கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க மற்றும் புளத் கொஹுபிட்டிய ஆகிய பிரதேசங்களில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற பாரிய மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 20 பேரது சடலங்கள் நேற்று மாலைவரை மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் இரண்டு பிரதேசங்களிலும் மேலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 134 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயிருக்கலாம் என்றும் அவர்களும் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.
அந்தவகையில் அரநாயக்க சிரிபுர எலங்கபிட்டிய மற்றும் பல்லேபாகே ஆகிய மூன்று கிராமங்களிலிம் ஏற்பட்ட மண்சரிவினால் உயிரிழந்த 17 பேரின் சடலங்களும் புலத்கொஹுபிட்டிய பகுதியில் ஏற்பட்ட மணசரிவில் சிக்கிய 16 பேரில் மூன்று பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 66 வீடுகள் முற்றாக மண்ணில் புதையுண்டுள்ளன. மேலும் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் அவர்களில் நேற்றுக்காலை 150 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அரநாயக்க
மாவனெல்ல அரநாயக்க பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை ஏற்பட்ட பாரிய மண்சரிவில் மூன்று கிராமங்களின் 220 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததுடன் மண்சரிவில் சிக்கிய 1100 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிரிபுர எலங்கபிட்டிய மற்றும் பல்லேபாகே ஆகிய கிராமங்களே இவ்வாறு மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளன. சாமபுர என்ற மலையிலிருந்து இவ்வாறு மூன்று கிராமங்களின் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட 1100 க்கும் மேற்பட்டோர் ஆறு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எலங்கபிட்டிய மலை உச்சியில் அமைந்துள்ள விஹாரையே முதலில் இந்த மண்சரிவினால் மண்ணுள் புதையுண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரநாயக்க பகுதியில் நேற்று இரவு முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருந்தமையினால் மீட்பு பணியில் ஈடுபட்டோர் பாரிய சிரமங்களை எதிர்கொண்டனர். கேகாலை இராணுவ முகாமிலுள்ள 260 க்கும் மேற்பட்ட படையினர் மேஜர் ஜெனரல் காவிந்த குணவர்த்தன தலைமையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதேவேளை அரநாயக்க மண்சரிவினால் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினமும் இப்பகுதியில் கடும் மழை பெய்வதால் மீட்பு பணியாளர்களுக்கு அங்கு செல்வதிலேயே சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். எனினும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இராணுவத்தினர் அப்பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் சடலங்கள் மீட்கப்படலாம் என அஞ்சப்படுகின்றது.
அத்துடன் நேற்றைய அரநாயக்க பிரதேசமே சோகமயமாகி காணப்பட்டது. அருகில் உள்ள பிரதேச மக்களும் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு வருகை தந்தமையினால் மீட்பு பணிகளுக்கு இடையூறு நேற்றைய தினம் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்தும் சாமபுர மலையிருந்து நீர் மற்றும் கற்களும் மண் திட்டுகளும் வந்துகொண்டிருப்பதால் மீட்பு பணிகள் கடும் சவாலுக்கு உட்பட்டுள்ளன.
இதேவேளை விமானப் படையினர் நேற்றைய தினம் குறித்த பிரதேசத்தை ஹெலிகப்டர் மூலம் கண்காணித்திருந்த நிலையிலேயே மீட்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றன. நேற்றுக் காலை 6.00 மணி முதல் மண்சரிவு ஏற்பட்ட பிரதேசங்களை கண்கானிக்கும் பணிகளில் பெல் 212 என்ற ஹெலிகப்டர் ஈடுபட்டுள்ளது.
புளத்கொஹுபிட்டிய
இது இவ்வாறு இருக்க கேகாலை புலத்கொஹுபிட்டிய, களுபஹனவத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மொத்தமாக 17 பேர் இந்த மண்சரிவின்போது மண்ணில் புதையுண்டுபோன நிலையில் மூவரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ஏனைய 14 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
அத்துடன் காணாமல் போயுள்ள ஏனையவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன. 50 க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் பிரிகேடியர் பி.ஜே. கமகே தலைமையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் தோட்ட குடியிருப்பு தொகுதி ஒன்றே மண்ணில் புதைந்துள்ளது. 6 குடியிருப்புக்கள் ( லயன்கள்) இவ்வாறு மண்ணுக்குள் புதைந்துள்ளது. ,
இதேவேளை இந்த மண்சரிவு அனர்த்தங்கள் தொடர்பில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர கருத்து வெளியிடுகையில்
மண்சரிவைப் பொறுத்தவரையில் அரநாயக்க, அத்கம்பளை, சிறிபுர என்ற பிரதேசங்களும், புலத்கொவ்பிட்டிய என்ற பிரசேத்திலும் பாரிய மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் அரநாயக்கப்பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 15 அதிகாரிகள் உட்பட 266 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புலத்கொவ்பிட்டிய பிரதசேத்தில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள ஐந்து அதிகாரிகள் உட்பட 50 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு அரநாயக்கப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டவுடன் 80 இராணுவத்தினர் உடனடியாக ஸ்தலத்திற்கு அனுப்பப்பட்டு மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கமான்டோ பிரிவு அதிகாரிகளும் மீட்டுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முதற்கட்டமாக அரநாயக்கப்பகுதியிலிருந்து 150 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு 6தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஹெலிகொப்டர் மூலம் இந்தப்பகுதிகளில் அனர்த்த நிலைமைகள் நேற்றுக்காலை கண்காணிக்கப்பட்டன. அரநாயக்கவில் 7 சடலங்களையும், புலத்கொவ்பிட்டியவில் 3 சடலங்களையும் இராணுவத்தினர் மீட்டுள்ளனர். தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் அதிகளவு வீடுகள் சேதமடைந்துள்ளன. எவ்வாறெனினும் அனைத்துப்பகுதிகளிலும் 700க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன இது தொடர்பில் தகவல் வெளியிடுகையில்
அரநாயக்க மண்சரிவு சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அரநாயக்க சம்பவத்தை அடுத்து அங்கு 20 அம்புலன்ஸுகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 15 டாக்டர்களும், 45 தாதியர்களும் அரநாயக்கப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வரக்காப்பொல, கேகாலை மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.
இதற்கிடையில் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலைமைகள் குறையவில்லை என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
இது இவ்வாறு இருக்க இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்கள் இன்னும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment