Latest News

March 18, 2016

சிங்களத்தின் வதைமுகாம் இரகசியங்கள் – அம்பலப்படுத்தினார் மருத்துவர் வரதராஜா!
by admin - 0

நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழீழ தாயகத்தில் மக்களோடு மக்களாக நின்று பெரும் சவால்களுக்கு மத்தியில் அதியுன்னத மருத்துவப் பணிபுரிந்தவர் மருத்துவர் ரி.வரதராஜா. தமிழீழ தாயக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக மருத்துவப் படிப்பை மேற்கொண்ட இவர், மருத்துவராகியதும் அதனை நிறைவேற்றும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் வாழ்ந்து மருத்துவப் பணி புரிந்தார்.

யுத்தம் வெடித்த பொழுது திருமலை ஈச்சிலம்பற்று முதல் வாகரை வரையான பிரதேசத்தில் மக்களின் உயிர்காக்கும் மருத்துவப் பணியை மேற்கொண்டார். அங்கிருந்து பின்வாங்குவதற்குத் தயாராகும் பொழுது இவரைத் தம்முடன் வன்னிக்கு வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அழைத்த பொழுது, ‘மக்களின் உயிர்களைக் காப்பதற்கு வன்னியில் எனது சேவை உங்களுக்கு தேவைப்படும் என்றால் வருகின்றேன். அல்லாது போனால் நானும் மக்களோடு போகின்றேன். அப்பொழுது எனக்கு ஏதாவது நடந்தால், மக்களுக்கு நடந்தது எனக்கும் நடந்ததாக இருக்கட்டும்’ என்று கூறியவர். அதன் பின் வன்னியில் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளைக் கருத்திற் கொண்டு வன்னி சென்றவர்.

யுத்தம் முடிவடைவதற்குப் பல நாட்களுக்கு முன்னரே, மக்களைக் கைவிட்டு எத்தனையோர் ஓடிய பொழுதும், 15.05.2009 அன்று சிங்களப் படைகளின் எறிகணைத் தாக்குதலில் காயமடையும் வரை மக்களோடு மக்களாக நின்று அவர்களின் உயிரைக் காப்பதற்கு ஓயாது உழைத்தவர்.

தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வரும் மருத்துவர் வரதராஜா அவர்கள் இலண்டன் வந்திருந்த பொழுது அவரை நாம் சந்தித்தோம். அப்பொழுது அவர் எமக்கு வழங்கிய நேர்காணலை இரண்டு பாகங்களாகத் தருகின்றோம். இரண்டாவது பாகம் எமது அடுத்த இதழில் வெளிவரும். ஈழமுரசு பத்திரிகையின் சார்பில் மருத்துவர் வரதராஜா அவர்களைச் செவ்வி கண்டவர் கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா.

கேள்வி: நீங்கள் இறுதி யுத்தத்தில் வன்னியில் பணிபுரிந்த ஒரு மருத்துவர். அந்த வகையில் இறுதி யுத்தத்தில் பல சவால்களை எதிர்கொண்டிருப்பீர்கள். அந்த வகையிலே நீங்கள் எதிர்கொண்ட சவால்களை – மிக முக்கியமாக – நீங்கள் குறிப்பிடக் கூடிய சவால்களைப் பற்றி விபரிக்க முடியுமா?

பதில்: வன்னியில் மட்டுமல்ல, வாகரைப் பிரதேசத்திலும் கடமையாற்றிய பொழுது, அது ஒரு யுத்தப் பிரதேசமாக இருந்ததால் பல விதமான சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. உதாரணமாக தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மக்களினுடைய இடப்பெயர்வு, பெரும் எண்ணிக்கையான காயங்கள், இறப்புகள் – ஒரு அசாதாரணமான சூழ்நிலை – பல சவால்களைத் தந்திருந்தது. அதேநேரம் காயமடைந்த நோயாளர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக அரச கட்டுப்பாட்டுப் வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதிலும், காயமடைந்த நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்குப் போதிய அளவு ஆளணி, மருத்துவ வசதி இல்லாததாலும் நாங்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கியிருந்தோம்.

அதேநேரம் மக்களுக்கும் அந்த இடத்தில் பல தடவைகள் இடம்பெயர்ந்து, இடம்பெயர்ந்து – ஒரு இடத்தில் இருக்கிற மக்கள் பல தடவைகள் இடம்பெயர வேண்டிய ஒரு நிலைமை இருந்தது. அவர்களுக்குரிய அடிப்படை வசதிகள் – சாப்பாடு, தங்குமிடங்கள் போன்ற பல்வேறு விதமான சவால்களை மக்களும் எதிர்நோக்கியிருந்தார்கள். அதேநேரம் வைத்தியசாலைகள் அனைத்தும் – நாங்கள் கடமை செய்த அனைத்து வைத்தியசாலைகளும் – திட்டமிட்ட ரீதியில் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தது. சுயமாக நாங்கள் – இயல்பாக இருந்து – வைத்திய சேவை வழங்க முடியாத நிலைமையும் காணப்பட்டது.

கேள்வி: இந்த சவால்களை நீங்கள் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

பதில்: சவல்களை நாங்கள் அந்தந்த நேரத்தில் பொருத்தமான முடிவுகளை எடுப்பதன் மூலம் – சர்வதேச நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்தி – எமது வைத்தியசாலையும் சரி, மக்கள் குடியிருப்புகளும் சரி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்ற செய்திகளை தெரியப்படுத்தியும், மருத்துவப் பற்றாக்குறை, மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கை, காயமடைந்த நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்கு அனுப்புவதற்கு இருக்கின்ற சவால்கள், தேவைகளையும் உரிய நேரத்தில் தெரியப்படுத்தி அந்த முடிவுகளை எடுத்திருந்தோம். அதேநேரம் எமது வைத்தியசாலையில் கடமை புரிந்த அனைத்து ஊழியர்கள், வைத்தியர்கள் அனைவரும் வழமையை விட மேலதிக நேரங்கள் கடுமையாக உழைத்து, கஸ்ரப்பட்டு நித்திரை கொள்ளாமல் தங்களுடைய சுய தேவைகளை எல்லாம் மறந்து மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதன் மூலம் இந்த சவால்களை எதிர்கொண்டிருந்தோம்.

கேள்வி: இதிலே நீங்கள் குறிப்பிட்ட அந்த சவால்களை எதிர்கொண்ட விதத்தை ஒரு பரந்துபட்ட கருத்தாக குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் இதிலே நீங்கள் குறிப்பிடத்தக்க – ஒரு பிரத்தியேகமாக நீங்கள் எதிர்கொண்ட ஒரு சவாலும், அதை நீங்கள் எதிர்கொண்ட விதத்தையும் சற்று விரிவாக விளக்க முடியுமா?

பதில்: உதாரணமாக சொல்வதென்றால் ஒரு பாரிய காயம் – ஒரு பெரிய காயம் – அல்லது ஒரு பெரிய சத்திர சிகிச்சை, நீண்ட நேரம் செய்ய வேண்டிய சத்திர சிகிச்சைகள் – அப்படியான நிலைகள் வருகின்ற பொழுது, அவர்களுக்கு மயக்க மருந்து மிகவும் அதிக எண்ணிக்கையில் – பெரும் அளவான மயக்க மருந்து தேவைப்படும். அதேநேரம் மருந்து, சேலைன், இரத்தம் ஏற்றுவது போன்றவை அதிகமாக தேவைப்படும். நீண்ட நேரம் எடுத்து அந்த சத்திர சிகிச்சைகளை செய்ய வேண்டும். சில சந்தர்ப்பங்களில் ஒரு நோயாளருக்கு அப்படியான ஒரு சிகிச்சையைச் செய்து, அவரைக் காப்பாற்றுவதற்குரிய வீதம் சில நேரம் குறைவாக இருக்கும். சில நேரம் காப்பாற்ற முடியாமல் இருக்கும். அதேநேரம் நாங்கள் அப்படியான சிகிச்சைகளைத் தவிர்த்து, வேறு சிறிய காயங்களை அல்லது வேறு காயங்களுக்கான சத்திர சிகிச்சைக்காக அந்த நோயாளர்களைத் தவிர்த்து செய்திருக்கின்றோம். அதேநேரம் ஒரு நோயாளருக்குத் தேவையான மருந்தின் அளவுகளைக் குறைத்துக் கூட – அவர்களுக்கு கொடுக்கின்ற சேலைன், மருந்துகள், மயக்க மருந்துகளைக் குறைத்துக் கூட அவர்களுக்கு சத்திர சிகிச்சைகளையும், ஏனைய சிகிச்சைகளையும் வழங்கியிருக்கிறோம்.

கேள்வி: இவ்வாறான சந்தர்ப்பங்களில் உங்களுடைய உணர்வுகள் எவ்வாறு இருந்தது?

பதில்: எங்களுடைய உணர்வுகள் யுத்தம் ஆரம்பித்த நாட்களில் இருந்து மிகவும் கஸ்ரமாக இருந்தது. மக்கள் பாதிக்கப்படுவது, காயமடைந்து அங்கவீனர்களாவது, இறப்பது, மருந்தில்லாமல் இறப்பது, மேலதிக சிகிச்சைக்கு அனுப்ப முடியாமல் அவர்கள் இறப்பது போன்ற சம்பவங்கள் எங்களுடைய மனதை – மற்ற வைத்தியர்களுடைய மனதை – மிகவும் பாதித்துக் கொண்டிருந்தது.

கேள்வி: நீங்கள் வாகரையிலும், வன்னியிலும் – இரண்டு இடங்களிலும் கடைசி வரை பணிபுரிந்த மருத்துவர் என்ற வகையில் – சிங்கள அரசாங்கம் எறிகணை வீச்சுக்கள், பல்வேறு விதமான வான்வழித் தாக்குதல்கள் மூலம் படுகொலை செய்தது ஒரு இனவழிப்பு என்று இருந்தாலும், இனவழிப்பிற்கு அப்பால் வேறு என்ன நோக்கம் இருந்தது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? அதாவது மக்களுடைய மனவுறுதியைக் குலைப்பது – இப்படியான நோக்கம் – அல்லது போராட்டத்தில் இருந்து அவர்களை விலக வைப்பது – இப்படியான எண்ணங்களோடுதான் இந்தத் தாக்குதல்களைச் செய்தார்கள் என்று கூறுவீர்களா?

பதில்: இலங்கையில் ஏற்பட்ட இந்த யுத்தம் வாகரையிலோ அல்லது முள்ளிவாய்க்காலிலோ ஏற்பட்டதல்ல. அதற்கு முன்பு கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக ஏற்பட்ட ஒரு யுத்தம். தமிழின அழிப்பிற்கான ஒரு யுத்தம். 83ஆம் ஆண்டு கலவரத்திலும், அதற்கு முன்பு கூட இந்தப் பிரச்சினை ஆரம்பித்திருந்தது. இது ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இந்த இனவழிப்பை, ஆயுதங்களால் மட்டுமல்ல, உணவுக் கட்டுப்பாடு, போக்குவரத்துத் தடை, மருந்துப் பொருட்களுக்கான தடை, எரிபொருட்களுக்கான தடைகளை விதித்து, எந்தவொரு அரசாங்கம் ஆட்சியில் வந்தாலும், அந்தத் தடைகள் – குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இனவழிப்பின் ஒரு உச்ச கட்டமாகத்தான் இந்த வாகரை, முள்ளிவாய்க்கால் பகுதியை நாம் பார்க்க வேண்டும்.

கேள்வி: ஆனால் இதன் மூலமாக அவர்கள் – அதாவது மக்களைக் கொல்ல வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கமாக இருந்ததா? அல்லது வேறு ஏதாவது அரசியல் நோக்கங்கள் – அதாவது கொல்வதன் மூலம் மக்களின் மனவுறுதியை உடைப்பது, போராளிகளிடமிருந்து மக்களைப் பிரிப்பது – இப்படியான நோக்கங்கள் இருந்திருக்கும் என்று கூற முடியுமா?

பதில்: பல நோக்கங்கள் இருந்திருக்கும். சாதாரணமாக ஒரு இடத்தில் இருக்கிற மக்களை அழிப்பது என்பது மட்டுமல்லாமல், அவர்களை இடம்பெயரச் செய்து அவர்களின் சொத்துக்களை அழிப்பது, அந்த மக்களை – இடம்பெயர்ந்த மக்களைக்கூட நீங்கள் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற மக்களை வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் வைத்து – அவர்களுடைய முகாம்கள் எல்லாம் மிகவும் இறுக்கமான முகாம்களாக, அந்த இடத்திற்கு வெளியில் இருந்து ஆட்கள் செல்ல முடியாது. முகாமிற்குள் உள்ள மக்கள் வெளியில் – மருத்துவ தேவைகளுக்குக் கூட தாங்கள் நினைத்த மாதிரி வர முடியாத ஒரு இறுக்கமான சூழலில் அடைத்து வைத்திருந்து, பல்வேறு விதமான – எங்களுடைய கலாச்சாரம், போன்ற எல்லா வகையிலான தடைகளையும் அங்கு ஏற்படுத்தி, கலாச்சார சீரழிவுக்குக் கூட ஏற்படுத்தக் கூடிய மாதிரித்தான் யுத்தம் நடந்தது. உயிரிழப்பிற்கு அப்பால் மக்களுடைய சொத்துக்கள், கல்வி வளர்ச்சி எல்லாமே அந்த யுத்தம் மூலம் அழித்திருந்தார்கள்.

கேள்வி: இந்த இறுதி யுத்தம் நடைபெற்ற பொழுது புலம்பெயர் தேசங்களில் போராட்டங்கள் நடைபெற்றன – போரை நிறுத்த வேண்டும் என்று கோரி. அதேநேரத்தில் சில வெளிநாட்டுத் தலைவர்கள், அமைச்சர்கள், இராஜதந்திரிகளும் இலங்கைக்கு சென்று போர்நிறுத்தம் பற்றிக் கதைத்திருந்தார்கள். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. உண்மையில் நீங்கள், அங்கிருந்த மருத்துவர் என்ற வகையிலேயே சர்வதேசத்திடம் அந்த நேரத்தில் நீங்கள் எதனை எதிர்பார்த்திருந்தீர்கள்?

பதில்: நான் மட்டுமல்ல, எங்கள் மக்கள் அனைவருமே ஒரு சமாதான முன்னெடுப்பொன்று ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தோம். அந்த மக்கள் இடப்பெயர்விலிருந்தும், அழிவிலிருந்தும் மக்களைச் சர்வதேசம் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தும், பாதுகாப்பார்கள் என்றும் நம்பியிருந்தார்கள். இந்த மக்கள் அனைவருமே சர்வதேசம் இதில் தலையிட்டு உடனடியாக எங்களுடைய மக்களைப் பாதுகாப்பார்கள், அல்லது ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள் அல்லது சமாதான முன்னெடுப்புக்களைச் செய்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

கேள்வி: அந்த கால கட்டத்திலே நடைபெற்ற புலம்பெயர்ந்த மக்களின் போராட்டங்களால் ஏதாவது பலன் கிடைக்கும் என்று நீங்கள் நம்பியிருந்தீர்களா?

பதில்: எங்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. நம்பிக்கையும் இருந்தது.  ஏதோ ஒரு வழியில் புலம்பெயர்ந்த மக்களுடைய போராட்டமென்றால் என்ன, வெளிநாடுகளின் – இந்தியா, அமெரிக்கா, இலண்டன் போன்ற நாடுகள் தலையிட்டு மக்களைப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கும், எங்களுக்கும் இருந்தது.

கேள்வி: இந்த சந்தர்ப்பதிலே இறுதி வரை எதையுமே சர்வதேசம் செய்யவில்லை என்ற பொழுது உங்களுடைய மனநிலை எப்படியிருந்தது?

பதில்: ஒரு கோபம் கலந்த ஒரு வெறுப்பு, அல்லது ஒரு ஏமாற்றம் எங்களுக்கு இருந்தது. ஆரம்பத்தில் கிளிநொச்சியில் இருந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களை இலங்கை அரசாங்கம் வெளியேற்றி விட்டது. சர்வதேச நிறுவனங்கள், சுயாதீனமாக இயங்கக்கூடிய பத்திரிகையாளர்கள் எவரையுமே அந்த இடத்தில் அனுமதிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு ஒரு அச்சம் இருந்தது. ஒரு சர்வதேச நிறுவனத்தையும் அனுமதிக்காமல், மக்களை அழிக்க – அழிப்பதற்கான திட்டத்தை ஆரம்பித்திலேயே மேற்கொண்டு விட்டார்கள். அப்பொழுது மக்களுக்கு அந்த அச்சம் மிகவும் கொடுமையாகத்தான் இருந்தது. ஏனென்றால் எல்லாரையும் அழிக்கப் போகின்றார்கள் என்ற எண்ணமும் அச்சமும் ஆரம்பத்தில் இருந்தே மக்களின் மனதில் இருந்தது. அதேநேரம் குறிப்பாக உங்களுக்குத் தெரிந்திருக்கும் 2009 ஆண்டு தை மாதம் இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் அந்தப் பகுதியில் மூன்றரை இலட்சம் மக்கள் இருந்த பொழுது, எண்பதுனாயிரம் மக்கள் மட்டும்தான் இருக்கின்றார்கள் என்ற ஒரு செய்தியை உலகத்திற்குக் கூறி, கிட்டத்தட்ட இரண்டரை இலட்சம் மக்களை அழிப்பதற்கான முயற்சியை ஆரம்பத்தில் இருந்தே மேற்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் சர்வதேச நாடுகளும் சரி, சர்வதேச நிறுவனங்களும் சரி அந்த உண்மையை எடுத்துக் கூறி மக்களைக் காப்பாற்றுவதற்குத் தவறிவிட்டார்கள்.

கேள்வி: இந்த இறுதி யுத்தத்திலே எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டார்கள், காணாமல் போகச் செய்யப்பட்டார்கள் என்ற சரியான புள்ளிவிபரங்கள் இல்லை. ஆனால் 146,000 பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்ற ஒரு கருத்து மன்னார் மறை மாவட்ட ஆயர் அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதேநேரத்திலே சில இடங்களிலே ஐக்கிய நாடுகள் சபை 40,000 பேர் இறந்தார்கள், 30,000 பேர் இறந்தார்கள் என்று கூறியது. ஒரு இடத்தில் – நான் சென்ற ஒரு இடத்தில் கூறினார்கள் – ஐ.நா.வின் ஒரு முன்னாள் அதிகாரி – 80,000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஒரு கருத்தைக் கூறியிருந்தார். அதாவது களத்தில் மாத்திரம் – முள்ளிவாய்க்கால் – வன்னிப் பகுதியில் நடந்த யுத்தத்தில் மட்டும். அதற்கு வெளியில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள் என்று தெரியாது – அதாவது முகாம்களுக்குச் செல்லும் பொழுது. ஆனால் 80,000 பேர் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா.வின் ஒரு உயர் அதிகாரி குறிப்பிட்டிருந்தார். அது ஒரு வெளியில் வராத சந்திப்பொன்று. உங்களுடைய கணக்கின் படி, நான் அதாவது இந்த 146,000 பேர் கணக்கைச் சொல்லவில்லை. வன்னியில் மட்டும் – வன்னியில் நடந்த எறிகணை வீச்சுக்கள், வான்வழித் தாக்குதல்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நீங்கள் கணிப்பிடுகிறீர்கள்?

பதில்: இது ஒரு சிக்கலான கேள்வி. புள்ளி விபரங்களை நாங்கள் ஆரம்பத்தில் இருந்து எடுப்பது சிரமமாக இருந்தது. வழமையாக, சாதாரண நிலையில் இறந்தவர்களை வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வருவார்கள். நாங்கள் அந்தப் பதிவுகளை மேற்கொண்டிருக்கலாம். இது ஒரு அசாதாரண சூழ்நிலை. போக்குவரத்து எல்லாம் சீர் இல்லாத ஒரு அசாதாரண சூழ்நிலையில் இறந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு வர முடியாத நிலை இருந்தது. காயமடைந்தவர்களை மட்டும் தான் ஏதோ ஒரு கஸ்ரப்பட்டு, தூக்கியோ, அல்லது மோட்டார் சைக்கிள் – வேறு ஒரு வாகனங்களில் கொண்டு வருவார்கள். இறந்தவர்களை கணிப்பிடுவதில் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே சிக்கல் இருந்தது. இது கிட்டத்தட்ட 40,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது பல்வேறு புள்ளிவிபரங்கள் ஊடாகத் தெரியப்படுத்தப்படுகின்றது. ஆனால் இந்தப் புள்ளிவிபரத்தை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்ற தேவை இருக்கின்றது. இதை இலங்கை அரசாங்கம், அரச அதிகாரிகள், அரசாங்கத் திணைக்களம், ஜீ.ஏ. – அவர்களுடைய பிறப்பு, இறப்புப் பதிவாளர்கள் மூலம் கணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இதைச் செய்வதன் மூலம் நாங்கள் சரியான புள்ளிவிபரத்தை எடுத்துக் கொள்ளலாம்.

கேள்வி: நீங்கள் வன்னியிலும், வாகரையிலும் – இரண்டு பகுதிகளும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்தவை – அங்கு கடமையாற்றியவர் என்ற வகையிலேயே, நீங்கள் முன்னெடுத்த மருத்துவப் பணிகளில், மக்களுக்கான பணிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய ஒத்துழைப்பு எவ்வாறாக இருந்தது?

பதில்: நான் வாகரையில் கடமையாற்றிய பொழுதும் சரி, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றிய பொழுதும் சரி, விடுதலைப் புலிகளினுடைய இராணுவ அணிக்கும், அவர்களுடைய மற்றப் பிரிவினருக்கும் எங்களுக்கும் நேரடியாக சம்மந்தம் இருப்பதில்லை. நான் மருத்துவர் என்ற ரீதியிலும், மருத்துவ அதிகாரி என்ற ரீதியிலும், விடுதலைப் புலிகளுடைய சுகாதாரப் பிரிவினர், மருத்துவப் பிரிவினர் எங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார்கள் – ஏற்படுத்திக் கொண்டிருப்பார்கள். அதனடிப்படையில் சில வைத்தியசாலைகளில், உதாரணமாக கிராமிய வைத்தியசாலைகளில், அல்லது பொது வைத்தியசாலைகளில் இருந்து கிராமங்களை நோக்கி இருக்கின்ற இடங்களில் அரசாங்க வைத்தியர்களை நியமிப்பதில் பற்றாக்குறை இருந்தது. அந்த பற்றாக்குறைகளில் விடுதலைப் புலிகளினுடைய சுகாதாரப் பிரிவின் வைத்தியர்கள், தியாக தீபம் திலீபன் மருத்துவமனையின் வைத்தியர்களின் உதவியுடன் அந்தக் கிராம வைத்தியசாலைகளை நாங்கள் செயற்படுத்திக் கொண்டிருந்தோம்.

விடுதலைப் புலிகளின் வைத்தியர்கள் அங்கு ஒவ்வொரு நாளும் தங்கி சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த வைத்தியசாலை எங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்த வைத்தியர்கள் விடுதலைப் புலிகளினுடைய சுகாதாரப் பிரிவினராக இருந்தார்கள். அதேபோல பல்வேறு சுகாதாரத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவர்களுடைய உதவி தேவைப்பட்டது. மிகவும் ஒத்துழைப்பைத் தந்தார்கள். சில இடங்களில் நாங்களும், அவர்களும் சேர்ந்து கூட வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் – நிர்ப்பந்தம் என்ன சந்தர்ப்பங்கள் இருந்தது – சூழ்நிலைகள். அது மிகவும் ஒரு ஆறுதலாகவும், உதவியாகவும் இருந்தது. எங்களுக்கு என்பதைவிட மக்களுக்குப் அது ஒரு பெரும் உதவியாக இருந்தது.

கேள்வி: மருந்துப் பொருட்கள் என்று வரும் பொழுது விடுதலைப் புலிகள் தங்களிடம் மருந்துப் பொருட்களையும் வைத்திருந்தார்கள் – தமக்கென்று, போராளிகளுக்கென்று. அந்த மருந்துப் பொருட்களின் விடயத்தில் எவ்வாறான ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைத்தது – விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து?

பதில்: எங்களிடமிருந்த மருந்துகளை வைத்துத்தான் எங்களுடைய சிறிய வைத்தியசாலைகள், கிராமிய வைத்தியசாலைகளை செயற்படுத்திக்  கொண்டிருந்தோம். விடுதலைப் புலிகளுடைய வைத்தியர்கள் அங்கு கடமையாற்றியிருந்தார்கள். ஆனால் சில மருந்துப் பொருட்களை இலங்கை அரசாங்கம் எங்களுக்குத் தர மறுத்து விட்டது. உதாரணமாக மயக்க மருந்து, இரத்தம் ஏற்றுகின்ற அந்த இரத்தப் பை என்று முற்று முழுதாகத் தர மறுத்து விட்டார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் – சில சந்தர்ப்பங்களில் – விடுதலைப் புலிகளினுடைய மருந்துகளை நாங்கள் வாங்கிப் பாவித்திருக்கிறோம்.

கேள்வி: நீங்கள் இறுதி வரை, அதாவது இறுதி நாட்கள் வரை முள்ளிவாய்க்காலில் பணிபுரிந்த ஒரு மருத்துவர். உங்கள் பொறுப்பில் ஒரு மருத்துவமனை இருந்தது என்று அறிகிறோம்.

பதில்: ஆம், நான் முல்லைத்தீவு மாவட்டப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளராகக் கடமையாற்றியிருந்தேன். அதேநேரம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒரு வைத்திய அதிகாரியாகவும் கடமையாற்றியிருந்தேன் – சாதாரண சூழ்நிலையில். 2009 ஆண்டு இடம்பெயர்வுக்குப் பின்னர் ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றியதோடு, அதற்குப் பின்பு புதுமாத்தளன், வலைஞர்மடம், பொக்கணை போன்ற வைத்தியசாலைகளுக்கு இடம்பெயர்ந்த பொழுது நான் வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றியிருந்தேன்.

கேள்வி: அப்படிப் பணியாற்றிய நீங்கள் எவ்வாறு கைதாகினீர்கள்? அதாவது என்ன அடிப்படையில் உங்களை – நீங்கள் யுத்தம் முடிகின்ற கட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லும் பொழுது – என்ன அடிப்படையில் உங்களைக் கைது செய்தார்கள்?

பதில்: எங்களை அவர்கள் உண்மையில் கைது செய்திருக்கக் கூடாது. நாங்கள் அரச வைத்தியர்கள். அரச வைத்தியசாலையில் வேலை செய்து கொண்டிருந்தோம். அதற்குரிய முறையான அனுமதிக் கடிதங்கள், முறையான அனுமதிகள் எல்லாம் எடுத்துத்தான் அந்த இடத்தில் நாம் வேலை செய்திருந்தோம். ஒவ்வொரு கிழமையும் அங்கே இருக்கின்ற நிலைமைகளைத் தெரியப்படுத்தி – எமது சுகாதாரத் திணைக்களத்திற்கு நாங்கள் தெரியப்படுத்துவோம் –  சிற்றுவேசன் ரிப்போர்ட் என்று. அந்த மருத்துவத் தேவைகள், மக்களினுடைய காயங்களின் எண்ணிக்கை, மக்களின் எண்ணிக்கை எல்லாம் அந்த சிற்றுவேசன் ரிப்போர்ட்டில் இருக்கும். நாங்கள் ஒரு இடத்தில் கூட அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தாமலோ, அல்லது அவர்களின் விதிமுறைகளை மீறி நாங்கள் எந்தவொரு வேலையும் செய்யவில்லை.

மே மாதம் 15ஆம் திகதி வைத்தியசாலைகள் எல்லாம் இயங்க முடியாத ஒரு கட்டம் வந்துவிட்டது. 12ஆம் திகதிக்குப் பிற்பாடு யுத்தம் மிகவும் அண்மையிலும், மிகவும் உக்கிரமாகவும் நடந்து கொண்டிருந்தது. 14ஆம் திகதி இரவிரவாக விடியும் வரைக்கும் கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் தங்கியிருந்த இடத்தில் தான் எல்லா வைத்தியர்களும், சில ஊழியர்களும் இருந்தோம். 15ஆம் திகதி நண்பகல் நான் காயமடைந்தேன். அந்த காயமடைந்த ஒரு சொற்ப நேரத்தில் அந்த இடத்திற்கு இராணுவம் வந்து விட்டார்கள். வந்து எங்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு கூறினார்கள். பின்பு நான் சிகிச்சைக்காக அவர்களுடைய இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். ஏனைய வைத்தியர்கள் அங்கிருந்து ஓமந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஓமந்தையில் வைத்து அவர்களைப் பிரித்து நான்காம் மாடிக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றிருந்தார்கள். என்னை கிளிநொச்சியில் உள்ள அவர்களுடைய ஒரு இரகசியமான இராணுவ ஜெயில் – அந்த இடத்தில் ஒரு கிழமைக்கு மேல் வைத்திருந்தார்கள்.

கேள்வி: என்ன குற்றச்சாட்டின் அடிப்படையில், என்ன சட்டத்தின் கீழ் உங்களை அப்படித் தடுத்து வைத்திருந்தார்கள்?

பதில்: நான் ஆரம்பத்தில் சொன்னது போல், எங்களுக்கு சட்டமோ – குற்றங்களோ நாங்கள் இழைத்திருக்கவில்லை. ஆனாலும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கீழ்தான் எங்களைக் கைது செய்திருந்தார்கள். அந்த விசாரணைகள் எல்லாம் சி.ஐ.டி, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரும், அதைச் சார்ந்தவர்களும் தான் எங்களிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்கள். எங்களுக்கு எதிரான எந்த விதமான குற்றங்களும் நேரடியாகச் சுமத்தப்படவில்லை. விசாரணையில் கூட எங்களுக்கு எதிரான ஒரு குற்றங்களைக் கூட அவர்களால் உறுதிப்படுத்தக் கூடிய மாதிரி இருக்கவில்லை. ஏனென்றால் நாங்கள் எல்லாத்தையும், எல்லா செயற்பாடுகள், நடைமுறைகள் அனைத்தையும் சுகாதாரத் துறையின் சட்ட திட்டங்களுக்கு அமையத் தான் செய்திருந்தோம்.

கேள்வி: நீங்கள் குறிப்பிட்ட அந்த கிளிநொச்சி இரகசிய முகாமில் உங்களிடம் என்ன விதமான கேள்விகள் கேட்கப்பட்டன?

பதில்: அங்கு வைத்து ஒரு கேள்வியும் என்னிடம் கேட்கப்படவில்லை. முதல் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த என்னை அவர்களுடைய வாகனத்தில் வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்புவதாகத் தான் கூறியிருந்தார்கள். அன்று இரவு கிளிநொச்சியில் இறக்கப்பட்டேன். அடுத்த நாள் அவர்களுடைய பஸ்சிலே கண்ணைக் கட்டி ஏற்றினார்கள். அதில் வேறு யாரும் இருந்தார்களா, எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஏற்றிய சொற்ப நேரத்தில் திரும்பி இறக்கி விட்டார்கள். இறக்கும் பொழுது ஒரு இராணுவ வீரர் மற்றவரிடம் கேட்கிறார் ‘ஏன் இறக்குகின்றீர்கள்’ என்று. அவர் சொன்னார் ஓடர் வந்திருக்கு செல்லுக்குள்ள போடச் சொல்லி. செல் என்றால் ஜெயில் கம்பிக்குள் போடச் சொல்லி. அதற்கு முதல் நாள் இரவு அவர்களுடைய ஒரு முகாம் – ஒரு காம்ப் – ஒரு வெளியிடத்தில் தான் நான் தங்கியிருந்தேன் – படுக்க வைக்கப்பட்டிருந்தேன் ஒரு அறையில்.

ஒரு கம்பிக் கூட்டுக்குள் விட்டிருந்தார்கள். அந்தக் கம்பிக் கூடு, ஒரு தற்காலிகமாக ஒரு அறை – சாதாரணமாக ஒரு வீட்டில் இருக்கின்ற அறைக்குள் மூன்று கம்பிக் கூடுகள் செய்யப்பட்டிருந்தன. மிகவும் ஒடுக்கமானது. அதற்குள் விடப்பட்டிருந்தேன். பின்பு நான் அவதானித்திருந்தேன் அந்த வீடு – அந்த முகாம் – தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் தங்களுடைய அலுவலகமாகப் பாவித்த அடையாளங்கள் – சுவரில் ஒட்டப்பட்டிருந்த அடையாளங்கள் மூலம் ஊகிக்கக் கூடியதாக இருந்தது. அதிலிருந்த எனக்கு காவலுக்கு இருப்பவர்கள், தங்களுக்கு மேலிடத்து அனுமதி வந்தால்தான் என்னை வவுனியாவிற்கு அனுப்ப முடியும் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். கிட்டத்தட்ட ஒரு கிழமைக்கு மேல் நான் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.

கடைசி நாள் – நான் நினைக்கிறேன் 8ஆவது நாள் இரவு – அந்த கொமாண்டர் – இராணுவ அதிகாரி வந்து, கடுமையான தொனியில் – அவர்களுக்கு ஆகலும் பிரச்சினையாக இருந்த விடயம் அங்கே நடந்த செய்திகளை சர்வதேச ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியதும், வெளிநாடுகளுக்கு தெரியப்படுத்தியதும் எங்கள் மீது ஆத்திரத்திற்குக் காரணமாக இருந்தது. அவர்களுடைய கதைகள் எல்லாம் ஏன் பேட்டி கொடுத்தனீர்கள், ஏன் சொன்னீர்கள் என்ற கோபம் தான் இருந்தது. அதனால் தங்களுக்கு ஆயுதம் ஏந்திப் போராடியவர்களை விட, செய்தி ஊடகங்களுக்கு உண்மைச் சம்பங்களைத் தெரியப்படுத்தியது தங்களுக்கு மிகவும் அசௌகரியங்களைத் தந்ததாகத்தான் அவர் கூறியிருந்தார்.

கேள்வி: நீங்கள் கூண்டு என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அது எவ்வளவு – ஒரு ஆள் இருந்து, படுத்துறங்கக் கூடிய அளவா, அல்லது மிருகங்களை அடைத்து வைத்திருப்பது போன்ற கூண்;டா?

பதில்: அது சாதாரண ஒரு அறையில் மூன்று கூடு என்றால், கிட்டத்தட்ட மூன்று அடி அகலம், ஏழு அடி நீளம், நிற்கக்கூடிய அளவுக்கு உயரம். அதற்குள் போய்ப் படுக்கத்தான் முடியும் – படுத்து எழும்பி வர முடியும். அதற்குள் இருந்து வேறு வேலைகளைச் செய்யக்கூடிய மாதிரி இருக்காது. கம்பிக் கூட்டுக்குக் கீழால் சாப்பாட்டுப் பிளேற் அனுப்பக் கூடிய மாதிரி ஒரு இடைவெளி இருந்தது. அதற்குக்குள்ளால் சாப்பாடு வரும். சாப்பிடலாம். மற்றைய தேவைகளுக்காகக் கதவைத் திறந்து அழைத்துச் செல்வார்கள் – முகம் கழுவுதவற்கு, குளிப்பதற்கு எல்லாம். அவர்கள் அந்தந்த நேரம் ஒதுக்கியிருப்பார்கள். அந்த நேரத்திற்குள் போய் எல்லாம் செய்ய வேண்டும்.

கேள்வி: உங்களுக்குத் திடீர் என்று ஏதாவது உடல் உபாதைகள் – உதாரணமாக இயற்கைக் கடன் கழிக்க வேண்டிய தேவை வந்தால் என்ன செய்வார்கள்?

பதில்: சொன்னால் கூட்டுக் கொண்டு போவார்கள்.

கேள்வி: இந்தக் கூண்டில் உங்களை அடைத்து வைத்ததன் நோக்கம் என்ன? அதாவது நான் கேட்பது, உங்கள் மீதான குற்றச்சாட்டல்ல. உங்கள் மனவுறுதியை உடைத்து, தங்களுக்குச் சார்பாக நீங்கள் கதைக்க வேண்டும், அல்லது இப்படித்தான் உங்கள் நிலைமை இருக்கப் போகின்றது என்று உணர்த்துவதற்காகச் செய்தார்கள் என்று நினைப்பீர்களா இதை?

பதில்: கிளிநொச்சியில் அடைத்து வைத்திருந்த பொழுது அவர்களுடைய நோக்கங்கள் எனக்கு ஆரம்பத்தில் ஒன்றும் புரியவில்லை. கடைசியாக அவர், 8ஆம் நாள் வந்து கதைத்த அதிகாரியின் கதையில் இருந்து நான் அறிந்து கொண்டது – அவர் சொன்னார் ஒரு கட்டத்தில் ‘உன்ரை நல்ல காலம் சண்டை முடிஞ்சிது. இல்லாட்டித் தெரிஞ்சிருக்கும்.’ அப்பொழுதுதான் நான் புரிந்து கொண்டேன், சில வேளை அவர்கள் என்னை, இந்தச் சண்டை முடியாமல் இருந்திருந்தால் என்னைச் சுட்டிருப்பார்கள் என்ற தொனி அவர்களுடைய பேச்சில் இருந்தது. உதாரணமாக சனல்-4 இல் ஆட்களைக் கொண்டு போய் சுடுவது போல் ஒரு சந்தர்ப்பம் என்னையும் கொண்டு போய் சுட்டிருப்பார்கள் என்ற தொனி அவரது பேச்சில் இருந்தது. அதனைத் தான் என்னால் ஊகிக்கக் கூடியதாக இருந்தது. சண்டை முடிந்ததால் அவர்களுடைய இந்த முடிவை மாற்றிக் கொண்டார்கள் என்று நினைக்கின்றேன்.

கேள்வி: ஆனால் சண்டை முடிந்த பின்னரும் பலரைப் படுகொலை செய்தார்கள். அதாவது சமரி எக்சிகியூசன் என்று சொல்லும் வகையில் படுகொலை செய்யப்பட்டார்கள். உங்களை, அதாவது இவ்வளவு உண்மைகளை வெளிப்படுத்திய உங்களை ஏன் அவர்கள் சுடவில்லை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

பதில்: அதற்கு இரண்டு, மூன்று காரணங்கள் இருக்கின்றது. நான் காயமடைந்த பின்பு என்னால் நடக்க முடியாமல் இருந்தது. என்னுடைய வைத்திய நண்பர்களும், மற்றும் ஊழியர்களும் – என்னைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் – இராணுவத்திடம் கையளித்த பின்பு அதனைப் பல இடங்களில் சொல்லியிருக்கின்றார்கள். தாங்கள் காயமடைந்த என்னைத் தூக்கிக் கொண்டு வந்து இராணுவத்திடம் ஒப்படைத்திருக்கிறோம் என்ற செய்தியைச் சொல்லியிருந்தார்கள். அதேநேரம் இந்த வைத்தியர்களை – வன்னியில் வேலை செய்த வைத்தியர்களை – இலங்கை அரசாங்கம் தடுத்து – விசாரணைக்காக தடுத்து வைத்திருக்கின்றது என்ற செய்தி, உலகத்திற்கும், சர்வதேச நிறுவனங்களும் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய அழுத்தங்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் என்னை கிளிநொச்சியில் ஒரு கிழமைக்கு மேல் தடுத்து வைத்திருக்கின்ற பொழுது, நான் அங்கே இருக்கின்றேன், தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றேன் என்ற செய்தியை இலங்கை அரசாங்கம் யாருக்குமே சொல்லவில்லை – எங்களது குடும்பத்தினருக்கும் சரி, சர்வதேச நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்தவில்லை. நான் நினைக்கிறேன் யுத்தம் முடியாமல் இருந்திருந்தால், அல்லது அவர்களுடைய முடிவில் மாற்றம் வராமல் இருந்திருந்தால், என்னை அவர்கள் சுட்டு விட்டு, காயத்தால் இறந்து விட்டார் என்றோ, அல்லது கொண்டு வரும் பொழுது யுத்தத்தின் அடிப்படையில் இரண்டு பேருக்குமான சண்டையில் இறந்திருப்பேன் என்று ஒரு பொய்யை அவர்கள் சொல்லியிருப்பார்கள்.

(நான்காம் மாடிக்கு மாற்றப்பட்ட பொழுது தான் எதிர்கொண்ட அனுபவங்களை அடுத்த இதழில் விபரிக்கின்றார் மருத்துவர் ரி.வரதராஜா)

நன்றி: ஈழமுரசு

« PREV
NEXT »

No comments