விரைவில் நாட்டில் ஸ்ரீலங்கா ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி எனும் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னாள் ஶ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து இந்த புதிய கட்சியினை அமைக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஹோமாகம நகரில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
அது போலவே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு விழா ஐக்கிய தேசியக் கட்சியின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
குறித்த இரு கட்சிகளையும் கலைத்து விட்டு ஒரு கட்சி அமைத்தால் சிறந்தது என எனக்கு எவரோ கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
அவ்வாறு அமைக்கப்படும் அந்தக் கட்சிக்கு எவ்வாறு பெயர் அமையவுள்ளது எனவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அவ்வாறு கட்சி ஒன்று அமைக்கப்பட்டால், மிகச் சரியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எம்முடன் இருப்பதை காணலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment