இறுதிக்கட்டப் போரின்போது, பொதுமக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதிகளில் அரசபடையினர் கிளஸ்டர் குண்டுகளை வீசியதற்கு ஆதாரமாக பிரித்தானியாவின் ‘தி கார்டியன்’ நாளிதழ் வெளியிட்டுள்ள தகவல்களையும், படங்களையும், இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள விதம், ஆச்சரித்தை ஏற்படுத்தியிருக்கிறது.
போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து சனல்-–4 வெளியிட்ட வீடியோ மற்றும் ஒளிப்பட ஆதாரங்களை மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் எவ்வாறு அலட்சியத்துடன் நிராகரித்ததோ அதேபோன்று தான், கிளஸ்டர் குண்டுகளையும் இப்போதைய அரசாங்கம் நிராகரித்திருக்கிறது.
போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் விடயத்தில், மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்துக்கு ஈடிணையற்றது என்பதை நிரூபிக்கும் வகையில் அரசதரப்பின் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.
கடந்த திங்கட்கிழமை ‘தி கார்டியன்’ கிளஸ்டர் குண்டுகள் மீட்கப்படுவது தொடர்பான நான்கு படங்களை- வெளியிட்டிருந்தது. வன்னியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் மூலம் பெறப்பட்ட படங்கள் அவை.
இதுதொடர்பார்பாக ‘தி கார்டியன்’ சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு இதுவரை அரசாங்கமோ, பாதுகாப்பு அமைச்சோ அதிகாரபூர்வ அறிக்கை மூலம் மறுப்பைத் தெரிவிக்கவில்லை.
ஆனாலும், இதுதொடர்பாக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, ஊடகத்துறைப் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்துள்ள பதில்கள், வித்தியாசமானவை.
“இவ்வாறான செய்திகளின் உண்மைத்தன்மைகள் குறித்து தெரியாமல், எந்த தீர்மானமும் எடுக்க முடியாது. கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்த வாய்ப்புகள் இல்லை என ஆரம்பத்தில் இருந்தே பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் இப்போது இத்தகைய செய்திகளை வெளியிடுவதன் பின்னணி என்ன வென்பது தொடர்பிலும் ஆராயப்பட வேண்டும்.
அதேபோல போர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் மூலம் இவற்றை ஆராய்ந்து தீர்மானம் எடுப்போம்” என்று கூறியிருந்தார் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெற்றியாராச்சி.
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர, “வெளியாகியுள்ள படங்கள் தொடர்பாக உறுதித்தன்மை இல்லை. ஆகவே, இவற்றை உண்மையென எம்மால் கருத முடியாது.
அதேபோல் இப்போது சர்வதேச ரீதியாக தமக்கு சாதகமான காரணிகளை முன்வைத்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றனர். அரசியல் ரீதியாக சில பொய்யான காரணிகளை முன்வைத்து இராணுவத்தை குற்றவாளியாக்க முயற்சிக்கின்றனர் .
இராணுவம் விதிமுறைகளுக்கு முரணான வகையில் போர் செய்யவில்லை. ஆகவே, அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பும் எப்போதும் எமது இராணுவத்தின் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை நிராகரித்தே செயற்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இவர்களின் கருத்துக்களில், நேரடியாக குற்றச்சாட்டை நிராகரிக்காத ஒரு நழுவல் பதிலையே பார்க்க முடிந்தது. முன்னர் மறுப்பு வெளியிட்டதைச் சுட்டிக்காட்டித் தப்பித்துக் கொள்ளும் ஒரு நிலையை அவதானிக்க முடிந்தது.
அத்துடன், இராணுவம் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு தண்டனைக்குட்படுத்த முயற்சிகள் நடப்பது போன்று விவகாரத்தை மாற்றவும் முயற்சித்திருந்தனர்.
ஆனால், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவோ, கிளஸ்டர் குண்டுகள் பற்றிய குற்றச்சாட்டுக் குறித்த கேள்விக்கு பதிலை அளிக்கவில்லை. மாறாக அவரே பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.
“அந்தப் படங்கள் உறுதிப்படுத்தப்படாதவை. இதுபோன்ற படங்களை அவர்கள் தொடர்ந்து வெளியிடுகிறார்கள். இந்தக் குண்டுகளை நாம் தான் பயன்படுத்தினோம் என்று எவ்வாறு நிரூபிக்க முடியும்? அவற்றில் இராணுவத்தின் இலச்சினை இருக்கிறதா?
போர் முடிந்து, பெரும்பாலான வெடிபொருள் அகற்றும் பணிகள் நிறைவடைந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏன் இந்தப் படங்கள் வெளியிடப்படுகின்றன? எதற்காக இவற்றை முன்னரே அவர்கள் வெளியிடவில்லை?” என்று அவர் எழுப்பிய கேள்விகள் முக்கியமானவை.
அதுபோலவே, இதே செய்தியாளர் மாநாட்டில், ஊடகத்துறைப் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதானவும், அந்தப் படங்கள் இலங்கையில் தான் எடுக்கப்பட்டவை என்று எப்படி உறுதி செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அத்துடன், கண்ணிவெடிகளை அகற்றுபவர்கள் இவ்வாறான தகவல்களை வெளியிடுவது சட்டவிரோதமானது. ஜெனீவாவில் இலங்கையை தனிமைப்படுத்தவும், அரசாங்கத்துக்கு கெட்டபெயரை ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சி என்றும் குறிப்பிட்டிருந்தார்.
போர்களின் போது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது வழக்கம். இராணுவத்தினரின் செயற்பாடுகள், மீறல்கள், விதிகளுக்கு முரணான ஆயுதங்களின் பயன்பாடுகள் தொடர்பாக குற்றச்சாட்டுகளைச் சந்திக்காத இராணுவமே உலகில் இல்லை.
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போது, எடுத்த எடுப்பிலேயே நிராகரித்து விடாமல், அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுப்பதில் தான் எந்தவொரு இராணுவத்தினதும் பெயர் காப்பாற்றப்படுகிறது.
ஆனால், இலங்கை இராணுவமும் சரி, அரசாங்கமும் சரி தமது பெயர்களைப் பாதுகாப்பது என்பது, தனியே குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதில் தான் இருப்பதாக கருதிக் கொண்டிருக்கின்றன.
மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் செய்த அதே தவறைத் தான் இப்போதைய மைத்திரிபால சிறிசேன அரசாங்கமும் செய்து கொண்டிருக்கிறது.
போர்க்குற்றங்கள் தொடர்பான வீடியோ மற்றும் ஒளிப்பட ஆதாரங்களை சனல்-4 வெளியிட்ட போது அதனை பொய் என்று கூறியது அப்போதைய அரசாங்கம்.
அது போலியாகத் தயாரிக்கப்பட்டது என்றும், திரிபுபடுத்தப்பட்டது என்றும் கூறி நிராகரித்தது. ஆனால், அண்மையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வுக்கு எழுதியிருந்த கடிதம் ஒன்றில் அது உண்மையானது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அந்தக் குற்றச்சாட்டை எதிர்கொண்ட விதம் தவறானதென மங்கள சமரவீர தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். அதே மங்கள சமரவீர அங்கம் வகிக்கும் அரசாங்கம் தான் கிளஸ்டர் குண்டுக் குற்றச்சாட்டை நிராகரித்திருக்கிறது.
அதுமட்டுமன்றி, அமைச்சர் ராஜித சேனாரத்ன எழுப்பியுள்ள கேள்விகள் சிறுபிள்ளைத்தனமானவை. அடிப்படை இராணுவ அறிவில்லாத ஒருவர் தான் அவ்வாறான கேள்விகளை எழுப்ப முடியும். கிளஸ்டர் குண்டுகளை இராணுவம் தான் வீசியது என்று நிரூபிக்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். நிச்சயமாக நிரூபிக்க முடியும்.
எவ்வாறெனின், மீட்கப்பட்ட கிளஸ்டர் குண்டின் பாகங்கள், RBK-–500 AO–-2.5RT வகையைச் சேர்ந்தவை,
சுமார் 500 கிலோ எடையுள்ள அந்த கிளஸ்டர் குண்டை 445 நொட்ஸ் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட, விமானம் ஒன்றினால் தான் வீச முடியும். அத்தகைய வேகத்தில் பறக்கக் கூடிய அல்லது 500 கிலோ குண்டை வீசக்கூடிய விமானம் எதுவும் புலிகளிடம் இருந்ததில்லை. வேறு நாட்டு விமானங்கள் ஏதும் வன்னியில் குண்டுகளை வீசவுமில்லை.
(11 ஆம் பக்கம் பார்க்க)
அரசின் சுயரூபத்தை ...
(௯ஆம் பக்க தொடர்ச்சி)
ஒருவேளை, புலிகளே அந்தப் பாரிய குண்டை வீசியிருந்தால் அதற்கான தடயங்களையாவது போரின் முடிவில் இராணுவம் கண்டுபிடித்திருக்க வேண்டும். அதனை வெளிப்படுத்தி புலிகளின் போர்க்குற்றமாக நிரூபித்திருக்க வேண்டும்.
இவை எதையுமே செய்யாமல் மூடிமறைக்க முயன்றதில் இருந்தே அது யாரால் வீசப்பட்டதென்பதை கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமானதல்ல.
இராணுவத்தின் இலச்சினை அதில் இருக்கிறதா என்று முட்டாள்தனமான கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
எந்த நாட்டு இராணுவமும் தாம் வீசும் குண்டில் தமது இராணுவத்தின் சின்னத்தை பொறிப்பதில்லை. எந்த நாட்டுத் தயாரிப்பு என்று தெரியக் கூடாது என்பதற்காக, ரஷ்ய மொழியில் இருந்த எழுத்துக்களை அழித்து விட்டுக் குண்டுகளை வீசியவர்கள், தமது சின்னத்தை பொறிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
போர் முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏன் இந்தப் படங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது ஒன்றும் இப்போது தான் வெளியான படங்கள் அல்லது தகவல் அல்ல. ஏற்கனவே வெளியான ஒன்று தான்.
கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடுபவர்கள் மீட்கப்படும் வெடிபொருட்கள் பற்றிய தகவலை வெளியிடக் கூடாது என்றும், அது சட்டவிரோதம் என்றும் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான கூறியிருக்கிறார்.
அப்படிப்பட்ட ஒரு நிலையில் இந்த ஆதாரங்கள் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக மறைக்கப்பட்டிருக்கலாம். தற்போது, அரசாங்கமே போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஜெனிவாவில் இணங்கியுள்ள சூழலில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்தப் படங்களை எடுத்து வைத்திருந்தவர் ஊடகத்திடம் வழங்கியிருக்கலாம்.
இதுபோன்று போர்க்களங்களில் எடுக்கப்பட்ட பல அரிய படங்கள் பல தசாப்தங்களுக்குப் பின்னர் கூட வெளியாகியிருக்கின்றன. அவை உண்மை என்று நம்பப்பட்ட பொய்களின் சுயரூபத்தை தோலுரித்திருக்கின்றன.
அதுபோல இந்தப் படங்கள் ஒன்றும் நீண்டகாலம் கழித்து வெளியாகவில்லை. போர்க்குற்ற விசாரணை ஒன்றுக்கான சூழல் எழுந்துள்ள போது தான் வெளியாகியிருக்கின்றன.
இந்தப் படங்கள் இலங்கையில் தான் எடுக்கப்பட்டவை என்று எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் என்ற, அப்பாவித்தனமான கேள்வி ஒன்றை ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான எழுப்பியிருக்கிறார்.
தி கார்டியன் வெளியிட்டுள்ள, சாலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட RBK-500 AO-2.5RT கிளஸ்டர் குண்டின் எஞ்சிய வெளிப்பாகத்தை மீட்கும் படத்தில், இரண்டு பேர் காணப்படுகின்றனர் அவர்களின் முகத்தை அடையாளம் காண முடியாமல் படம் வெளியிடப்பட்டுள்ளது.
ஒருவர் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தினர் அணியும் குண்டுதுளைக்காத ஜக்கட்டை அணிந்துள்ளார். அவர் உள்ளூர் பணியாளர் என்று தெரிகிறது. அவரது முகத்தை தெளிவின்றிப் பிரசுரித்துள்ளது தி கார்டியன். மூலப்படத்தில் அவர் யார் என்பதை தெளிவாக பார்க்க முடியும்.
மற்றவரின் பின்புறத்தில் இருந்தே படம் எடுக்கப்பட்டுள்ள போதிலும், வெளிநாட்டவர் போலத் தோன்றுகிறது. அவர் அணிந்துள்ள ரிசேட்டின் பின்புறத்தில், சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் mine clearence என்று தெளிவாக பார்க்க முடிகிறது.
உலகில் வேறெந்த நாட்டிலும், சிங்கள மொழி பயன்பாட்டில் இல்லை. சிங்கள மொழி பொறித்த ரிசேட்டுடன் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படவுமில்லை.
அதைவிட, இந்த ஒளிப்படங்களை முறைப்படி நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்தாலே உண்மைகள் தெரிந்து விடும்.
ஆனால், சனல்-4 ஆதாரங்களைப் போன்று இவற்றையும் எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்க முனைந்திருக்கிறது அரசாங்கம்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் குற்றச்சாட்டுகளை நிராகரித்துப் பழகிப் போனவர்கள் என்பதால், இப்போதும் அப்படியே செய்கின்றனர் போலும்.
கிளஸ்டர் குண்டுக் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் எதிர்கொண்டுள்ள விதத்தைப் பார்க்கும் போது, இந்த அரசாங்கம் எவ்வாறு உண்மையான- நேர்மையான ஒரு போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்கும் என்ற கேள்வியைத் தான் எழுப்பத் தோன்றுகிறது.
No comments
Post a Comment