இனவழிப்பின் ஊடாக தமிழர் தேசத்தினை மகிந்த அரசு ஆக்கிரமித்ததன் இராணுவ வெற்றியினை, அரசியல் வெற்றியாக்க மைத்திரி தலைமையிலான சிறிலங்காவின் புதிய அரசாங்கம் முனைவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக இடம்பெறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாதாந்த அரசவைக் கூட்டத்திலேயே இக்கருத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் முன்வைத்துள்ளார்.
அனைத்துலக அரங்கில் சிறிலங்காவின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தினையும் துடைப்பதற்கும், அனைத்துலக அரங்கில் சிறிலங்கா தனிமைப்படுத்தப்படுவதில் இருந்து சிறிலங்காவை காப்பாற்றிக் கொள்வதற்கும், தேர்தல்களை மூலோபாயமாக கையாண்டு தேசிய அரசாங்கத்தினை சிங்கள அரச கொள்கை வகுப்பாளர்கள் அமைத்துக் கொண்டுள்ளார்கள் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக மகிந்த ராஜபக்ச அடைந்த இராணுவ வெற்றியினை, அரசியல் வெற்றியாக நிலைநிறுத்த மைத்திரி தலைமையிலான சிறிலங்காவின் புதிய அரசாங்கம் முனைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள அரசின் இத்தகைய மூலோபாயங்களும், அனைத்துலக சக்திகளின் நலன்களும் சந்திக்கின்ற இக்காலம், சவால் மிகுந்ததாக தமிழர்களுக்கும், தமிழர் தேசத்துக்கும் அமைகின்றதென தெரிவித்த அவர், இதனை நாம் மிகுந்த விழிப்போடு அணுகுவதோடு, தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தினை பல்வேறு தளங்களில் விரிவுபடுத்தி முன்னெடுக்க வேண்டியுள்ளதென தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment