இலங்கையில், நீதிமன்றத்தை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளரான கலபொட அத்தே ஞானசார தேரரை பெப்ரவரி 9ஆம் அதிகதிவரை விளக்கமறியலில் வைக்க ஹோமாகம மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்தியாளர் பிரசாத் எக்னலிகொட காணாமல் போனது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்த போது, நீதிமன்ற வளாகத்தில் வைத்து பிரசாத் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியதாக ஞானசார தேரர் மீது முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனையடுத்து இன்று நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்பட்ட போது விளக்கமறியலுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தேரருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை வழக்கறிஞர் ஒன்றியம் சட்ட மா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை கேட்டிருந்தது.
இதற்கிடையே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது நீதிமன்றத்துக்கு வெளியே ஒருவிதமான பதற்ற நிலைமை உருவானது.
சில பௌத்த பிக்குகளும் ஆதரவாளர்களும் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றபோதிலும் போலிஸார் அவர்களை தடுத்தனர்.
No comments
Post a Comment