நாட்டில் உண்மையானதும் உறுதியானதுமான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உண்மைகள் கண்டறியப்பட வேண்டியது அத்தியாவசியமான விடயமாகும். அதற்கான முதல் அடித்தளத்தை அரசாங் கம் இன்று ஏற்படுத்தியுள்ளது என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ. சுமந்திரன் நேற்று சபையில் தெரிவித்தார். காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அமைக்கும் சட்ட மூலமானது
நல்லிணக்கத்திற்கான ஆரம்பம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற காணாமற் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும் நிர்வகித்தலும் பணிகளை நிறைவேற்றுதலும்) சட்ட மூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே சுமந்திரன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
நல்லிணக்கத்திற்கான நடவடிகைகளில் இன்று முதல் அடித்தளம் இடப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் அரசாங்கத்தைப் பாராட்டுகின்றோம். எந்தவொரு நல்லிணக்க நடவடிக்கையையும் உண்மையின் அடிப்படையிலானதாகவே அமைய வேண்டும். உண்மை கண்டறியப்படாவிட்டால் இந்த நடவடிக்கைகள் வெற்றிபெறாது.
கடந்த பல வருடங்களில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். அரசின் மீது அதிருப்தி கொண்டவர்கள் விமர்சித்தவர்களுக்கும் கடந்த காலத்தில் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது.
எது எவ்வாறிருப்பினும் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து உண்மை மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மட்டுமே இப்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.வேறு எந்தவொரு விடயத்திற்குமான நடவடிக்கைகள் இங்கு இடம்பெறவிலலை.
1980 களின் இறுதியில் நாட்டில் இடம்பெற்ற காணாமல் போதல்கள் தொடர்பிலும் நீதிக்கு புறம்பான படுகொலைகள் பற்றியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. யும் அப்போது ஜெனீவா சென்று பலவந்தமான அல்லது தன்னிச்சையான காணாமல் போதல்கள் தொடர்பாக ஐ.நா. செயற்குழு அமர்வில் குரல் கொடுத்திருந்தனர்.
மஹிந்த ராஜபக் ஷ தான் இவ்விடயத்தில் முன்னுதாரணமாக செயற்பட்டிருந்தார். அது மட்டுமல்லாது இவ்விடயம் தொடர்பாக எடுத்துச்சென்ற ஆவணங்களை பொலிஸாருக்கு வெளிப்படுத்தவும் வாக்கு மூலமளிக்கவும் அவர் அப்போது மறுத்திருந்தார்.
தெற்கில் இளைஞர்கள் காணாமல் போனபோதே இவர்கள் சர்வதேசத்திடம் சென்றிருந்தனர். வாசுதேவவும் சிங்கள இளைஞர்கள் காணாமல் போனபோதே ஜெனீவா சென்று குரல் எழுப்பியிருந்தார்.
சிங்கள இளைஞர்கள் காணாமல் போனால் மட்டும்தான் அவருக்கு மனித உரிமை மீறலா? தமிழ் இளைஞர்கள் காணாமல் போனமை பற்றி அவருக்கு கவலையில்லையா?
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மட்டுமல்லாது மஹிந்த ராஜபக் ஷ நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையிலும் சரி பரணகம ஆணைக்குழு அறிக்கையிலும் சரி பலவந்தமான காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் கடந்த காலத்தில் காணாமல் போயுள்ளனர். அவர்களில் தங்கியிருந்தவர்கள் இன்றும் அவர்களது வரவுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
எனவே உண்மையான சாத்தியமான நல்லிணக்கத்தை ஏற்படுத்த உண்மைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியமாகும். எனவே எதுவித தாமதமும் இன்றி இந்த சட்ட மூலத்தை சட்டமாக்க வேண்டும் என்றும் சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
No comments
Post a Comment