இலங்கையை எதிரான இரண்டாவது டி20 போட்டில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரையும் 2-0 என்று கைப்பற்றியது.
இலங்கை - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி கொழும்பில் நடந்தது.
இதில் இலங்கை அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் 2வது மற்றும் கடைசி டி20 போட்டி கொழும்புவில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பெரேரா மற்றும் தில்ஷான் முறையே 19 மற்றும் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய சொஹான் ஜெயசூர்யா அதிரடியாக விளையாடினார். ஒருபக்கம் வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினாலும், ஜெயசூர்யா சிறப்பாக ஆடினார். அவர் 40 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் சமர கபுகேதிரா அதிரடியில் இலங்கை 20 ஓவர்களுக்கு 172 ஓட்டங்களை எடுத்தது. கபுகேதிரா 2 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 48 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
இதையடுத்து. 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய முக்தர் அகமது மற்றும் அகமது செகத் விரைவில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த முகமது ஹபிஸ் தனது பங்கிற்கு 11 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்களுக்கு சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
எனினும் சாகித் அப்ரிடி அதிரடியாக ஆடினார். சிறப்பாக ஆடிய அப்ரிடி 1 பவுண்டி மற்றும் 4 சிக்ஸர் உட்பட 45 ஓட்டங்கள் எடுத்திருந்த போது சொஹான் ஜெயசூர்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனால் இலங்கையின் கை ஓங்கியது. இந்நிலையில் இறுதியில் களமிறங்கிய அன்வர் அலி இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலா பக்கமும் விரட்டியடித்தார்.
இதனால் ஆட்டம் பாகிஸ்தானின் பக்கம் திரும்பியது. அவர் 17 பந்துகளில் 3 பவுண்டரி , 4 சிக்ஸர் உட்பட 46 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இறுதியில் பாகிஸ்தான் 19.2 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 174 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் தொடரை கைப்பற்றியது.
No comments
Post a Comment