Latest News

June 28, 2015

நண்டுக்கறி சாப்பிடலாம் வாங்க...
by admin - 0

நண்டுக்கறி சாப்பிடலாம் வாங்க...
----------------------------------------------------------

■ தேவையான பொருட்கள்:

● நண்டு - 500 கிராம் 
● பெரிய வெங்காயம் - ஒன்று 
● சிறிய வெங்காயம் - 5 
● பச்சை மிளகாய் - 5 
● பூண்டு - 5 பல் 
● கறிவேப்பிலை – 1 இறகு
● புளி – சிறிய தேசிக்காயளவு 
● இஞ்சி - சிறிது 
● சரக்கு மிளகாய்த்தூள்- 3 தேக்கரண்டி (உறைப்பு தேவைக்கேற்ப) 
● மஞ்சள்தூள் - சிறிதளவு
● பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி 
● கடுகு - சிறிதளவு
● மிளகு - சிறிதளவு
● வெந்தயம் - சிதளவு
● தேங்காய் - பாதி 
● எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு 
● உப்பு - தேவையான அளவு

■ செய்முறை:

1. நண்டைச் சுத்தம் செய்து, பெரிய நண்டாக இருந்தால் 4 துண்டுகளாக உடைக்கவும் சிறிய நண்டாயின் இரண்டாக உடைக்கவும். 

பெரிய கால்களை இரண்டாக முறிக்கவும். 
அவற்றை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும். (சிலர் மஞ்சள் பாவிப்பதில்லை)

2. பாதித் தேங்காயை துருவி ஒரு தட்டில் வைக்கவும்.

வெங்காயம், பச்சைமிளகாய், என்பனவற்றை நீட்டாக வெட்டி தனித்தனியாக வைக்கவும்.

உள்ளியை சிறுதுகள்களாக சீவிக் கொள்ளவும்.

இஞ்சியையும் சீவிக் கொள்ளலாம் அல்லது குத்திக் கொள்ளவும்.

3. தேங்காய், பெருஞ்சீரகம், மிளகு, ஆகியவற்றை ஒரு தாச்சியில் இட்டு தேங்காய்ப்பூ பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்திருக்கவும்.

3. தாச்சியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடேறியதும் அதில் கொஞ்சக் கடுகு, பெருஞ்சீரகத்தை போடவும். கடுகு வெடித்ததும் அதற்குள் கொஞ்ச வெந்தயம் போடவும். வெந்தயம் பொரிந்து சிவத்ததும் வெட்டிவைத்த பெரிய வெங்காயத்தையும், பச்சை மிள்காயையும், உள்ளியையும் போட்டு வதக்கவும். 

4. வெங்காயம் வதங்கி வந்ததும் அதற்குள் கழுவி வைத்த நண்டை போட்டு கிளறி வதங்க விடவும். கொஞ்சம் வதங்கி வந்ததும் அதற்குள் பழப்புளியைக் கரைத்து விடவும். அத்துடன் நண்டு அவிய தேவையான அளவு தண்ணீரையும் விடவும்.

5. அதற்குள் 3 தேக்கரண்டி சரக்கு மிளகாய்தூளும் (உறைப்புக்கேற்ப), தேவையான உப்பும், சீவி வைத்த இஞ்சியையும், வெட்டி வைத்த சின்ன வெங்காயமும் போட்டு கலக்கி மூடி அவிய விடவும். சிலர் வெட்டிய பச்சை மிள்காயை வதக்காது சின்ன வெங்காயத்துடன் சேர்த்து அவியப் போடுவார்கள். 

6. நண்டு அரை அவியல் அவிந்ததும் அதற்குள் நாம் வறுத்து வைத்த தேங்காய் வறுவலைப் போட்டு நன்கு கலக்கித் துளாவி திரும்பவும் கொதித்து அவிய விடவும். 

கறி வற்றி பிரட்டல் கறியாக வரும் போது கறிவேப்பிலையைப் போட்டு இறக்கி மூடிவிடவும்.

இப்போது நண்டுக் கறி ரெடி.

■ குறிப்பு:

சிலர் பழப் புளிக்கு பதிலாக தேசிக்காய் புளியும் விடுவார்கள்.

இன்னும் சிலர் கறிமுருக்கம் இலை சேர்ப்பார்கள்,

தேங்காய் பாலாகவும் சேர்க்கலாம். கறி தடிக்காது. பூவை வறுத்துப் போட்டால் கறி தடிக்கும், ருசியாகவும் இருக்கும்

நண்டு வாங்கும் போது பாரமான பெட்டை நண்டாக பார்த்து வாங்கவும்
« PREV
NEXT »

No comments