புலம்பெயர் இலங்கையர்களை நாட்டுக்குள் மீண்டும் வரவழைப்பதும், அவர்களுக்கான வாக்குரிமையை வழங்குவதும் சிக்கலான விடயமாகும். இலங்கைக்கு வெளியில் வாழும் இலங்கையர்களை மீண் டும் நாட்டுக்குள் வரவழைக்கும் போது நாட்டின் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தெரிவித்தனர்.
எமது எதிர்கால அரசாங்கத்திலும் புலம்பெயர் இலங்கையர் தொடர்பில் ஆராய்ந்தே நடவடிக்கை எடுப்போம் எனவும் ஐ.ம.சு.மு.வின் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த கட்சியின் ஊடகப்பேச்சாளர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நல்லாட்சியை உருவாக்குவதாகக் கூறியே ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை அமைத்தது. ஆனால் இந்த அரசாங்கம் முழுமையாக ஏமாற்று நடவடிக்கைகளை மட்டுமே செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வைத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆதரவை பெற்றுக்கொண்டுள்ளனரே தவிர, நேரடியாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் ஆதரவு வழங்கவில்லை. அதேபோல் இப்போதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவை வைத்துக்கொண்டே ரணில் மக்களிடம் வாக்கு கேட்கின்றார். ஆகவே மக்களை ஏமாற்றும் செயற்பாட்டினை ரணில் விக்கிரமசிங்க முதலில் கைவிடவேண்டும்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைமை இன்று பிச்சைக்காரி கர்ப்பமானதைப்போல் ஆகிவிட்டது. தனக்கு ஒருவேளை உணவு இல்லாத நிலையின் வயிற்றில் வளரும் பிள்ளைக்கும் உணவு கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படுவதைப்போல ஐக்கிய தேசியக் கட்சியும் இன்று தாம் சுயமாக ஆட்சியமைக்க முடியாது போயுள்ள நிலையில் யானையில் வேறு சிலரையும் ஏற்றிக்கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஊடகவியலாளர்களுக்கும் இன்று மஹிந்தவே பிரதான சிக்கலாக உள்ளார். அவரை இலக்கு வைத்தே அனைத்து விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால் இந்த நாட்டில் ஜனநாயக ரீதியில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திய இந்த நாட்டை அமைதியான நாடாகவும் ஊடக சுதந்திரத்தைப் பலப்படுத்திய தலைவரும் மஹிந்தவேயாவார். அன்று எமது ஆட்ச்சியில் இருந்த ஊடகச் சுதந்திரம் இன்று உள்ளதா என்பதை ஒவ்வொருவரும் தமது மனச்சாட்சியிடம் கேட்டுப் பார்க்கவேண் டும்.
மேலும் புலம்பெயர் இலங்கையர்களை நாட்டுக்குள் மீண்டும் வரவழைப்பதும், அவர்களுக்கான வாக்குரிமையை வழங்குவதும் சிக்கலான விடயமாகும். இலங்கையின் பிரஜைகள் பலர் இன்று தொழில் நிமித்தம் வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் யுத்த காலகட்டத்தில் புலம்பெயர்ந்த பலரும் உள்ளனர். ஆகவே இலங்கைக்கு வெளியில் வாழும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்குள் வரவழைக்கும் போது அவர்கள் தொடர்பில் சரியான தகவல்களை பெறவேண்டும். நாட்டின் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே பொதுத் தேர்தலின் பின்னர் அமையும் எமது அரசாங்கத்தில் நாம் அவர்களை மீண்டும் இணைந்துக்கொள்ளும் நடவடிக்கைள் தொடர்பில் ஆராய்ந்து முடிவுகளை எடுப் போம் எனக் குறிப்பிட்டார்.
No comments
Post a Comment