Latest News

June 16, 2015

அனைத்துமே பொய்யான குற்றச்சாட்டுகள்; மான நஷ்ட வழக்கு தொடர்வேன்- லதா ரஜினிகாந்த்
by Unknown - 0

யாருக்கும் நான் உத்தரவாதம் அளிக்கவில்லை.. எந்த பொய்யான ஆவணங்களையும் சமர்ப்பிக்கவும் இல்லை. எனக்கு எதிராக தொடர்ந்து மோசடிப் பிரச்சாரம் செய்து வரும் பைனான்ஸியர் அபிர்சந்த் மற்றும் அவர் மனைவி மீது மான நஷ்ட வழக்குப் போடவிருக்கிறேன், என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

இது குறித்து லதா ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: 

கோச்சடையான் படத்துக்காக 'ஆட் பீரோ' நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹார் என்கிறவரிடம் வாங்கிய ரூ. 14 கோடியே 90 லட்சம் கடனுக்கு நான் உத்தரவாதக் கையெழுத்துப் போட்டதாகவும், அதில் 8 கோடியே 70 லட்சம் ரூபாயை தயாரிப்பாளர் முரளி மனோகர் திரும்ப அளித்ததாககவும், மீதமுள்ள தொகையை தராமல் இழுத்தடித்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும், இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகமல் இருக்கு பொய்யான ஆவணங்களை அளித்து நீதிமன்றத்தில் தடை பெற்றதாகவும், அதற்காக என் மீது முதல் தகவலறிக்கையை பெங்களூர் போலீசார் பதிவு செய்துள்ளதாகவும் வெளியான செய்திகள் என் கவனத்துக்கு வந்தது.

இவை முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டுகள். என் மீதும் என் குடும்பத்தின் மீதும் அவதூறு பரப்பவும், குறுக்குவழியில் ஆதாயம் பெறவும் மேற்கொள்ளப்படும் முயற்சி. கோச்சடையான் கடனுக்காக நான் எந்த இடத்திலும் உத்தரவாதக் கையெழுத்துப் போடவில்லை. 

அபிர்சந்த் நஹர் மற்றும் அவர் மனைவி சஞ்சல் நஹர் ஆகியோர் கிரிமினல் வழியில் எனக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து ஆதாயமடைய கடந்த ஓராண்டாகவே முயற்சித்து வருகின்றனர். அவர்களின் நெருக்கடிக்கு நான் பணியாததால், மீடியா மூலம் விஷமத்தனமான பிரச்சாரம் மேற்கொண்டு என்னிடமிருந்து பணம் பெற முயற்சித்தனர். அந்த சூழலில்தான் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தின் மூலம், இந்த தவறான பிரச்சாரத்துக்கு தடை பெற்றேன். இந்தத் தடைக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 

நான் பொய்யான ஆவணங்களைக் காட்டி தடை உத்தரவு பெற்றதாக பிரச்சாரம் மேற்கொண்டனர். வாதாடினர். அவையும் எடுபடவில்லை. 2012-ம் ஆண்டிலேயே விதான் சவுதா காவல் நிலையத்தில் எனக்கு எதிராகப் புகார் கொடுத்தனர் அபிர்சந்தும் அவர் மனைவியும். அதுவும் தோல்வியில் முடிந்தது. அவர்கள் புகார்கள் மோசடியானவை எனத் தெரிந்து கொண்ட போலீசார், இருவரையும் எச்சரித்து அனுப்பினர். இதற்கிடையில் வழக்கு நடைபெறும் எல்லை பெங்களூருக்குட்பட்டது அல்லது, சென்னை என்பதால் அந்தத் தடையை பெங்களூர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது, ஆனால் கர்நாடக உயர்நீதி மன்றம் தீர்ப்பா எனக்கு சாதகமாக வழங்கியது (22.04.2015). 

அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது. நிலைமை இப்படி இருக்க, உண்மையான தகவல்களை மறைத்து, மோசடியாக சில விஷயங்களைச் சித்தரித்து எனக்கு எதிராக மீண்டும் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் புகார் கொடுத்து அதன் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அபிர்சந்த் நஹர், சஞ்சல் நஹர் இருவரின் நோக்கமும் செயலும் மோசடியானது. தவறான பணம் சம்பாதிக்கும் எண்ணம் கொண்டது. சட்ட விரோதமானதாகும். 

ஒரு பிரபலம் என்பதைப் பயன்படுத்தி என் மீதும் என் குடும்பத்தின் மீதும் அவதூறு பரப்பி நெருக்கடி தருவது சட்டப்படி குற்றம். இவர்களையும் இவர்கள் அவதூறுகளையும் நான் சட்டப்படி சந்திப்பேன். இருவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் சட்டப்படி தண்டனை பெறுவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளேன். என் நற்பெயருக்கு சேதம் ஏற்படுத்தியதற்கான இழப்பீட்டையும் பெறுவேன்." -இவ்வாறு லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

« PREV
NEXT »

No comments