பொதுநலன் கருதி எடுக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு தடையா என்று அப்படத்தின் தயாரிப்பாளரான இங்கிலாந்தின் லெஸ்லி உட்வின் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியை சேர்ந்த இளம்பெண் நிர்பயா கற்பழிப்பு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள் ஒருவனான முகேஷ் சிங்கிடம், திரைப்பட தயாரிப்பில் பல்வேறு விருதுகளை வென்ற லெஸ்லி உட்வின் பேட்டி கண்டார்.
அவனது பேட்டியுடன், பாதிக்கப்பட்ட நிர்பயா பற்றிய அவரது பெற்றோரின் சோகமயமான நினைவுகள், நிர்பயாவிற்கு கல்வி பயிற்சி தந்த இளைஞரின் கருத்துகள், நிர்பயா கற்பழிக்கப்பட்டதற்கு நீதி கேட்டு டெல்லியில் நடத்தப்பட்ட போராட்டங்கள் ஆகிய அனைத்தையும் தொகுத்து "இந்தியாவின் மகள்" என்ற பெயரில் ஆவணப்படமாக லெஸ்லி தயாரித்தார்.
இந்த ஆவணப்படத்தை நேற்றிரவு பி.பி.சி. தொலைக்காட்சி பிரிட்டன் மற்றும் இதர நாடுகளில் ஒளிபரப்பியது. இந்த ஆவணப்படம் தொடர்பாக பலத்த சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, இந்தியாவில் அதை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பொது நலன் கருதி எடுக்கப்பட்ட தனது ஆவணப்படத்திற்கு இந்தியா தடை விதித்துள்ளதற்கு லெஸ்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இந்தியா தனது காலை தானே சுட்டுக்கொண்டுள்ளது என்று காட்டமாக கூறினார். ஆவணப்படத்தை பார்க்காமலேயே எப்படி தடை விதிக்கலாம் என்றும் அவர் கேள்வியெழுப்பினார். ஜனநாயக நாடான இந்தியாவில் பொது நலன் கருதி எடுக்கப்பட்ட ஆவணப்படத்திற்கு தடை விதித்தது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Social Buttons