Latest News

March 13, 2015

பகீரதிக்கு பிணை, நாட்டைவிட்டு செல்லத்தடை
by Unknown - 0

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கடற்படை தலைவி என குற்றஞ்சாட்டப்பட்ட முருகேசு பகீரதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நோக்கிச் செல்லவிருந்த பகீரதியையும் அவரது எட்டு வயது மகளும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மூன்று மாதங்கள் விசாரணை செய்வதற்கும் அனுமதி  வழங்கப்பட்டருந்தது.    

இந்தநிலையில் சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகவும் இருப்பினும்  அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர். அதனையடுத்து பகீரதியை 2 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல உத்தரவிட்டார். 

எனினும் அவருக்கு வெளிநாடு செல்வதற்கான  அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. மேலும்  பகீரதி வசிக்கும் பிரதேச பொலிஸ் நிலையத்திற்கு வாரத்திற்கு ஒருமுறை சென்று கையொப்பம் இடுமாறும் நீதவான் பணித்துள்ளார். 

இதேவேளை, 1997 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டுவரை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த பகீரதி 2005ஆம்  ஆண்டில் பிரான்ஸ் சென்று திருமணம் முடித்திருந்தார். விடுமுறையைக் களிப்பதற்கு தனது 8 வயது மகளுடன் இலங்கை வந்து கிளிநொச்சியிலுள்ள அவரது பெற்றோருடன் ஒருமாதகாலம் தங்கி மீண்டும்  பிரான்ஸ் திரும்பும்போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
« PREV
NEXT »