இலங்கை- மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய முதல் டி20 போட்டி பல்லேகலயில் நேற்று இரவு நடந்தது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.
இதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு தொடக்க வீரர்களாக குஷால் பெரேரா, டில்ஷான் களமிறங்கினர்.
இருவரும் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். பெரேரா 40 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அசத்திய டில்ஷான் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அவர் 37 பந்தில் 56 ஓட்டங்கள் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து வந்த ஷேஹான் ஜெயசூரிய தன் பங்கிற்கு அதிரடி காட்டி 22 பந்தில் 36 ஓட்டங்கள் (2 சிக்சர், 2 பவுண்டரி) எடுத்து வெளியேறினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த சந்திமால், மேத்யூஸ் ருத்ரதாண்டவம் ஆடினர். இதனால் அணியின் ஓட்டங்கள் 200ஐ தொட்டது.
20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்கள் எடுத்தது.
சந்திமால் 19 பந்தில் 40 ஓட்டங்களும் (2 சிக்சர், 4 பவுண்டரி), மேத்யூஸ் 13 பந்தில் 37 ஓட்டங்களும் (4 சிக்சர், 2 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், பொல்லார்ட் 2 விக்கெட்டையும், நரைன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து 216 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடக்க வீரர் பிளட்சர் (57) அரைசதம் கடந்து நம்பிக்கை கொடுத்தார்.
ஆனால் அடுத்து வந்த சாமுவேல்ஸ் (10), ரசல் (16) நிலைக்கவில்லை. பிராவோ (24), பொல்லார்ட் (26) ஓரளவு ஓட்டங்கள் எடுத்தனர்.
இருப்பினும் வரிசையாக விக்கெட்டுகள் சரிந்ததால் அந்த அணி 19.5 ஓவரில் 185 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் இலங்கை அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பில், சேனாநாயக்க 4 விக்கெட்டுகளையும், சிறிவர்த்தன, மலிங்கா தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன் மூலம் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்று முன்னிலையில் உள்ளது.
No comments
Post a Comment