டளஸ் அழகப்பெரும போக்குவரத்து அமைச்சராக இருந்த சமயத்தில் ரயில் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பான தகவல்களை நிதி மோசடி ஒழிப்பு பிரிவு பெற்றுள்ளதாகவும் அதன்படி டளஸ் தஹம் குமார அழகப்பெரும விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்துரு மித்துரு திட்டத்தின் கீழ் வடக்கு ரயில் வீதி புனரமைப்புக்கு டென்டர் கோராமல் டளஸ் அழகப்பெருமவால் ஒப்பந்தம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் இந்த திட்டம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சு அல்லது ரயில் திணைக்களத்தின் கீழ் எவ்வித கணக்குகளும் வைத்திருக்கப்படவில்லை. ஆகவே திட்டத்திற்கு நிதி செலவிட்டது எவ்விதத்தில் என்று போக்குவரத்து அமைச்சு மற்றும் ரயில் திணைக்கள அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து நிதி மோசடி பிரிவுக்கு வாக்குமூலம் அளித்துள்ள அனைவரும் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் ஆலோசனைப்படி செயற்பட்டதாகக் கூறியுள்ளனர். தற்போதைக்கு கிடைத்துள்ள தகவல்படி முன்னாள் போக்குவரத்து அமைச்சரும் அவரது செயலாளரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர்.
இதேவேளை, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட 26 பேரை எதிர்வரும் 8ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment