ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் நான்காவது தடவை அந்த முயற்சி வெற்றியளிக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்களா என வினவுவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மே 1ம் திகதி தான் முன்னெடுத்த போராட்டத்தால் ஜனாதிபதி பாதுகாப்பில் இருந்த 2000 பேரை அகற்றி புதியவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
62 லட்சம் மக்களின் தலைவரை பாதுகாக்க எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியை கொலை செய்ய மூன்று பேர் துப்பாக்கியுடன் வந்ததாகவும் நான்காவது தடவை அது வெற்றியளிக்கும் வரை இருக்காது சூழ்ச்சிக்கு எதிரான முன்னணி ஒன்றை அமைக்க அனுமதி கோரியுள்ளதாகவும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகை சூழ்ச்சி குறித்து பேசிய மக்கள் விடுதலை முன்னணி இன்று அமைதி காத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி கொல்லப்பட்டால் அல்லது மரணித்தால் நாட்டின் அதிகாரம் இரண்டு வாரங்களுக்கு பிரதமர் கையில் இருக்கும் என்றும் அதற்குள் பெரும்பான்மை ஆசனம் உள்ள ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னாள் தலைவரை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கும் என்றும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
தனதுக்கு நோய், வயது சென்றுவிட்டதாக ஜேவிபி.யில் சிலர் கூறுவதாகவும் தனக்கு இருக்கும் நோய் என்ன என்பதை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அநுரகுமார சொல்லும் கதைக்குப் பின்னால் யானைக் குட்டி ஒன்று இருப்பதாகவும் ரோஹண விஜேவீர உருவாக்கிய ஜேவிபி.யில் இன்று புரட்சியாளர்கள் இல்லை என்றும் யானையின் கழுத்தில் மணி கட்டி தொங்கவிடப்பட்டுள்ளதாகவும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜேவிபி.யின் தலைமைத்துவம் மீண்டும் வழங்கப்பட்டால் ஏற்கத் தயாரா என்று ஊடகவியலாளர் கேட்டபோது, எடுத்த வாந்தியை மீண்டும் உண்ணும் நபர் தான் இல்லை என சோமவன்ச பதிலளித்துள்ளார்.
No comments
Post a Comment