கிளிநொச்சி, பரந்தனில் சிவபுரம் பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 15 வயதுடைய சிறுவன் ஒருவனை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு கைது செய்துள்ளது.
வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் பாதிக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்களைக் கையாளும் பொலிஸாருக்கு இரு வேறு சந்தர்ப்பங்களில் வழங்கிய வாக்கு மூலங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே இந்த சிறுவன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கேசரிக்கு தெரிவித்தார்.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட சிறுவன் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரை எதிர்வரும் ஜூன் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். எனினும் சந்தேக நபரின் வயதைக் கருத்தில் கொண்டு அவர் யாழ்.அச்சுவேலி சிறுவர் காப்பகம் ஒன்றுக்கு அனுப்பபட்டுள்ளதாகவும் மீண்டும் ஜூன் மூன்றாம் திகதி இது தொடர்பிலான வழக்கு விசரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது அவரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள கலவன் பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் 6 வயதான மாணவி ஒருவர் பாடசாலை விட்டு வீட்டுக்கு வர தாமதமானதை தொடர்ந்து அவரது தாயார் அது தொடர்பில் அம்மாணவியிடம் வினவியுள்ளார். அத்துடன் அம்மாணவியின் புத்தகப் பையை சோதனை செய்த போது அச்சிறுமி பாடசாலைக்கு அணிந்துச் சென்ற உள்ளாடை காணப்படவே நடந்தவற்றை வினவி அது தொடர்பில் கிளிநொச்சி, பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் முறைப்பாடுச் செய்துள்ளார்.
இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சிறுமியை உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் பணியில் இல்லாமை காரணமாக மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந் நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் சிறுமியை பரிசோதித்துள்ள நிலையில் அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் சிறப்பு பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், சந்தேக நபரை அவர்கள் தேடி வந்தனர். குறித்த தினம் பாடசாலை விட்டு அச்சிறுமி வீடு நோக்கி வரும் போது அப்பிரதேசத்தில் உள்ள மலசல கூடம் ஒன்றுக்குள் அச்சிறுமி அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அதனை பிறிதொரு சிறுமி அவதானித்துள்ளதாகவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ந்தும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் சந்தேக நபரைத் தேடி விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இச்சிறுமி கூட்டு பலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்கள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவை வினவிய போது.
இதற்கு பதிலளித்த உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர, குறித்த சிறுமி இரு வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளதகவும் அதில் பலரது பெயர்களைக் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ள சிறுவனின் வயது மட்டத்தை உடையவர்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
எனினும் அது தொடர்பில் விசாரணைகளில் இன்னும் உறுதியாகாத நிலையில் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டவரை மாத்திரம் கைது செய்ததாகவும் ஏனையவர்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது வரை பொலிஸ் விசாரணைகளில் அது கூட்டு பலியல் துஷ்பிரயோகம் என்பது உறுதி செய்யப்படவில்லை எனவும் பதிக்கப்பட்ட சிறுமியால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்த வயதுகளை உடைய சிறுவர்கள் வேறு சந்தர்ப்பங்களில் அச்சிறுமியை துஷ்பிரயோகம் செய்தனரா, அல்லது அதே சந்தர்ப்பத்தில் துஷ்பிரயோகம் செய்தனரா, அவர்களின் பெயரை அச்சிறுமி ஏன் தெரிவித்தார் போன்ற பல்வேறு விடயங்களை மையப்படுத்தி மிக சூட்சுமமாக இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்டவர் 6 வயதான சிறுமி என்ற ரீதியில் அவரிடம் மிக பக்குவமான முறையிலேயே இது தொடர்பில் பொலிஸார் தகவல்களைப் பெற்று வருவதாகவும் தனக்கு நேர்ந்தமை தொடர்பில் அச்சிறுமி எதுவும் அறியாததால் விசாரணைகள் அதற்கேற்றாற்போல் முன்னெடுக்கப்படுவதகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments
Post a Comment