Latest News

February 27, 2016

தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி ஆட்சிக்குத் தயார்! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
by admin - 0

நாம் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்ட்டி ஆட்சி முறைக்குத் தயாராக உள்ளோம். அச் சமஸ்ட்டி ஆட்சி முறையானது மத்தியில் தேசங்களின் கூட்டும் மாநிலத்தில் சுயாட்சியும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைதல் வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுத்துள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக நடாத்திய வருடாந்த மாநாடு இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் சிவன் கோவில் வீதியில் அமைந்துள்ள இளம் கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற, இம் மாநாட்டில் பலவேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 01

இரண்டுதேசங்கள் இணைந்த ஒருநாடு

வடக்கு கிழக்கை பாராம்பரிய தாயகமாக கொண்ட தமிழ் மக்கள் தனித்துவமான மொழி, பொருளாதாரம், கலாசாரம் என்பவற்றைக் கொண்டிருப்பதனால் ஒரு தேசமாக உள்ளனர். 

ஒரு தேசத்திற்குரிய மக்களுக்கு பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையும், தனித்துவமான இறைமையும் உண்டு. 

மக்கள் கூட்டம் என்பது சிறுபான்மை இன மக்களையும், தேசமாக உள்ள மக்களையும் குறிப்பதால் தமிழ் மக்களின் அரசியல் அந்தஸ்த்தினை கேள்விக்குட்படுத்தக் கூடிய வகையில் மக்கள் கூட்டம் என அழைப்பது பொருத்தமற்றது. 

தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதற்கான ஆணையை 1956ம் ஆண்டு தொடக்கம் எமது மக்கள் வெளிப்படையாக வழங்கி வருகின்றனர். தேசம் என்ற அந்தஸ்த்தினை அவர்கள் இதுவரை விட்டுக் கொடுக்கவில்லை. 

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் மறுபக்கத்தில் சிங்கள தேசத்தின் செயற்பாடுகள் பேரினவாதத்தின் உச்சத்திற்குச் சென்றுள்ளது. 

இந்நிலையில் தமிழ் மக்கள் தாம் ஒரு தேசம் என்ற அந்தஸ்த்தை கைவிடுவதானது சிங்கள தேசத்திற்குள் தமிழ்த் தேசத்தை கரைப்பதற்கு தமிழ் மக்கள் விரும்பி ஒப்புதல் வழங்கும் செயற்பாடாக அமையும். 

கனடாவில் கியூபெக் மாகாணத்திலுள்ள பிரெஞ்சு மொழி பேசும் மக்களும், ஸ்பெயினில் ஹத்தலோனியா மக்களும்,பாஸ்க் இன மக்களும், ஐக்கிய இராச்சியத்தில் இஸ்கொட்லாந்துமக்களும் தாம் ஓர் தனித் தேசம் என்ற அடிப்படையில் தமது அரசியலை முன்னெடுக்கின்றனர்.

தமிழ்த் தேசத்தின் இருப்பும் அதன் பாதுகாப்பும் தேசம் என்ற அங்கீகாரத்தை பெறுவதன் மூலமே உறுதி செய்யப்படும்.

எனவே அரசியல் தீர்வானது தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்டு இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற அடிப்படையில் அமைய வேண்டும். அந்த இலக்கை நோக்கி எமது அரசியல் செயற்திட்டங்களை முன்னெடுப்போம். 

தீர்மானம் 2. 

அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படல் வேண்டும்

நீணடகாலமாக சிறீலங்கா அரசின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு,சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க தொடர்ந்து போராடுவோம்.

தமிழ் அரசியல் கைதிகள் மிலேச்சத்தனமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஸ்ரீலங்கா அரசின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 2015 செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அரசும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானம் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்படல் வேண்டும் எனக் கூறுகின்றது.

இந்தக் கொடுர சட்டமானது சர்வதேச நியமங்களுக்கும், அடிப்படை மனித உரிமை கோட்பாடுகளுக்கும் எதிரானது. இச் சட்டத்தின் கீழேயே தமிழ் அரசியல் கைதிகள் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக சிறைகளில் அடைத்தும் வைக்கப்பட்டுள்ளனர். 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலேயே குறித்த சட்டம் நீக்கப்படல் வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா அரசானது அத்தீர்மானத்திற்கு மதிப்பளித்து குறித்த பயங்கரவாத தடைச் சட்டத்தை உடடினடியாக நீக்க வேண்டும். 

அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்ய வேண்டும். 

அரசியல் பழிவாங்கல் நோக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும். 

அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும், அவர்களது குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் நாம் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம். 


தீர்மானம் 03

காணாமல் போகச் செய்யப்பட்டவர்களது விவகாரத்தில் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணைகோரி தொடர்ந்து போராடுவோம்.

யுத்த சூழலைப் பயன்படுத்தி பல்லாயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள் யுவதிகள் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுக்களால் கைது செய்யப்பட்ட பின்னரும், இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரும் வலுக்கட்டாயமாக காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டமைக்கும், சரணடைந்தமைக்கும் நேரடிச் சாட்சியங்கள் உள்ளபோதும் கூட அவர்கள் பற்றிய தகவல்களை அரசு மறைத்து வருகின்றது. 

காணாமல் போனவர்கள் எவரும் உயிருடன் இல்லையென ஸ்ரீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 15-01-2016 அன்று யாழ்ப்பாணத்தில் வைபவமொன்றில்  உரையாற்றும்பேது கூறியிருந்தார். 

அரச படைகளினால் கைது செய்யப்பட்டவர்கள், அவர்களிடம் சரணடைந்தவர்கள் எவரும் உயிருடன் இல்லை எனில் அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பதனை ஸ்ரீலங்கா அரசு வெளிப்படுத்த வேண்டும். 

மாறாக பொறுப்பற்ற விதமாக எவரும் உயிருடன் இல்லை எனக் கூறுவதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன் பிரதமரின் பொறுப்பற்ற கூற்றினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். 

காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான முழுப் பொறுப்பினையும் ஸ்ரீலங்கா அரசு ஏற்க வேண்டும்.  இவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மைகளை கண்டறியவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை நடாத்தப்படல் வேண்டும் என வலியுறுத்துகின்றோம். 

அதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்து போராடும்

காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்றும் மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள்ளும் துன்பங்களுக்குள்ளும் வாழ்கின்றனர். 

தமது இயலுமைக்கு மேலான சுமைகளை சுமக்க வேண்டியவர்களாக உள்ளனர். அவர்களால் அந்த சுமைகளை தாங்க முடியாது. தமிழ்ச் சமூகம் அதில் பங்கேற்க முன்வரவேண்டும்.  

தீர்மானம் 04

இன அழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பில் முழுமையாக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும். 

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் மக்களது உரிமைக்கும் நீதிக்குமான ஆயுதப் போராட்டம் இன அழிப்புச் செயற்பாட்டின் மூலம் ஸ்ரீலங்கா அரசினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

இப்போரில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் அங்கவீனமாக்கப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கான பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் தமிழ்த் தேசம் மீதான திட்டமிட்ட கட்டமைப்புசார் இன அழிப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இந்நிலையில் யுத்த காலத்தில் இடம்பெற்ற மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், இன அழிப்புக் குற்றங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றின் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க முடியும். 

எனினும் போர்க்காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் கலப்பு பொறிமுறை என்னும் பெயரில் உள்ளக விசாரணை பொறிமுறை ஏற்பாடு செய்யப்படுகின்றது. 

இயற்கை நீதிக்கு முரணான வகையில் குற்றவாளியே தான் செய்த குற்றங்கை விசாரிக்கும் உள்ளக விசாரணையை பொறிமுறையை நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம்.

சர்வதேச சமூகத்தின் கட்டுப்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்நாட்டிலுள்ள நம்பகத் தன்மையுள்ள தனிநபர்களை இணைத்து உருவாக்கப்படுவதாகவே கலப்பு பொறிமுறை அமையவேண்டும். 

ஆனால் இங்கு சிறீலங்காவின் நீதித்துறையும், சட்டத்துறையும் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என ஐ,நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரே சுட்டிக்காட்டிய பின்னரும்கூட ஸ்ரீலங்கா அரசின் பொறுப்பில் சில வெளிநாட்டு நீதிபதிகளை இணைத்து கலப்பு பொறிமுறை என்னும் பெயரில் உருவாக்கப்படும் விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது. 

இதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது. தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் இன அழிப்புக் குற்றங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை நடாத்தப்படல் வேண்டும். 

தீர்மானம் 05

யுத்தம் முடிந்த பின்னரும் தொடர்சசியாக மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார்  இன அழிப்புச் செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
 
தமிழ்த் தேசத்தின் தாங்கு தூண்களான நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் என்பன திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன. இச் சிதைப்பு நடவடிக்கைகள் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து மேற்கொள்ளப்படுகின்றது. தமிழ் மக்கள் ஒருதேசமாக இருப்பதனை சிதைப்பதே இதன் நோக்கமாகும். 

நிலப்பறிப்பு இதில் முக்கியமானதாகும் 1948இல் இருந்தே இந் நிலப்பறிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. திட்டமிட்ட விவசாய குடியேற்றம், சட்ட விரோத விவசாய குடியேற்றம், மீனவர் குடியேற்றம், வியாபாரக் குடியேற்றம், புனித பிரதேச குடியேற்றம், முப்படையினருக்கான குடியேற்றம், தமிழர் பிரதேசங்களை சிங்கள பிரதேசங்களுடன் இணைத்தல் என பல்வேறு வகைகளில் இக் காணிபறிப்பு மேற்கொள்ளப்பட்டன. 

கல்லோயாத் திட்டம், அல்லைத்திட்டம், கந்தளாய் திட்டம், மொறவேவா திட்டம்,மகாதிவில்வெவ திட்டம், பதவியாத் திட்டம், வெலி ஓயாத்திட்டம், பாவற்குளத் திட்டம் என காணிபறிப்புத் திட்டங்கள் சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்டன. 

போரின் பின்னர் அரச காணிகள் மட்டுமல்ல, உறுதிகள் வைத்திருந்த தனியார் காணிகளும் இப்பறிப்புக்கு இலக்காகின. 

தமிழ் மக்களின் பொருளாதாரம் திட்டமிட்டு முடக்கப்படுகின்றது. பெரும்பான்மையின வர்த்தகர்களின் படையெடுப்பு, மீனவர்களின் படையெடுப்பு, நிதி நிறுவனங்களின் படையெடுப்பு, தொழிலாளர் படையெடுப்பு, என்பவற்றின் மூலம், பொருளாதார சிதைப்பு இடம்பெறுகின்றது. 

தமிழர் தாயகத்தில் கூட தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றது. தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்டிருந்தபோதும் கூட திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் அரச கருமங்கள் சிங்கள மொழியிலேயே இடம்பெறுகின்றன. 

தமிழ் காலாசரம் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றது. சிங்கள குடிமகன் ஒருவர் கூட இல்லாத பிரதேசங்களிலெலாம் பௌத்த விகாரைகள் முளைக்கின்றன. போதைப் பொருளுக்கு அடிமையாக்கும் செயற்பாடுகள் தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது. 

இவையனைத்தும் தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாதொழிப்பதற்காகவே திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன.  இவற்றைத் தடுத்து நிறுத்தி எமது தேசத்தின் இருப்பை பாதுகாக்க தொடர்ந்து ஜனநாயக வழியில் போராடுவோம்.

தீர்மானம் 06

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிலை கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா ஆயுதப் படையினரை வெளியேற்ற தொடர்ந்து குரல்கொடுப்போம்.

ஸ்ரீலங்கா அரசு தமிழர் தாயகத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக இலட்சக்கணக்கில் ஆயுதப் படைகளை நிறுத்தியுள்ளது. 

இவ் ஆயுதப் படைகள் தமிழ் மக்களின் வளமான நிலங்களை ஆக்கிரமித்துள்ளது. விவசாய நடவடிக்கைகளிலும், வர்த்தக நடவடிக்கைகளிலும்,ஈடுபடுகின்றது. மக்களின் அன்றாடக் கருமங்களிலும் தொடர்ச்சியாக தலையிடுகின்றது. 

யுத்தம் முடிந்து  6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கூட முன்னாள் போராளிகள் இயல்புவாழ்வுக்கு திரும்பி குடும்பத்தினருடன் நிம்மதியாக வாழ முடியாதவாறு உளவுத் துறையினரின் தலையீடுகள் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. 

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள ஆயுதப்படைகள் முழுமையாக எமது மண்ணை விட்டு வெளியேற வேண்டும்.

தீர்மானம் 07

மலையக மக்களின் உரிமைகளுக்காக நாம் இணைந்து குரல் கொடுப்போம். 

மலையக தமிழ் மக்கள் எமது உரிமைப் போராட்த்திற்கு பக்கபலமாக இருப்பவர்கள், தொடர்ந்தும் பக்க பலமாக செயற்பட்டு வருகின்றனர். 

மலையகத் தமிழ் இளைஞர்கள் பலர் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்து உயிர்த்தியாகங்களையும் செய்துள்ளனர். 

சக தேசிய இனம் என்ற வகையில் அவர்களது உரிமைகள் தொடர்பாக குரல் கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எமக்குண்டு. 

மலையக மக்கள் தமது அடையாளங்களை பாதுகாக்கவும், தம்மை ஒரு தனியான தேசமாக நிலை நிறுத்தவும், இறைமையை பேணவும், அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றனர். 

மலையக மக்களின் இந்தக் கோரிக்கைகளை நாம் முழுமையாக ஆதரிக்கின்றோம். அதற்காக அவர்களுடன் இணைந்து குரல் கொடுப்போம். 

தீர்மானம் 8

கிராமிய உழைப்பாளர்கள் எதிர்நோக்கும் சமூக வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நாமும் இணைந்து குரல் கொடுப்போம். 

கிராமிய உழைப்பாளர்கள் ஒரே நேரத்தில் தேசிய ஒடுக்கு முறைக்கும் சமூக ஒடுக்குமுறைக்கும், வர்க்க ஒடுக்குமுறைக்கும் உள்ளாகின்றனர். 

இவர்கள் தமிழ்த் தேசிய போராட்த்தின் அடிப்படை ஆதாரமாக விளங்கியவர்கள், போராட்டத்தின் சுமைகளை கடைசிவரை சுமந்தவர்கள், ஆயுதப் போராட்டம் அவர்களுக்கும் ஒரு வலிமை நிலையை கொடுத்தது. 

அப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அவர்களது வலிமை நிலை குறைந்துள்ளது. சமூகப் புறக்கணிப்பும் முன்னரை விட மேல் நிலைக்கு வந்துள்ளது. நிலப் பிரச்சினை, தொழில் வாய்ப்புப் பிரச்சினை என்பவற்றால் வாழ்வாதார நெருக்கடிகளும் தோன்றியுள்ளன. 

தமிழ் மக்களில் நிலமற்றவர்களாக இவர்களே அதிகம் உள்ளனர்.  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது அவர்கள் அரசியல் ரீதியாக வலிமை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். 

அவர்களுக்கான நிலங்களை பெற்றுக் கொள்ளவும்,அடிப்படை வாழ்வாதரத்தை பெற்றுக் கொள்ளவும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் சமத்துவமான நிலையை அடைவதற்கும் வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். 

தீர்மானம் 09

வறுமையிவலிருந்தும், போர் பாதிப்புக்களிலிருந்தும் மீட்டெடுக்க உழைப்போம்.

போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு வறிய நிலையில் வாழும் குடும்பங்களினதும், போரினால் அவயங்களை இழந்த எமது மக்களினதும்  வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும், மாணவர்களின் கல்வியை மேம்படுத்தவும் புலம்பெயர்ந்த மக்களின் உதவியுடன் செயற்திட்டங்களை முன்னெடுப்போம்.

தீர்மானம் 10

தமிழ்ப் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராடுவோம். 

அண்மைக்காலமாக தமிழ்ப் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், கொலைகள் அதிகரித்து வருகின்றன. இவை தமிழ் மக்கள் காலம் காலமாக பின்பற்றி வந்த ஒழுக்க விழுமியங்களுக்கு முற்றிலும் முரணானவை. 

இத்தகைய பாலியல் கொடுமைகளில் இருந்தும், கொலைகளிலிருந்தும் பெண்களையும் சிறுமிகளையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றினைந்து போராட வேண்டும். சட்ட,சமய கல்வி சார் வல்லுனர்களையும் பொது மக்களையும் இணைத்து இவற்றை தடுத்து நிறுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்போம். 

பெண்கள் என்ற காரணத்திற்காக தமிழ் பெண்கள் அனுபவிக்கும் அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும், பாராபட்ச நடவடிக்கைகளுக்கும் எதிராக எமது கட்சி குரல் கொடுக்கும். 

கட்சியின் மகளிர் அணி பெண்களை விழிப்பூட்டவும் அரசியல் மயப்படுத்தவும் அமைப்பாக்கவும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்.

தீர்மானம் 11

புதிய அரசியல் யாப்பில் தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரத்தை கோரும் யோசனைகளை முன்வைப்போம்.

ஸ்ரீலங்கா அரசானது புதிய அரசியல் யாப்பு ஒன்றிற்கான யோசனைகளை மக்களிடமிருந்து கோரியுள்ளது. புதிய யாப்பு என்பது ஏற்கனவே தாயரிக்கப்பட்டடுள்ளதாகவும், வெறும் கண்துடைப்பிற்காகவே மக்களது கருத்துக்கள் கோரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் அடிபடுகின்றது. 

எனினும் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரத்தை வலியுறுத்தும் யோசனைகைள முன்வைப்போம். 

இனப் பிரச்சினை என்பது தமிழ்த் தேசம் அழிக்கப்படுவதனால் ஏற்பட்ட பிரச்சினையே. அதாவது தமிழ்த் தேசத்தின் தாங்கு தூண்களான நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம் அழிக்கப்படுவதனால் ஏற்பட்ட பிரச்சினையே.
 
இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ்த் தேசத்தை திட்டமிட்ட அழிவிலிருந்து பாதுகாப்பதாக அமையவேண்டும். அதன் பிரகாரம் அரசியல் தீர்வு என்பது தமிழ்த் தேசத்தை அங்கீகரிப்பதாக இருக்க வேண்டும். 

நாம் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்ட்டி ஆட்சி முறைக்குத் தயாராக உள்ளோம். அச் சமஸ்ட்டி ஆட்சி முறையானது மத்தியில் தேசங்களின் கூட்டும் மாநிலத்தில் சுயாட்சியும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைதல் வேண்டும்.

« PREV
NEXT »

No comments