Latest News

August 31, 2015

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நடத்தப்படவுள்ள போராட்டம் -முன்னணி அழைப்பு
by admin - 0

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நடத்தபப்டவுள்ள போராட்டம் தொடர்பாக கலந்துரையாட தாயகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம்!

தமிழ்மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலைக் குற்றங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் எந்த வடிவிலானதொரு உள்ளக பொறிமுறையூடான விசாரணை மூலமும் நீதி கிடைக்கப்போவதில்லை.

மாறாக மேற்படி குற்றங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஒன்றின் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் தமக்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியும். 

இம்மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத்தொடரில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் உள்ளக பொறிமுறை ஒன்றினூடாக விசாரணை நடாத்தபடுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றினை கொண்டுவருவதற்கான முயற்சிகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. 

அதன் காரணமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச விசாரணை பொறிமுறையை வலியுறுத்துவதற்குப் பதிலாக உள்ளகப் பொறிமுறையை வலியுறுத்தக்கூடும் என்ற அச்சம் தமிழ்மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவ்வாறு நடைபெறுமாயின் அச்செயற்பாடானது குற்றவாளியே தான் செய்த குற்றங்களை விசாரிக்க கோரும் இயற்கை நீதிக்கு முரணான நடவடிக்கையாக அமையும். 

இந்நிலையில் ஸ்ரீலங்கா அரசு தமிழ்மக்கள் மீது புரிந்த சர்வதேச குற்றவியல் சட்ட மீறல்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச நீதிமன்ற விசாரணை நடாத்தப்படல் வேண்டும் என்பதனையும் எந்த வடிவிலானதொரு உள்ளக பொறிமுறை மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை என்பதனையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டிய அவசர தேவை அனைத்து தமிழ்மக்களுக்கும் உண்டு. 

சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்தைக் ஈர்க்கும் வகையிலான கையெழுத்துப் போராட்டம் மற்றும் கவனயீர்ப்பு போராட்டத்தினையும் முன்னெடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல் 02-09-2015 புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் இல43, 3ம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் இடம்பெறவுள்ளது. மேற்படி கலந்துரையாடலில்அனைத்து பொது அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள்மாணவர் அமைப்புக்கள் மற்றும் ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு கோருகின்றோம். 

நன்றி.


கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 

செல்வராசா கஜேந்திரன் 
பொதுச்செயலாளர்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
« PREV
NEXT »

No comments