாஸ்மாக்கைத் திறந்து ஒரு குடிகாரத் தலைமுறை உருவாகிவிட்டதே... இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் பதினைஞ்சு வயசுல குடிக்க ஆரம்பிச்சவன். நான் குடிக்காத மதுவே இல்லை. எங்க குடும்பமே குடிகாரக் குடும்பம். `சண்டி கணபதி / சவசண்டி மாணிக்கம் / கள்ளி அப்பாசாமி / கள்ளு குடிப்பதிலோர் / கனமோச சீனிவாசன்...' என என் தாத்தா சீனிவாசன் குடியைப் பற்றி ஒரு ஆசுகவி பாடினார்.

கலைஞர்களுக்கு, `குடிப்பதில் சலுகையும் அனுமதியும் தரணும்'னு நான் மருத்துவர் ராமதாஸ் அய்யாகிட்ட சொல்லியிருக்கேன். ஆனா, குடி உடல்நலத்துக்கு மட்டும் அல்ல, சமூகத்துக்கும் கெடுதலானதுங்கிற இடத்துக்கு இப்போ ...

நான் வந்திருக்கேன். எனக்கு உடம்பு சரியில்லாமப் போனதுல நான் குடிச்ச சாராயத்துக்கும் பிடித்த சிகரெட்டுக்கும் பெரிய பங்கு இருக்கு. எவ்வளவோ தலைவர்கள், அறிஞர்கள் என்னிடம் `குடிக்காதீங்க’னு சொன்னப்போ நான் கேட்கலை, பட்டதும்தான் தெரியுது.

இப்போ நான் குடிக்கிறது இல்லை. டாஸ்மாக்கை, மக்கள் இழுத்து மூடுவதில் இருந்து அடித்து நொறுக்கும் எண்ணத்துக்கு வந்திருக்காங்க. அந்த எண்ணம் தீவிரம் அடையறதுக்குள்ள அரசாங்கமே டாஸ்மாக்கை மூடணும்; தமிழினத்தைக் காப்பாத்தணும்.
« PREV
NEXT »

No comments