துருக்கியால் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானத்தின் விமானிகளில் ஒருவரை சிரியாவின் இராணுவத்தினர் மீட்டுள்ளதாக பிரான்ஸிற்கான ரஷ்யத் தூதர் தெரிவித்திருக்கிறார்.
யுரோப் வன் வானொலிக்குப் பேட்டியளித்த ரஷ்யத் தூதர் அலெக்ஸாண்டர் ஆர்லோவ், அந்த விமானி சிரியாவில் உள்ள ரஷ்ய விமான தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
எனினும், இந்தத் தகவலை மாஸ்கோவில் உள்ள அதிகாரிகள் இன்னும் உறுதிசெய்யவில்லை.
சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்திருந்த மற்றொரு விமானியும், விமானிகளை மீட்பதற்காக சென்ற ஹெலிகாப்டரில் ரஷ்யாவின் மரைன் படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டுவிட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
தாங்கள் துருக்கிக்கு ஆதரவாக இருப்பதாக, துருக்கி உறுப்பினராக இருக்கும் நேட்டோ அமைப்பின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
'முதுகில் குத்தும் வேலை'- புடின்
விமானம் தங்களின் வான் பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததாக துருக்கி தெரிவித்திருக்கிறது. ஆனால், சிரியாவின் வான் பரப்பில் தங்களுடைய சுகோய்- 24 ரக விமானம் பறந்துகொண்டிருந்தபோது, இன்னொரு விமானத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையாலேயே அது தாக்கப்பட்டிருப்பதாக ரஷ்யாவின் அதிபர் புடின் குற்றம்சாட்டியிருக்கிறார்.
விமானத்தின் மீதான தாக்குதலை 'முதுகில் குத்தும் வேலை' என்று அதிபர் புடின் தெரிவித்திருக்கிறார்.
துருக்கியுடன் ராணுவ நடவடிக்கைகளை முறித்துக்கொண்டிருக்கும் ரஷ்யா, வான்-பாதுகாப்பு கட்டமைப்பு பொருத்தப்பட்ட கப்பல் ஒன்று மத்திய தரைக்கடல் பகுதியில் இனி நங்கூரமிட்டிருக்கும் என்றும் சிரியாவில் இருக்கும் ரஷ்யப் படையினருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய இலக்குகள் அழிக்கப்படும் என்றும் ரஷ்ய பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது.
சிரியாவில் வான் தாக்குதல்களை நடத்தும் விமானங்கள் இனி போர் விமானங்களின் பாதுகாப்புடன் செல்லும் என்றும் ரஷ்ய ராணுவம் தெரிவித்திருக்கிறது.
No comments
Post a Comment