Latest News

April 22, 2015

புதிய ஆட்சியில் 16 தமிழ் இளைஞர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதாகியுள்ளனர்!- அரியம் எம்.பி.
by admin - 0


புதிய அரசாங்கத்தின் ஆட்சியில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 16 இளைஞர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற எமது மக்கள் பாரிய முதலீடு செய்வதற்கு தயாராகவுள்ள போதும் அவர்கள் சுதந்திரமாக விமான நிலையத்தினால் வர முடியாத நிலையே இன்னும் காணப்படுகிறது என்றும் அவர் கூறினார் 

மட்டக்களப்பு ஆறுமுகத்தான்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு அவர் தொடரந்து உரையாற்றுகையில்! 

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்பு வடக்கு கிழக்கு மாகாணங்களில் என்ன மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என மக்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். புதிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தில் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் இரண்டு மாகாணங்களிலும் ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள், உயர்பாதுகாப்பு வலயங்களிலிருந்த காணிகளில் சில கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளன. 

நூறு நாள் வேலைத்திட்டத்தில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளை விடுதலை செய்ய வேண்டும் என நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தோம் அப்போது சிறையிலுள்ளவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கை மாத்திரம் நடைபெறுகிறது. 

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் புலம்பெயர்ந்து வாழ்ந்து நாடு திரும்பும் எமது உறவுகள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தடுக்கப்படுகின்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. புதிய அரசாங்கத்தின் ஆட்சியில் 16 இளைஞர்கள விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஒரு சிலர் மாத்திரமே விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். 

புலம்பெயர்ந்த மக்கள் இங்கு வந்து முதலீடு செய்ய முடியும் அதனை நாங்கள் வரவேற்கின்றோம் என புதிய அரசாங்கத்தினால் பல கோரிக்கை முன்வைக்கப்பட்டது. புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் நிதியை ஒதுக்குவதற்கு தயாராகவிருக்கின்ற போதும் சுதந்திரமாக விமான நிலையத்தினால் வரமுடியாத நிலையே காணப்படுகிறது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களிடம் வருகிறார்கள் வெற்றி பெற்ற பின்பு மக்களிடம் செல்வதில்லை என பலர் கூறுகிறார்கள். நாங்கள் மக்களிடம் செல்ல தயாராக இருந்தோம் அன்றைய சூழ்நிலை எங்களை தடுத்து விட்டது. 

2004 ஆண்டு நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்ட பின்பு நான்கு வடக்கு கிழக்கு மாகாண தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாத நிலையில் கொழும்பில் முடக்கப்பட்டோம். 

ஜோசப் பரராஜசிங்கம் ஐயா நத்தார் தினத்தில் தேவாலயத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார், மாமனிதர் ரவிராஜ் கொழும்பிலே வைத்து படுகொலை செய்யப்பட்டார். மாமனிதர் சிவநேசன் வன்னிக்குச் செல்கின்ற போது கொல்லப்பட்டார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌசல்யனுடன் வருகின்ற போது வெலிக்கந்தையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். 

உலகிலே ஒரே பாராளுமன்ற அமர்வில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை இழந்தது என்றால் நான் அறிந்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தான் இவ்வாறு உயிர்களைத் தியாகம் செய்து நாங்கள் தமிழ் தேசியத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றோம். 

ஆயுததாரிகள் ஜோசப் பரராஜசிங்கத்தை மாத்திரம் சுட முடியும். தமிழ் தேசியத்தை சுட முடியாது. ரவிராஜ் அவர்களை கொலை செய்தார்கள் தமிழ் தேசியத்தை கொலை செய்யவில்லை. சிவநேசனின் உயிரைப் பறித்தார்கள் தமிழ் தேசிய கொள்கையைப் பறிக்கவில்லை. அவர்கள் விட்டுச் சென்ற பணியினை நாங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். 

அடுத்த தேர்தலில் போட்டியிட பலர் பெயர் பட்டியல் தருகின்றார்கள். ஆனால் நாங்கள் போட்டியிடும் போது எவரும் முன்வரவில்லை. நாங்கள் துணிந்து நின்று இந்த மண்ணிலே தமிழ் தேசியத்தை வளர்த்தவர்கள். இன்று சமாதான சூழல் ஏற்பட்டதன் பின்பு வெளிநாடுகளிலிருந்து வேட்பாளர்கள் வருவதற்குத் தயாராகவுள்ளனர். 

2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் போராட்டம் மௌனித்தன் பின்பு வடகிழக்கிலே இருக்கக் கூடிய மக்கள் தமிழன் எவரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற மமதையில் முன்னாள் ஜனாதிபதி “நான் ஒரு கொடூர பயங்கரவாதத்தை இந்த நாட்டிலே அழித்துள்ளேன் 

இனிமேல் முழு இலங்கைக்குமான தலைவர் நான் தான்” என பேசினார். ஆனால் நீங்கள் எல்லாம் 2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்தீர்கள். எமது உன்னதமான போராட்டத்தை அழித்த மஹிந்த ராஜபக்சவிற்குப் பின்னால் நாங்கள் சென்றிருந்தால் படுவான்கரை மண் என்பது முற்றாக மாறியிருக்கும், கெவிளியாமடு சிங்கள மயமாகியிருக்கும், தாந்தா மலையிலே புத்தம் சரணம் கச்சாமி ஒலித்திருக்கும். 

2010ம்  ஆண்டுக்கு பின்பு வந்த அனைத்து தேர்தல்களிலும் வடக்கு கிழக்கு மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிரை ஆதரித்து எமக்கு பாரிய பலத்தினை ஏற்படுத்தியுள்ளீர்கள் இதனை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. 

தந்தை செல்வா அகிம்சை வழியில் போராடியுள்ளார் விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்தியிருகின்றார்கள் அவர்களைத் தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வந்திருகின்றது. ஆனால் மக்கள் அரசாங்கத்தின் பக்கம் இருக்கின்றார்களா? அல்லது அவர்கள் தனித்துவமான இனம் என்பதை வெளிக்காட்டுகின்றார்களா? என சர்வதேசமே அவதானித்துக் கொண்டிருக்கிறது. 

2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலினைத் தொடர்ந்து தமிழ் மக்களின் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அதிகபடியான வாக்குகளினை வழங்கியுள்ளார்கள் என்ற செய்தி ஐ.நா சபையிலே பாரிய இடத்தினைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் யாரை ஆதரிப்பது என்பதை தீர்மானித்த போதிலும் வடகிழக்கு மக்களுக்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்று அறிவித்த செய்தியை அந்த மக்கள் ஏற்று அதிகப்படியாக வாக்களித்துள்ளார்கள் என்ற செய்தியின் விளைவாக இன்று ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் இனப்படுகொலைக்கான தீர்வு கிடைக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்  என்றார்.

« PREV
NEXT »

No comments