2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை நடத்திய மே தினக் கூட்டமே வெற்றிகரமான கூட்டமாக அமைந்தது. இலங்கையின் சகல இடங்களிலும் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான ஆதரவாளர்கள் சுயவிருப்பின் பேரில் இந்த மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சிறுபான்மையின மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாகவும் பேசப்படுகிறது.
இவ்வாறான நிலைமையில், நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சிரமமான காரியமல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து இந்த அரசியல் நிலைமையை எதிர்கொள்ள வேண்டும் என அவர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் இந்த அழுத்தங்கள் காரணமாக நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவருக்கு ஆதரவு வழங்கிய சகல தரப்பினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மகிந்த ராஜபக்ச சந்திப்பது என தீர்மானித்தார். ஜனாதிபதியாக தெரிவான பின்னர் தான் கட்சி சார்பற்ற நபராக இருக்க போவதாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய உறுதிமொழியை ஜனாதிபதி தற்போது மறந்து விட்டதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தியது தான் என்ற குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கவே ஜனாதிபதி தான் முன்னர் வழங்கிய உறுதிமொழியை மறந்து விட்டதாக சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார். அதேவேளை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி சபைகளின் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியை பெறும் எனவும் அது பொதுத் தேர்தலில் சுதந்திரக்கட்சிக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் காரணமாகவே கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற மைத்திரி – மகிந்த சந்திப்பின் போது உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை நீடிப்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி பலம் பெற்றுவருவது தொடர்ந்தால், மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு கடும் அழுத்தங்களை கொடுத்து, அதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் சந்தர்ப்பம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments
Post a Comment