கனேடிய ஒன்ராறியோ மாநிலத்திற்கான கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவருக்கான கட்சித் தேர்தலில் போட்டியிடும் பற்றிக் பிரவுண் அவர்களது தமிழினப்படுகொலை தொடர்பிலான கருத்து நம்பிக்கை தருகின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே கனடியப் பாராளுமன்றத்தில் கருத்துரைத்திருந்த திரு.பற்றிக் பிரவுண் அவர்கள் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும்;, இலங்கைத்தீவில் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மோசமான மனித உரிமைகள் விவகாரத்தில் நம்பிக்கையான முன்னேறம் எதனையும் அடையவில்லை எனவும் புதன்கிழமை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பற்றிக் பிரவுண் அவர்களது கருத்து நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளதென கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி, கனேடிய அரசியற்பீடங்களில் இவர்போல் உள்ள வலுவான தலைவர்கள் மட்டத்தில், தமிழினப்படுகொலை விவகாரம் இனப்படுகொலை எனும் கோணத்தில் கவனம் பெற்றிருப்பது, பரீகார நீதிக்கான எமது போராட்டத்துக்கு எதிர்காலத்தில் உறுதுணையாக அமையுமெனத் தெரிவித்துள்ளார்.
பற்றிக் பிரவுண் அவர்கள் கடந்த வாரம் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலில் பங்கெடுத்து கருத்துக்களை வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.
No comments
Post a Comment