உறவுக்கூடுகள் கலைந்து போனது!
ஈழத்தெருக்களில்
முழங்கிய உன் குரல்
அடங்கிப்போய் அமைதியாய்
கிடக்கின்றது.
உறவுக்கூடுகள்
கலைந்து போனதால்...
கொடிய நோய் வந்த
செய்தி எமக்கு தெரியாமல்
உரிமை சிறகொடிந்த
தோழிகளாய் நாம்
தொலைந்து
தொலை தூரமாகிப் போனோம்.!!
நேற்றைய காற்று
சாவு செய்தியை
காவி வந்தது.!!
எம் இனம் எங்கனும்
கலகலப்பிழந்தது
ஏற்க மறுத்தது மனது.!!
ஏற்றுக்கொண்டது நியதி
ஈழப்பெண்களின் வீரம்சொல்லி
நீ பாடிய தெருக்களில்
உன் தீரம் சொல்லி
கூவிட முடியா
வாயடைத்து நிற்கின்றோம்
உலகத்தமிழ் இனமே
ஊமையாய் அழுகின்றது
உண்மைகள் தெரியாது..!!
No comments
Post a Comment