Latest News

October 18, 2015

தேசியக் கொடியோடு பயணிக்க வேண்டியவள்... இன்று தனிமையோடு போகிறாள்!!!!
by அகலினியன் - 0

தேசியக் கொடியோடு பயணிக்க வேண்டியவள்...
இன்று தனிமையோடு போகிறாள்!!!!

அடிமைப்பட்டுக் கிடந்த 
தமிழர் தேசத்தில்
அடுப்பூதும் பெண்கள் கையிலும்...
ஆயுதம் ஏநத வைத்த 
தலைவன் வழியில்...
அடிமை விலங்கினை 
உடைத்தெறியவென 
பூக்களும்....
போர்களம் போனவர்களில்
நீயும் ஒருத்தி..!

வலி சுமந்த 
வீர மங்கையான நீ....
போர்க்களத்தில்....
வரி சுமந்த
புலியாகிப் புயலானாய்.!!
அரசியல் சாணக்கியத்திலும்
தென்றலாய்... பூவாய்...
உலா வந்தாய்..!!

இன்றோ...
நீ இறந்தநாள் என...
அனைத்துத் தமிழரும்
தமிழர் ஊடகங்களும்
கண்ணீர் அஞ்சலியோடு
அழுது தீர்க்கின்றனர்..!!!

ஆனாலும்.....
உனது சரித்திரம் அப்படியல்ல...

தலைவன் நிழலில்...
தலைவனின் பார்வையில்...
தளபதிகள் போராளிகளோடு
மக்கள் கடலில் சங்கமித்து
வானலைகளில்
விடுதலைக் கீதங்கள் 
இசைக்கப்பட்டு...
தேசமெங்கும் 
மஞ்சள் சிகப்புக் கொடிகள்
அலங்கரிக்க...
தோரணங்கள் தொங்க விடப்பட்ட
வீதிகளில் - தமிழீழ 
தேசியக் கொடி போர்த்தப்பட்ட
உன் புனித
வித்துடல் பயணிக்க...

தெருவெல்லாம் காத்திருக்கும்
குழந்தைகள் முதல்
முதியவர்கள் வரை
தம் உறவொன்று
வீரமரணம் எய்தியதாக...
உன் புனித வித்துடலை
கண்ணீரோடு 
மலர் மாலைகள் சாத்தி
வணங்கிக் கொள்ள...

தமிழீழ தாகத்தினைத் தாங்கி
தமிழர்களின்...
நினைவுகளைச் சுமந்து
"புலிகளின் தாகம்
தமிழீழத் தாயகம்" என 
துயிலும் இல்லத்தில் 
இராணுவ மரியாதையோடு
வீரச்சாவாய்....
விதைக்கப்பட்டிருக்க வேண்டிய 
உன் புனித வித்துடல்,

இன்றோ....
சாதாரண சாவாய்...
எதுவமற்று
வெறும் சடங்குகளோடு
தீயினில் சங்கமித்து
வெறும் சாம்பலாகிப் போனதே.!!!

வீர வரலாறாக...
வீர வணக்கத்தோடு...
உயர் பதவி நிலையோடு...
கல்வெட்டுகளிலும்
சரித்திரப் பக்கங்களிலும்
பதிக்க வேண்டிய உன்னை...

இன்றோ....
சூனியத்தில் இருந்து 
சாபங்களை வேண்டி
வெறும் கண்ணீர்
அஞ்சலிகளோடு
கோழைகளாக.....
கையாலாகாத நிலையில்
வெட்கித்து நின்று - வெறும் 
அஞ்சலி மட்டுமே செய்து 
கண்ணீரோடு கதறுகின்றோம்.!!!

வீரச்சாவாய்...
வீர வரலாறுகளுடன்
விதைக்கப்பட வேண்டிய
உன் புனித வித்துடல்...

இன்று...

தீயினில் சங்கமாகி
சாம்பலாகிப் போனாலும்...
தமிழர்களாகிய நாம்
நெஞ்சமெல்லாம் சுமந்து
உனக்கான கல்லறை அமைத்து
வீர வரலாறுகளாய்....
உன் வரலாற்றுப் பக்கங்களையும்
உன் நினைவுகளையும்
எழுதி... எழுதியே...
வீரவணக்கம் செலுத்துவோம்!!!!

« PREV
NEXT »

No comments