விடுதலை கோரி சிறைச்சாலைகளில் மீண்டும் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் வவுனியாவில் 13ஆம் திகதி ஹர்த்தால் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் சகல வர்த்தக நிலையங்களையும், வங்கி உட்பட அரச மற்றும் தனியார் அலுவலகங்களையும் மூடி இந்த ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
பேரூந்துகள், முச்சக்கர வண்டிகள், பொது சேவைகள் ஆகியவற்றின் சங்கங்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று ஞாயிறன்று பிற்பகல் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தனின் தலைமையில் அவரது வவுனியா அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஹர்த்தாலுக்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள் எம்.பி.நடராஜ், ம.தியாகராஜா, க.சிவனேசன், வடமாகாண போக்குவரத்து அமைச்சரின் இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், வர்த்தக சங்க உபதலைவர் கே.லியாகத் அலி, வர்த்தக சங்க பொருளாளர்மா.கதிர்காமராஜா, தினச்சந்தை செயலாளர் நந்தன், வரியிறுப்பாளர் சங்கத் தலைவர் செ.சந்திரகுமார் மற்றும் பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
No comments
Post a Comment