வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவமே எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை மழுங்கடிக்கின்றது. இத்தகைய அச்சமான சூழலால்தான் எமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகின்றோம்.
எனவே வடக்கிலிருந்து இராணுவத் தரப்பினர் முழுமையாக விரைவில் வெளியேற்றப்பட வேண்டும் என நல்லிணக்க பொறிமுறைகளுக்கான மக்கள் கருத்த றியும் செயலணியில் கலந்துகொண்ட பொதுமக்கள் கூட்டாகக் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும்செயலணியின் ஐந்தாவது அமர்வு இடம்பெற்றிருந்தது.
இச்செயலணியில் கலந்துகொண்ட மக்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது,
தற்போது அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க செயலணி போன்று கடந்த காலங்களிலும் பல்வேறு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றினூடாக மக்களது கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு செல்லப்பட்டன. ஆனால் இவற்றால் எவ்வாறான பயன் ஏற்பட்டதென்பது கேள்விக்குறியானதாகவே உள்ளது. குறிப்பாக இவ் விடயங்கள் உரிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனவா? அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவை பரீசிலிக்கப்பட்டனவா? அவற்றிற்கு என்ன தீர்வு வழங்கப்பட்டன? இவை அனைத்துமே கேள்விக்குறியாகவே உள்ளன.
மேலும் முன்னாள் போராளிகள் விடயத்தில் அரசாங்கம் முறையான ஓர் சமூக மயமாக்கலை ஏற்படுத்தவில்லை என்பதுடன் அவ்வாறு ஏற்படுவதற்கு அனுமதிக்கவுமில்லை. ஏனெனில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் மீது தொடர்ச்சியான புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் அவர்களை மீள கைது செய்வதுமாக அவர்களை சமூகமானது தம்மோடு ஒருவராக ஏற்றுக்கொள்ள அச்சப்பட வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இத்தகைய செயற்பாட்டால் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது பெண்களேயாவர். இதனால் அவர்கள் சமூகத்தினால் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றார்கள்.
மேலும் தற்போது பெண்களுக்கான பாதுகாப்பு என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. விடுதலைப்புலிகளது காலத்தில் பெண்கள் சுதந்திரமாக இருந்த போதும் தற்போது அவ்வாறான ஓர் நிலைமை காணப்படவில்லை. மேலும் அரசியலில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் பெண்கள் பிரதிநித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்.
பெண்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்காமலே அவர்களால் எதுவுமே செய்ய முடியாது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்கள் எதனையும் செய்வதற்கும் பின்னிற்பதில்லை. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இன்னமும் வழங்கப்படவில்லை. பொதுவாக அரசியல் கட்சிகள் கூட பெண்களிடம் சொத்திருக்கின்றதா என பார்த்தே அவர்களை அரசியலில் களமிறக்க எத்தனிக்கின்றார்கள். இதனால் தான் தற்போது அனைத்து பெண்களும் இணைந்து தனியான ஓர் அரசியல் பிரவேசத்திற்கான கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கு எத்தனித்திருப்பதாக அறிகின்றோம். இது தொடர்பில் மூத்த அரசியல் கட்சிகள் சிந்தித்து செயற்பட வேண்டிய தேவைப்பாடுள்ளது.
கடந்த காலத்தில் நாட்டில் உருவாக்கப்பட்ட விகிதாசார ரீதியிலான தரப்படுத்தல்கள் குறிப்பாக கல்வியில் மேற்கொள்ளப்பட்டமையினால் பல தமிழ் இளைஞர்கள் நன்றாக படித்திருந்தும் பல்கலைகழகம் கிடைக்கப்பெறாமல் ஓரங்கட்டப்பட்டனர். இத்தகைய நிலைமைகளாலேயே அவர்கள் ஆயுதமேந்தி போராட ஆரம்பித்தனர்.
அத்துடன் அரசியலிலும் இளைஞர்கள் உள்வாங்கப்படாது ஓரங்கட்டப்பட்டனர். குறிப்பாக அரசியல் எனும் போது வயோதிபர்களும் தீவிரவாதிகள் எனும் போது இளைஞர்களும் என்ற நிலை உலகம் முழுவதுமே ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் எங்குமே இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டமையேயாகும். இந்நிலை மாற்றப்பட்டு அரசியலில் இளைஞர்கள் குறிப்பிட்டளவு சதவீதம் உள்வாங்கப்பட வேண்டும். அதற்கு தற்போது ஆட்சியை தம்மிடையே தேக்கி வைத்துள்ள வயோதிப அரசியல் வாதிகள் விட்டுகொடுப்பை செய்ய வேண்டும். இல்லையேல் அதனை சட்டமாக உருவாக்க வேண்டும்.
மேலும் வடக்கில் உள்ள இராணுவம் வெளியேற்றப்படவேண்டும்.ஏனெனில் இராணுவமே இங்குள்ள இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை மழுங்கடிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் தான் எமது பிள்ளைகளை சுதந்திரமாக வளர்க்க முடியாது வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க முயற்சிக்கின்றோம். எனவே இராணுவமானது உடனடியாக வெளியேற்றப்படவேண்டும்.
அத்துடன் மொழி ரீதியான சமத்துவமும் மத ரீதியான சமத்துவமும் ஏற்படுத்தப்பட வேண்டும். இன்னொரு இனத்தை அழிப்பதற்காக அல்லது ஓர் இனத்தை ஒடுக்குவதற்காக வேறொரு இனத்தை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். சில நாடுகளும் அதனையே இங்கு செய்திருந்தன எனத் தெரிவித்தனர்.
No comments
Post a Comment