அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டதன் பின்பு பாராளுமன்றம் கலைக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய பாராளுமன்றம் அமைக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
பத்திரிகைகளின் ஆசிரியர்கள், ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடனான விசேட சந்திப்பு நேற்றுக் காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் நடத்துவதற்கு இன்னும் முக்கிய விடயங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அரசியலமைப்புச் சபை அமைக்கப்பட வேண்டும். தேர்தல் மறுசீரமைப்புத் தொடர்பான 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 5 -7 வாரங்களினுள் தேர்தல் நடத்த வேண்டும் அதற்கமைய செப்டெம்பரில் புதிய பாராளுமன்றம் கூடுமென்றும் அவர் கூறினார்.
20 ஆவது திருத்தம்
தேர்தல் மறு சீரமைப்பு தொடர்பான 20 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான எனது பணி முடிவடைந் துவிட்டது. அமைச்சரவை அங்கீகாரத்துடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக கட்சிகளுடனான கலந்துரையாடல் நடந்து வருகிறது. இன்று பிற்பகலும் (நேற்று) கலந்து ரையாடப்படவுள்ளது.
விருப்பு வாக்குமுறையை ஒழிக்க வேண்டுமென்பதில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ஒருமித்த கருத்து இருக்கிறது. 20 ஆவது திருத்தத்தில் இது இல்லாமல் செய்யப்படும்.
விருப்பு வாக்கு முறையினால் தான் பாராளுமன்ற உறுப்பினர்களின் கெளரவமும், மதிப்பும், கவர்ச்சியும் இல்லாமல் போனது. இலஞ்சம், ஊழல், முறைகேடு, மோசடிகள் உருவாகுவதற்கும் விருப்பு வாக்கு முறையே காரணமாக இருக்கிறது.
உள்ளூராட்சி சபைக்கு போட்டி போடுபவர்களும் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபை தேர்தல்களில் போட்டி யிடுபவர்களும் பெருந்தொகை பணத்தை செலவிடுகின்றனர். வெற்றிபெறுவதற்காகக் கோடிக்கணக்கில் செலவிடுகிறார்கள். இதனால்தான் ஊழல் மோசடி உருவெடுக்கிறது. ஆகவே விருப்பு வாக்கு முறையை முற்றாக ஒழிப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி கூறினார்.
நடைபெறவுள்ள தேர்தல் புதிய முறையில் நடத்தப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “புதிய முறையில் தேர்தல் நடத்துவதாக இருந்தால் வாக்காளர்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்றாலும் பாராளுமன்றத்தில் 225 உறுப் பினர்களும் எடுக்கும் தீர்மானத்திற்கு அமைய எந்த தேர்தல் முறையில் தேர்தல் நடத்துவதென தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி பதிலளித்தார்.
இதேவேளை பொலிஸ் நிதி மோசடி பிரிவை இரத்துச் செய்வதற்கு தான் உறுதி அளிக்கவில்லை என்றும் ஆனால் அதில் உள்ள சில சரத்துக்கள் குறித்து பிரதமருடன் கலந்துரையாடப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் நிதி மோசடிபிரிவு அரசியல் கட்சி ஒன்றின் செயற்திட்டத்திற்கு இயங்குகிறது என்று எவரும் ஆதாரத்துடன் முறைப்பாடு செய்தால் அது குறித்து ஆராயப்படும் என்றும் ஆனால் தற் போதைய நிலைப்படி அதில் அரசியல் செயற்பாடு இல்லை என்பது புலப்படுவதாகவும் ஜனாதிபதி கூறி யுள்ளார்.
No comments
Post a Comment