Latest News

October 25, 2015

ஜெனிவா தீர்மானம் இலங்கைக்கு ஆபத்து என்கிறார் மஹிந்த!
by Unknown - 0

இலங்கை தொடர்பில் ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கைக்கு மிகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அந்தத் தீர்மானத்தின் பல பத்திகள் மிகவும் ஆபத்தானவை என அவரது அறிக்கை கூறுகிறது.

அந்தத் தீர்மானத்தின் ஆறாவது பத்தியின் அடிப்படையில், போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஒரு புதிய சட்ட முறைமையை ஏற்படுத்த அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்றும் இதில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோர் பங்குபெற வழி செய்யப்படுகிறது எனவும் கூறும் அவரது அறிக்கை, இதன் மூலம் நாட்டிலுள்ள குற்றவியல் நீதிவிசாரணை முறைமைக்கு இணையாக, சமாந்தரமாக மற்றொரு புதிய முறையை ஏற்படுத்தப்படுகிறது என்றும், அது நாட்டுக்கு பெரும் ஆபத்தை உண்டாக்கும் எனவும் கூறுகிறது.

வெளிநாட்டு நிதி உதவியுடன் விசாரணை பொறிமுறைகள் செயற்படும் என்று ஐநா தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதையும் ராஜபக்ஷ கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கும் எதிரான போரை இடையில் நிறுத்த முயற்சித்த வெளிநாடுகளின் நிதியுதவியில் நடத்தப்படும் விசாரணைகளில் எவ்வாறு நீதி கிடைக்கும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது தலைமையிலான அரசாங்கமே மேக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவை அமைத்து, ஆயுத மோதல்களில் சிறந்த அனுபவம் உள்ள பல வெளிநாட்டு வல்லுநர்களிடமிருந்து எழுத்துமூலமான கருத்துக்களைப் பெற நடவடிக்கைகளை எடுத்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரணகம ஆணைக்குழு பரிந்துரைகளை ராஜபக்ஷ பரிந்துரைகள் என்று காண்பித்து தமது கருத்தை திணிக்க சிலர் முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஆனால் அந்த வல்லுநர்கள் தெரிவித்த கருத்துக்களை ஐ நா மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத் தொடருக்கு முன்னர் அதன் உறுப்பினர்களுக்கு அனுப்ப போதிய அவகாசம் இருந்தும், வேண்டுமென்றே தற்போதைய அரசு அதைச் செய்யவில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

விசாரணை நடைமுறைகளில் வெளிநாட்டு விசாரணையாளர்களை பயன்படுத்துவது உள்நாட்டு சட்ட நிபுணர்களை அவமானப்படுத்துவதாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நடைமுறைகள் அனைத்துமே போரில் வெற்றி பெற்றவர்களுக்கு தண்டனை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ஒரு திட்டமே எனவும் தனது அறிக்கையில் மஹிந்த கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments