Latest News

April 16, 2016

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின்னால் ஒரு நியாயம் இருந்தது என்பதை எவரும் மறுக்கமுடியாது கிளிநொச்சியில் இரா.சம்பந்தன்.
by admin - 0

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின்னால் ஒரு நியாயம் இருந்தது என்பதை எவராலும் மறுத்துவிட முடியாது என எதிர்க் கட்சித்தலைவர் கிளிநொச்சியில் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் கூட்டமைப்புக் காரியாலயமான அறிவகத்தில் இன்று காலை மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே மேற்படி கருத்துக்களைத் தெரவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரவிக்கையில் 'இந்த நதட்டிலே ஒரு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுகின்ற போது நிச்சயமாக ஆயுதப்போராட்டத்தை நீண்ட காலமாக நடத்தியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளும் அதில் பங்காளிகளாக இருந்துள்ளார்கள் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
ஏனென்றால் ஆயுதப்போராட்டத்திற்குப் பின்னால் ஒரு நியாயம் இருந்தது. யுத்தம் நடைபெற்ற காலப் பகுதிகளிலும் சரி தற்போதும் சரி அதனை நான் பல தடவைகள் பாராளுமன்றத்தில் கூறியிருக்கிறேன்.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பல்வேறு காரணங்களின் நிமித்தம் பல்வேறு தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு ஒரு நியாயம் இருந்தது. இன்றைக்கும் இந்தத் தேசியப் பிரச்சனைக்கு, தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற கருத்தை இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றால் அந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருந்த நியாயத்தை அவர்களும் புரிந்துகொள்கின்றார்கள் என்பதுதான் அதனுடைய அர்த்தம்.
தற்பொழுது யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. மீண்டும் இந்த நாட்டிலே வன்முறை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. வன்முறை ஏற்பட்டால் அதன் மூலமாக கூடிய பாதிப்புக்கள் ஏற்படுவது எமது மக்களுக்கே. கடந்த கால வன்முறைகளால் அதிகமான பாதிப்புகளை எதிர்நோக்கியவர்கள் எமது மக்கள்தான்.

நாட்டிலே சமாதானமாக பேச்சுவார்த்தை மூலமாக புரிந்துணர்வின் மூலமாக நல்லிணக்கத்தினூடாக பேசி உலகத்திலே பல்வேறு நாடுகளிலே பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் சாமாதானமாகவும் சமத்துவமாகவும் வாழ்ந்து வருகின்றார்கள். அதேபோல மக்களிடையே இறைமை பகிர்ந்தளிக்கப்பட்டு பிராந்தியங்கள் மாகாணங்கள் தங்களுடைய கருமங்களை,
தமது மக்களுடைய தேவைகளைத் தாமே பூர்த்திசெய்யக்கூடிய வகையில் அரசியல் தீர்வு காணப்பட்டு உரிய ஒழுங்குகள் செய்யப்பட்டு மிகவும் நாகரிகமான முறையில் ஆட்சி நடைபெற்று வருகின்றன. அந்த மக்கள் அமைதியாகவும் நிம்மதியாகவும் சுதந்திரமாக வாழ்வதைப்போலவே இந்த நாட்டிலே எமது மக்களும் வாழவேண்டும் என்ற ஆட்சிமுறையையே நாம் எதிர்பாரக்கிறோம். அதனையேதான் நாம் சர்வதேசத்திடமும் வலியுறுத்தி வருகின்றோம். அதற்காக நாம் உழைத்து சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் நாம் பெற்றுள்ளோம்.

ஏங்களுடைய மக்களுடைய சுயநிர்ணய உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு ஒருமித்த நாட்டுக்குள் எமது மக்களது இறைமை மதிக்கப்பட்டு போதிய அதிகாரங்களுடன் சமூக, பொருளாதார, கலச்சார ரீதியாக எங்களுடைய உரிமைகளை நாங்கள் அடையக்கூடிய வகையில் எங்களுடைய அபிலாசைகள் நிறைவேற்றக்கூடிய வகையில் ஒரு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமென்ற கருத்தை நாங்கள் வலியுறுத்தி முன்வைத்திருக்கின்றோம்.
ஆந்த நிலைப்பாட்டைச் சர்வதேசமும் ஏற்றுக்கொண்டு இலங்கை அரசாங்கத்திடம் பகிரங்கமாகக் கூறியிருக்கின்றது. அப்படியான அரசியல் தீர்வு ஏற்படுமாகவிருந்தால் இந்த நாட்டு மக்களிடையே புரிந்துணர்வும் நல்லிணக்கமும் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்' என்று மேலும் குறிப்பிட்டார்.

இன்றைய தினம் கிளிநொச்சிக்கு வருகை தந்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் வைக்கு காலை 10.00 மணியளவில் மக்களைச் சந்தித்து மக்களது குறை நிறைகளைக் கேட்டறிந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், கிழக்கு மாகாண பொருளாதார அமைச்சர் துரைரட்ணசிங்கம், வடமாகாணக் கல்வி அமைச்சர் குருகுலராசா, வடமாகாணசபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, அரியரத்தினம், ஆனோல்ட், சயந்தன் அகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.











« PREV
NEXT »

No comments