Latest News

June 14, 2015

மாயமான விமானம் சீர்காழி அருகே கடலுக்குள் விழுந்ததா? தொடர்கிறது தேடுதல் வேட்டை!
by Unknown - 0

சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்று காணாமல் போன இந்தியக் கடலோரக் காவல் படையின் டோர்னியர் ரக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் இதுவரை விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கடலோரக் காவல் படைபினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக கப்பல் சீர்காழி அருகே கடலில் மூழ்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதை தற்போது கடலோரக் காவல் படை மறுத்துள்ளது.

ஆபரேஷன் ஆம்லா பயிற்சிக்காக வந்த விமானம் இது. சென்னையிலிருந்து சென்ற இந்த விமானம் நாகை அருகே திடீரென காணாமல் போய் விட்டது. கடந்த 8ம் தேதி இரவு விமானம் காணாமல் போனது. இதனால் விமானம் என்ன ஆனது என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது. விமானத்தைத் தேடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டன. விமானி வித்யாசாகர், கோ பைலட் சோனி, வழிகாட்டி சுபாஷ் சுரேஷ் ஆகியோர் என்ன ஆனார்கள் என்பதும் தெரியவில்லை. கப்பல்கள், படகுகள், மீனவர்கள், கடற்படையினர் என சகல விதத்திலும் தேடும் பணி நடந்து வந்தது. 

இந்த நிலையில், சீர்காழி அருகே கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 850 அடி ஆழத்தில் விமானம் உள்ளதாகவும், அந்த விமானத்தை தற்போது மீட்கும் பணி முடுக்க விடப்பட்டுள்ளதாவும் தகவல்கள் கூறின. இருப்பினும் இது கடலோரக் காவல் படை மறுத்துள்ளது. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருவதாக அது கூறியுள்ளது. இதுகுறித்து கடலோரக் காவல் படையினர் கூறுகையில், இதுவரை விமானம் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு கடற்படை கப்பலுக்கு மாயமான விமானத்தின் சிக்னலாக கருதப்படும் ஒரு சிக்னல் வந்துள்ளது. இருப்பினும் இது மாயமான விமானத்திலிருந்து வந்த சிக்னலா என்பது தெரிவில்லை. 

தற்போது ஐஎன்எஸ் சந்தியாக் போர்க் கப்பல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் கப்பலுக்குத்தான் மாயமான விமானத்தின் சிக்னல் எனக் கருதப்படும் சிக்னல் வந்து கொண்டுள்ளது. தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. பல்வேறு தரப்பினரும் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரை குறிப்பிடத்தக்க அளவிலான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments