வவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி உயர்தர மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் காரணமாக பாடசாலை அதிபர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தற்போது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருந்த வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி குணசேகரம் திவ்வியா வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகில் இருந்த பொதுக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து இடம்பெற்ற விசாரணைகளின் போது மாணவியால் எழுதி வைக்கப்பட்ட கடிதம் பொலிசாரால் மீட்கப்பட்டது. குறித்த மாணவி கல்விப் பொதுசாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சித்தி பெறாத நிலையில் குறித்த பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளார். தற்போது பரீட்சைக்கான அனுமதி அட்டை பாடசாலைக்கு வந்த போதும் குறித்த பாடசாலை அதிபர் அதனை வழங்கவில்லை.
இதனால் மனவிரக்தி அடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்கப்பமடாமையே தற்கொலைக்கு காரணம் என மாணவி கடிதத்தில் எழுதியுள்ளார்.
சடலத்தை பார்வையிட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிட்டு அதன் பின் மாணவி கிணற்றில் குதித்தமையால் நீரில் முழ்கி மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் குறித்த பாடசாலை அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment