தமிழரசுக்கட்சியின் தலைமையின் முடிவை தாண்டி வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் ஐ.நா மனிதவுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள பயணமாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் அவரது பயண திட்டத்தையடுத்து ஐ.நா மனிதவுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள மாகாண சபைகளுக்கு அங்கீகாரம் இல்லை என வடமாகாண சபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். முன்னதாக வடமாகாணசபையே தீர்மானம் நிறைவேற்றி அனந்தி சசிதரனை ஐ.நா மனிதவுரிமை மாநாட்டிற்கு அனுப்பியிருந்த நிலையில் சி.வி.கே. சிவஞானத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை மாநாட்டிற்குச் செல்லும் வட மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் தனக்கு இதுவரை உத்தியோக பூர்வமாக விண்ணப்பங்கள் எதனையும் வழங்கவில்லை. அத்துடன் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு மாகாண சபைகளுக்கு அதிகாரம் கிடையாது. வேண்டுமானால் அவர்கள் தனிப்பட்ட முறையில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மனிதவுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன் தனது சட்டவாளர்கள் சகிதம் அங்கு செல்லவுள்ள நிலையில் மறுபுறம் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோரும் அங்கு செல்லவுள்ளனர். அனந்தி அதற்கான அனுமதியினையும் பெற்றுவிட்டதாக தெரியவருகின்றது.
No comments
Post a Comment