அலபாமாவை சேர்ந்த பிரன்டி மெக்கிளார்திக்கு கடந்த மார்ச் 4 ஆம் தேதி குறை பிரசவத்தில் டிமோத்தி எலி தாம்சன் என்ற அதிசய குழந்தை பிறந்தான். ஆம். பிறக்கும்போதே மூக்கில்லாமல் பிறந்தான் தாம்சன்.
தனது அதிசய குழந்தை குறித்து உலகிற்கு தெரியப்படுத்த விரும்பிய தாய் பிரன்டி, செல்லக்குழந்தையின் புகைப்படத்தை பேஸ்புக்கில் போஸ்ட் செய்தார். ஏறத்தாழ 6 மணி நேரத்தில் 30000 ஷேர்களை குவித்து இண்டர்நெட் உலகையே அசரவைத்த தாம்சனின் புகைப்படம் சர்ச்சைக்குரிய வகையில் உள்ளதாக கூறி, அந்த புகைப்படத்தை நீக்கியது பேஸ்புக்.
இதனால் கோபமடைந்த பிரன்டி, முற்றிலும் அருவருப்பான விஷயங்களை பேஸ்புக்கில் நாள் முழுவதும் காணும் நிலையில், நான் ஏன் எனது மகனின் புகைப்படத்தை போஸ்ட் செய்யக்கூடாது என கேள்வி எழுப்பியதுடன், நான் எனது குழந்தையின் புகைப்படத்தை போஸ்ட் செய்வதை யாரும் தடுக்கமுடியாது என குமுறித்தள்ளினார். இதையடுத்து நீக்கப்பட்ட தாம்சனின் புகைப்படத்தை மீண்டும் போஸ்ட் செய்தது பேஸ்புக்.
பிறந்து 5 நாட்களே ஆன நிலையில், விரைவில் தாம்சனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. தாம்சனின் முகத்தில் நாசித்துவாரம் போல், இரு துளைகளை டிரில் செய்ய மருத்தவர்கள் திட்டமிட்டுள்ளனர். அப்போது தான் தாம்சன் வளர வளர அவன் மூச்சுக்காற்றை இழுத்து விட ஏதுவாக இருக்கும் என்பதால் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 197 மில்லியன் குழந்தைகளில் ஒரு குழந்தை தான் இவ்வாறு அரிதாக பிறக்க முடியும் என்று மருத்துவ உலகம் தெரிவித்துள்ளது. தாம்சனின் மருத்துவ சிகிச்சைக்காக 'கோ பண்ட் மீ' என்ற இணையதள பக்கம் மூலம் பணம் திரட்ட பிரன்டியின் குடும்ப நண்பர் வழிவகை செய்துள்ளார்.
யாரேனும் சிறிய அளவு பணம் அளித்தால் கூட தனது மகனின் மருத்துவ சிகிச்சைக்கு அது பேருதவியாக இருக்கும் என தெரிவித்துள்ள பிரன்டி, பண உதவி செய்ய முடியாதவர்கள் எனது மகன் குணமாகவேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் அதற்கு நான் நன்றி கூறுகிறேன் என கூறினார்.
நாமும் குழந்தை தாம்சன் குணமாக வேண்டும் என பிரார்த்திப்போம்...
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
No comments
Post a Comment