Latest News

August 13, 2016

சர்வதேச நீதி கோரி ஆனையிறவிலிருந்து ஐ.நா. செயலகம் வரையான நடை பயணத்திற்கு கிளிநொச்சியில் அழைப்பு!
by admin - 0

ஈழத் தமிழர் மீதான இனப் படுகொலைக்கு நீதி கேட்டும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள பௌத்த மயமாக்கலை எதிர்த்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்தக் கோரியும் நீதிக்கான நீண்ட நடைப் பயணத்திற்கான அழைப்பை கிளிநொச்சி கிராம மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கங்களின் சமாசமும் பொது அமைப்புக்களின் ஒன்றியமும் இணைந்து விடுத்துள்ளன. 


இது பற்றி  அவர்கள் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், எதிர்வரும் 22.08.2016 அன்று காலை 8.00 மணிக்கு  ஆனையிறவில் ஆரம்பிக்கின்ற நடைபவனி கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனை முன்பாக உள்ள ஐ.நா செயலகத்தைச் சென்றடையவுள்ளது. 


தமிழர் தாயக்தின் நயினாதீவில் 60 அடி புத்தர் சிலை வைக்கப்பட்டமை, கொக்கிளாய் கருநாட்டுக்கேணி விநாயகர் ஆலயம் இடிக்கப்பட்டு புத்த விகாரை அமைக்கப்பட்டமை, திருகோணமலை சாம்பல் தீவில் புத்த விகாரை அமைக்கப்பட்டமை, திருக்கோணேஸ்வரம் ஆலயச் சூழல் பௌத்த மயமாக்கப்பட்டமை, தம்புள்ளைக் காளி கோவில் இடிக்கப்பட்டமை, கிளிநொச்சி லும்பினி விகாரைக்காகத் தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டமை, இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயம் அருகே பௌத்த விகாரை அத்துமீறி அமைக்கப்படுகின்றமை, மாங்குளம், இரணைமடுச்சந்தி, பரந்தன், கிளிநொச்சி, திருக்கேதீஸ்வரம், பூநகரி வாடியடி, கனகராயன்குளம் பெரியகுளம், கிருஸ்ணபுரம் போன்ற பகுதிகளில் அத்துமீறிப் புத்தர் சிலைகளை நிறுவிப் பௌத்த ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகின்றமை மற்றும் பள்ளிக்குடா புனித தோமையர் தேவாலயத்தையும் இரணைதீவு புனித அந்தோனியார் தேவாலயம் என்பவற்றைக் கடற்படை ஆக்கிரமித்தமை என்பவற்றுக்கெதிராகவும் மீள்குடியேற்றம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தல், இனப்படுகொலைக்கு நீதியான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இந்நடை பயணம் இடம்பெறவுள்ளது.

நீதி கோரும் நீண்ட நடை பயணத்தில் அரசியல் தலைவர்கள், மதகுருமார்கள், மத அமைப்புக்கள், கிராமிய சமூக பொதுசன நிறுவனங்கள், வர்த்தகப் பெருமக்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் என அனைவரையும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்குமாறு கிளிநொச்சி மாவட்டக் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசமும் பொது அமைப்புக்களின் ஒன்றியமும் அழைப்பு விடுக்கின்றது என சமாசத்தின் தலைவர் கறுப்பையா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments