Latest News

December 06, 2016

60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்.. கண்ணீரில் மூழ்கியது தமிழகம்
by admin - 0

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனா எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணுவ வீரர்களின் 60 ரவுண்டு குண்டுகள் முழங்க ஜெயலலிதா உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழகம் கண்ட சிங்க பெண் தலைவர் வங்க கடல் ஓரத்தில் மீளா துயில் கொள்கிறார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் 75 நாட்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனின்றி, டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு காலமானார்.

இதையடுத்து நள்ளிரவில் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டனிலுள்ள, ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு சில சடங்குகள் செய்யப்பட்டு பிறகு, ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. காலை 4.30 மணி முதல், ஜெயலலிதாவின் உடலுக்கு காலை முதல் லட்சக்கணக்கானோர் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி மற்றும் பல மாநில முதல்வர்கள், ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மாலை 4 மணியுடன் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது நிறுத்தப்பட்டு சவப்பெட்டியில் ஜெயலலிதாவின் உடலை மூடும் நடைமுறைகள் முடிவடைந்தன. இதன்பிறகு, அண்ணா சாலை அண்ணா சிலை மற்றும் வாலாஜா சாலை வழியாக இறுதி ஊர்வலம் மெரீனா பீச் சென்றடைந்தது. அப்போது சாலையின் இரு புறமும் நின்ற லட்சக்கணக்கான மக்கள், முதல்வர் சவப்பெட்டியை நோக்கி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முதல்வர் ஓபிஎஸ் பீரங்கி வாகனத்தில் அமர்ந்திருந்த நிலையில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அணிவகுத்து நடந்து சென்றனர். ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அண்ணசாலையெங்கும் குவிந்திருந்ததால் வாகனம் மக்கள் வெள்ளத்தில் மெதுவாகவே மிதந்து சென்றது. ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் இறுதி ஊர்வலம் கண்காணிக்கப்பட்டது. சுமார் 3,000 துணை ராணுவப் படையினர் இறுதி ஊர்வலப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

மெரீனா பீச்சிலுள்ள எம்ஜிஆர் சமாதி இடத்திற்கு வாகனம் சென்றதும் சந்தன பேழைக்கு அவரது பூத உடல் மாற்றப்பட்டது. அந்த சந்தன பேழையில், ஆங்கிலம் மற்றும் தமிழில் புரட்சி தலைவரி என்று ஜெயலலிதாவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. சந்தன பேழையில் ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டதும், ஆளுநர் வித்யாசாகர் ராவ் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, முப்படை ராணுவ வீரர்கள் அவரது பூத உடலுக்கு வாத்தியக் கருவி இசைத்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதன்பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களும், முன்னாள் ஆளுநர் ரோசய்யா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ஜெயலலிதா உடலிலிருந்து தேசிய கொடி அகற்றப்பட்டது. இதன்பிறகு அந்தணர் ஒருவர் வழிகாட்ட, ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி என அழைக்கப்பட்ட, தோழி சசிகலா மற்றும் ஜெயலலிதா அண்ணன் ஜெயக்குமாரின், மகன் விவேக் ஆகியோர் இறுதி சடங்கு செய்தனர்.

இதையடுத்து, சந்தன பேழையில் வைத்து ஜெயலலிதா உடல் ஆணி அடித்து பூட்டப்பட்டது. இதையடுத்து 12 வீரர்கள் 5 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழர் நலனுக்காக தன்னையே உருக்கி வாழ்ந்த ஜீவனை பிரியா விடை கொடுத்து கண்ணீருடன் பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் அங்கிருந்து கிளம்பினர்.


« PREV
NEXT »

No comments