இது எமது அடையாளம் ! இதுவே நாளை எமக்கான அங்கீகாரம் என்ற முழக்கத்துடன் மே12 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் இருந்து தமிழீழத் தேசிய அட்டையினை வழங்கத் தொடங்கியுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிர்வாக தொழில்நுட்ப நடைமுறைகளை சீர்படுத்தும் நோக்கில் சில காலம் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த இதன்வழங்கல் தற்போது சரிசெய்யப்பட்டு www.tgtetencard.com இந்த இணைமூலம் இலகுவான முறையில் அனவரும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நா.தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கை :
ஈழத்தமிழர்கள் ஓர் தேசிய இனம் என்பதனையும், அவர்கள் ஓர் தேசத்துக்குரியவர்கள் என்பதனையும் அடையாளப்படுத்தும் ‘தமிழீழத் தேசிய அட்டை’, மே-12 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் முதல் மீள வழங்கப்பட்டு வருகின்றது என்பதனை அறியத்தருவதில் நாம் மகிழ்வடைகின்றோம்.
நிர்வாக தொழில்நுட்ப நடைமுறைகளை சீர்படுத்தும் நோக்கில் சில காலம் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த இதன் வழங்கல், தற்போது சரிசெய்யப்பட்டு www.tgtetencard.com என்ற இந்த இணையமூலம் இலகுவான முறையில் வழங்கப்படுகின்றது.
இழந்த தேசத்தினையும் இழந்த உறவுகளையும் நினைவு கூரும் இந்நாட்களில் தமிழீழத் தேசிய அட்டை எம்மையும் எமது தேசத்தினையும் பிணைக்கும் வகையில் முக்கியத்துவம் ஒன்றானதாகவுள்ளது.
போரின் ஒய்வுக்கு பின்னரான இலங்கைத்தீவில், தமிழர்களின் தாயக தேசத்தினை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா அரசுஈ தமிழர்களின் அரசியல் இருப்பினையும், அவர்களது தேசிய அடையாளங்களையும் பன்முனைகளிலும் மிக நுணுக்கமாக சிதைத்து வருகின்றது.
இலங்கைத்தீவின் தமிழர் தாயக பிரதேசத்தில் தமிழர்கள் ஓர் தேசிய இனம் என்ற அடையாளத்தினை சிதைத்து, தமிழர்களை ஓர் சிறுபான்மையினமாக அடையாளப்படுத்தி, இனநல்லிணக்கம் என்ற சொல்லாடல் ஊடாக, அனைவரும் ‘இலங்கையர்கள்’ என்ற கருத்துருவாக்கத்தின் ஊடான உள்ளுறுஞ்சும் சிங்கள பௌத்த பேரினவாத்தின் நுண்ணரசியல் தமிழர்கள் முன் பேராபத்தாக வளர்ந்து வருகின்றது. இதனைத் தெரிந்தும் தெரியாமலும் வெளியுலகம் அங்கீகரிக்கின்ற ஒர் ஆபத்து நிலையும் வளர்ந்து வருகின்றது.
இது ஈழத்தமிழ் மக்களது அரசியல் உரிமைப் போராட்டத்தினை சிறுமைப்படுத்துகின்ற செயற்பாடாகவுள்ளது.
தேசமாக , ஓர் (தமிழீழம்) தேசத்துக்கு உரியவர்கள் என்பதாக, ஈழத்தமிழ் மக்கள் ஓர் தேசிய இனம் என்தனை அடையாளப்படுத்தும் வடிவமாக தமிழீழத் தேசிய அட்டை அமைகின்றது. இது எதிர்காலத்தில் நமக்கான அங்கீகாரமாகவும் அமையும். இது போராட்டமும் ஆகும்.
ஈழத்தமிழர் அரசியலின் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ள தமிழீழத் தேசிய அட்டையினை புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழீழத் தாயக மக்களுக்கு உரியது மட்டுமல்ல, புலம்பெயர் தேசங்களின் எமது புதிய சந்ததியினருக்கும் உரித்தான ஒன்றாகவும் உள்ளது.
தமிழீழத்தவர்கள் என்ற அடையாளமே ஈழத் தமிழர் அரசியலின் இருப்பு, இதுவே தமிழீழ விடுதலையின் உயிர்ப்பு ! இவ்வாறு நா.தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அட்டை அறிமுக நிகழ்வில் (2011) பிரமர் வி.உருத்திரகுமாரன் உரைத்த கருத்துக்கள் :
No comments
Post a Comment