Latest News

October 02, 2016

பிரபாகரன் தெய்யோ… இராணுவ பெண் சிப்பாய்கள் நெகிழ்ச்சி
by admin - 0


பிரபாகரன் தெய்யோ… இராணுவ பெண் சிப்பாய்கள் நெகிழ்ச்சி

!

யாழ்ப்பாணத்தில் தற்பொழுது பனம் பழம் சீசன். தீவுப்பகுதியில் கடமையிலிருந்து விட்டு விடுமுறையில் வீடு செல்வதற்காக புறப்பட்டு வந்து யாழ்ப்பாணம் நகரத்தில் பனம் பழப்பாணி, பனாட், கருப்பட்டி, பனங்குட்டான் என்று ஆர்வத்தோடு வாங்கிக்கொண்டிருந்த பெண் இராணுவ சிப்பாய்களுடன் பேச்சுக்கொடுத்தோம்.

அவர்கள் தெறிக்க விட்டவற்றிலிருந்து ஒரு பகுதியே இது…

பிரதான வீதியிலிருந்து உள்ள பஸ்ஸே ஓடாத எட்டு பத்து கிலோமீற்றர்கள் கால் நடையாக நடந்தே வரவேண்டிய குக்கிராமங்களிலிருந்து முன்பெல்லாம் நாங்க சரியா கஸ்டப்பட்டிருக்கிறம். சுமாரா படிச்சிருந்தும் வேலையில்ல. எங்கட வாழ்க்கை எப்புடி அமையும், எப்பிடி குடும்பத்தை கொண்டு நடத்தப்போறம் என்ற பயம் வேற மனசுக்குள்ள ஓடிக்கொண்டேயிருக்கும்.

ஆனா… எங்களுக்கு பிரபாகரன் தான் தெய்யோ (தெய்வம்). இந்த தொழில், வாழ்க்கை, சந்தோசம் எல்லாமே எங்களுக்கு அவரால தான் கிடைச்சது. 
 
தெய்யோ… இல்லாட்டி இப்பயும் நாங்க ஊரில சரியா கஸ்டப்பட்டுக்கொண்டு தான் இருப்பம். இப்பயும் நெறைய புள்ளைங்க ஊரில கஸ்டப்பட்டுக்கொண்டிருக்காங்க. 

அதப்பார்க்கேக்க எங்களுக்கு தெய்யோ… பிரபாகரன் தான் நெனைப்புக்கு வரும். தெய்யோ… இருந்தா இப்ப அவையளுக்கும் ஆமியில வேலை கெடைச்சிருக்கும். 

 
ஆமியில சேர்ந்தாப்புறம் ஆரம்பத்தில எங்களுக்கு பயமாய் தான் இருந்திச்சு. ‘கொட்டியா தாக்கும் எப்பயும் உஸ்ஸாரா இருங்கன்னு’ மேலதிகாரிகள் பயமுறுத்திக்கிட்டே இருப்பாய்ங்க. அப்புறம் எங்க மேல (பெண் இராணுவ படைகள் மீது)  தாக்க வேணாம்முன்னு தெய்யோ… தன்ட கொட்டியாவுக்கு (விடுதலைப்புலிகளின் படையணிகளுக்கு) கொம்மாண்ட் (உத்தரவு) கொடுத்திருப்பதாக எங்கட மேல்மட்டத்தில பேசிச்சினம். அப்பத்தான் எங்களுக்கு உசிர் மேல நம்பிக்கையே வந்திச்சு. (தங்களுக்குள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரிக்கிறார்கள்)  

(அப்புறம் மேல சொல்லுங்க என்று கேட்கிறோம்) 

ம்… எப்பவாய்ச்சும் வீட்டில இருந்து போனில அம்மா அப்பா நங்கி தம்பின்னு பேசுவாங்க. மாசத்தில மூனு காகிதமாய்ச்சும் (கடிதம்) போடுவாங்க. ஜாக்கிரத… ஜாக்கிரதன்னு சொல்லித்தான் எழுதியிருப்பாங்க. கவலையாய்யிருக்கும். லீவுல வீட்லப்போய், ‘எங்க மேல தாக்க வேணாம்முன்னு’ பிரபாகரன் தன்ட கொட்டியாவுக்கு கொம்மாண்ட் போட்டிருப்பதாகச் சொன்னம். ஊரில எல்லாரும் ஆச்சரியப்பட்டாங்க. அதுக்கு மேல வீட்ல உசிர் பத்தி பயம் இல்லாம எல்லாரும் சந்தோசமா இருக்க ஆரம்பிச்சிட்டாங்க. 

ஆனா… பிரபாகரன் கவுரம் பிடிச்சவர். தன்ட பெண் கொட்டியாவக்கொண்டு (விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகள்) உங்கள தாக்குவினம். உஸ்ஸாரா இருங்கன்னு மேலதிகாரிகள் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. ஆனா… எங்களுக்கு அப்பிடியொரு சம்பவமே நடக்கேல்ல. 

 
(தெய்யோ… தெய்யோ தான் என்று கோரஸ்ஸாக சத்தம் போட்டு சிரிச்சுக்கொண்டு சொன்னவர்கள். சட்டென சீரியஸ் ஆகி, ஹலோ… தெய்யோ இருக்கா? என்று மறுகேள்வி கேட்டு விட்டார்கள்)

எதிர்பாராத இந்தக் கேள்வியால் அப்படியே நிலைகுலைந்து போய்விட்டோம். (அவர்களுடைய முகம் விகாரமடைவதை உணர முடிந்தது)

ஹலோ… என்ன சொல்லுங்க… தெய்யோ இன்னவா? என்று மறுபடியும் அவர்கள் குரல் கேட்டு சுதாகரித்துக்கொண்ட நாம், 

‘இருக்கிறான் என்றாலும்

இல்லைதான் என்றாலும் 

இருக்கும் அவன் மீதொரு

பயமும் - பக்தியும்’ 

எனும் பா.விஜய்யின் கவிதை வரிகள் நினைவில் வந்துபோக, மெல்லிய புன்னகையை மட்டும் உதிர்ந்துவிட்டு அவர்களிடமிருந்து அப்பால் நகர்ந்தோம்.
« PREV
NEXT »

No comments